இந்தியாவில் இருக்கும் மிக தொன்மையான மாநிலங்களுள் ஒன்று ஒடிசா மாநிலமாகும். வரலாற்று காலம் தொட்டே பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கும் இந்த மாநிலத்தில் தான் இந்தியாவின் தொன்மையான கோயில்களும் அமைந்திருகின்றன. மாபெரும் வரலாற்று பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கோயில்களுக்கு செல்லும் போது ஏற்ப்படும் அனுபவம் மெய்சிலிர்க்க வைப்பதாகும். வாருங்கள் தொன்மையான இந்த கோயில்களுக்கு பரவசமூட்டும் பயணம் ஒன்றை மேற்கொள்வோம்.
லிங்கராஜா கோயில்:
பழங்கால ஓடிசாவின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயில்களில் முக்கியமானது ஒடிசா தலைநகரான புபநேஸ்வரில் அமைந்திருக்கும் லிங்கராஜா கோயிலாகும். 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலின் மூலவராக சிவா பெருமான் வீற்றிருக்கிறார்.
Photo: BOMBMAN
அழகிய சிற்பங்களும் கலைநயம் நிறைந்த இக்கோயில் கோபுரம் 160 அடியில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர் அனுமதிக்கப்படுவதில்லை. புபனேஸ்வர் நகரின் மையத்தில் அமைந்திருப்பதால் இதனை அடைவது மிக எளிது.
முக்தேஸ்வரர் கோயில்:
லிங்கராஜா கோயிலை போன்று பிரம்மாண்டமானது இல்லை என்றாலும் நுட்பமான சிற்பங்களை கொண்டுள்ளது. இந்த கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள கல்லால் ஆன அழகிய அலங்கார வளைவுகள் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள 8 இதழ் கொண்ட கற்றாமரையும் மிகப்பிரபலமானதாகும்.
Photo: Kalyan Neelamraju
இந்தக்கோயிலின் மூலவரான முக்தேஸ்வரர் முகத்தி அளிப்பவர் என்பது இங்கு வரும் பக்த்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வருடா வருடம் ஜனவரி மாதம் முக்தேஸ்வரர் நடன திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ராஜா ராணி கோயில்:
உண்மையிலேயே மிக விசித்திரமான கோயில் என்றால் அது இந்த ராஜாராணி கோயில் தான். இந்தக்கோயிலில் மூலவர் என்று எந்த கடவுளின் சிலையும் இங்கு கிடையாது. இங்கு சொல்லப்படும் கதையின் படி முன்னொரு காலத்தில் கலிங்கத்தை(ஓடிஸாவின் பழைய பெயர்) ஆண்ட ராஜாவும் ராணியும் ஓய்வெடுக்கவும் மகிழ்ந்துனரவும் இது கட்டப்பட்டதாம்.
Photo: Abhijith Rao
இன்றும் காம ரசம் பொங்கும் சிற்பங்களை இந்த கோயில் மதில்களில் நாம் காண முடியும். காதலையும் காமத்தையும் கொண்டாடும் இந்த இடம் 'கிழக்கின் கஜுராஹோ' என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களை ரசித்தபடி பசுமையான புல்வெளிகளில் அமர்ந்து அமைதியாக கொண்டாடலாம்.
Photo: Aditi
யோகினி கோயில்:
புபனேஸ்வர் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது யோகினி கோயில். இந்தியாவில் இந்த கோயில் போன்று மொத்தம் 4 கோயில்களே உள்ளதாம். அரக்கர்களை அழிக்க பராஷக்தியால் படைக்கப்பட்ட 64 யோகினி அம்மன்களின் உருவங்கள் இக்கோயிலினுள் உள்ள கற்சுவர்களில் குடையப்பட்டுள்ளன.
Photo: Sanjay P. K.
இன்று தாந்த்ரீக வழிபாடுகள் எதுவும் இங்கு நடைபெறுவது இல்லை. இப்போது இக்கோயிலின் முக்கிய கடவுளாக மகாமாயாவும் மற்ற யோகினிக்கள் துர்கையின் வடிவமாகவும் வழிபடப்படுகின்றனர். அதிகாலையில் இக்கோயிலுக்கு செல்வது பரசவமூட்டும் அனுபவமாக அமையும்.
ப்ரமேஸ்வரர் கோயில்:
லிங்கராஜா கோயிலுக்கு வெறும் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ப்ரமேஸ்வரர் கோயில். கலிங்க கட்டிடக்கலையில் இங்கு தான் முதன் முறையாக இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இக்கோயில் சுவற்றில் நடனக்கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டிருகின்றன. இது போன்று நாம் வேறெங்கும் காண முடியாது.
Photo: patrix99
இந்த விஷயங்களை தவிர்த்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்தேஸ்வரர் கோயில் மற்றும் ராஜாராணி கோயில்களில் உள்ள சில அம்சங்கள் அப்படியே இங்கும் உள்ளன. முக்தேஸ்வரர் கோயிலில் உள்ளது போன்ற கற்தாமரை சிற்பமும், கோயில் சுவர்களில் ராஜாராணி கோயிலில் உள்ளது போன்று காம சிற்பங்களும் இங்கே இருக்கின்றன. அதிசயமூட்டும் இந்த பழமையான கோயில்களுக்கு நிச்சயம் ஒருமுறை சென்று வாருங்கள்.