ராஜஸ்தான், இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரமாக விளங்கும் இந்த இம்மாநிலத்தில் ஏராளமான கோட்டைகள், ராஜவம்சத்தினர் கட்டிய மாளிகைகள் போன்றவை ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. இவை தவிர இம்மாநிலத்தில் இருக்கும் தார் பாலைவனம் இதன் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று. பாலைவனம் இருப்பதனாலேயே இந்தியாவின் வறட்சியான மாநிலங்களில் ஒன்றான இங்கு இருக்கும் ஒரே மலை வாசஸ்தலம் என்றால் அது ஷிரோஹி மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மேல் அமைந்திருக்கும் மவுண்ட் அபு என்னும் நகரம் தான். பாலைவனத்தின் நடுவே இருக்கும் சோலையான இந்த மவுண்ட் அபுவில் என்னென்ன இடங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மவுண்ட் அபு:
பழங்கதை ஒன்றின் படி மவுண்ட் அபுவில் பிராமணர்கள் செய்த யாகத்தின் பயனாகவே ராஜபுத்திரர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனால் இன்றும் ராஜ புத்திரர்கள் இந்த மலையை புனிதமானதாகவே கருதுகின்றனர்.
ராஜஸ்தானில் இருக்கும் ஒரே மலைவாசஸ்தலமான இது கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லையில் அமைந்திருப்பதால் இங்கு பல நூற்றாண்டுகளாக இரண்டு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெரும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க இங்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மவுண்ட் அபு வனவிலங்கு சரணாலயம்:
இந்த மலையின் மேல் வனவிலங்கு சரணாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் சிங்கம் மற்றும் புலி வாழ்ந்த தடயங்கள் இங்கே உள்ளன. ஆனால் தற்போது அவை முற்றிலும் அழிந்து விட்டன. சிறுத்தை, சாம்பார் மான், கீரி என 250 மேற்பட்ட விலங்கின வகைகள் உள்ளன.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலையில் ஏராளமான ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள் உள்ளன. 1021ஆம் ஆண்டு கட்டப்பட்ட வசை கோயில் தான் இங்கிருப்பதிலேயே பழமையானதாகும். முற்றிலும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தில்வாரா ஜெயின் கோயில் அற்புதமான கட்டிடக்கலை அதிசமாக திகழ்கிறது. 14ஆம் நூற்றாண்டில் மேவாரின் ரானா கும்பாவால் கட்டப்பட்ட அச்சல்கார்க் கோட்டையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பாலைவன சோலையில் காதலர்களை ஈர்க்கும் சுற்றுலாத்தலமென்றால் அது நக்கீ ஏரி தான். இங்கே படகு சவாரியும் நடக்கிறது. ராஜஸ்தானில் படகு சவாரி செய்ய இந்த ஒரே இடம் மட்டும் தான் உள்ளதால் இங்கு எபோதும் கூட்டம் அள்ளுகிறது. மாலைநேரங்களில் செயற்கை நீர் ஊற்றுகளில் விதவிதமான வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது.
நாம் எத்தனையோ இடங்களில் படகு சவாரி செய்திருந்தாலும் பாலைவனத்தில் இருக்கும் குளத்தில் படகு சவாரி போவது நிச்சயம் புதுமையான அனுபவமாக அமையும். இந்த மவுண்ட் அபுவுக்கு வர செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் உகந்ததாகும்.
எப்படி அடையலாம் மவுண்ட் அபுவை?
மவுண்ட் அபுவுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் என்றால் அது உதைபுரில் உள்ள மகாராணா விமான நிலையம் ஆகும். அங்கிருத்து 207 கி.மீ தொலைவில் உள்ள மவுண்ட் அபுவை வாடகை டாக்ஸி மூலம் அடையலாம். ரயில் மூலம் எனில் 29கி.மீ தொலைவில் உள்ள அபு ரோடு ரயில் நிலையம் ஆகும். அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை கார் மூலம் இந்த மலையை அடையலாம். சாலை வழியாக அடையவேண்டும் என்றால் ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 509கி.மீ தொலைவில் இது அமைந்திருக்கிறது. அகமதாபாத் மற்றும் ஜோத்பூரில் இருந்தும் மௌன்ட் அபுவை 100-150 கி.மீ சாலைப்பயணத்தில் அடையமுடியும்.