நவராத்திரி, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விமரிசையாய் கொண்டாடப்படும் ஒரு பெரிய பண்டிகை. இந்துக்களின் முக்கிய வைபவமாக இருக்கும் நவராத்திரி பண்டிகையில், ஒன்பது நாளும் துர்கைக்காக அர்பணிக்கப்படுகிறது.
அதில் குறிப்பாக, விஜயதசமி நாள் மிகவும் மங்களகரமான நாளாக எல்லோரும் கருதுவர்; அன்று ஆரம்பிக்கபட்ட எந்தவொரு புது முயற்சியும் வெற்றிகரமாய் முடியும் என்பது பலரின் ஆழமான நம்பிக்கை. புதிய தொழில் தொடங்குவோர், பிள்ளைகளை வகுப்பில் சேர்ப்போர் இந்த நாளுக்காக காத்திருப்பார்கள்.
Photo Courtesy : Twitter Handle
நம் தமிழகத்தில் நவராத்திரியை தனித்துவமாய் கொண்டாடும் ஒரு கோவிலைப் பார்ப்போம். திருச்செந்தூர் பக்கம் குலசேகரபட்டினத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரியை வித்தியாசமாய் கொண்டாடுகிறார்கள்.
முத்தாரம்மன் கோவிலில் இருக்கும் இரண்டு பிரதான தெய்வங்கள் சிவனும் பார்வதியும். சுயம்பாக தோன்றிய லிங்கம் என்ற காரணத்தினால் சிவன் பக்தர்களிடம் பிரசித்தி பெற்றாலும் இந்தக் கோவில் பரவலாக அறியப்படுவது பார்வதியால்தான்.
மகிசாசூரன் என்ற அரக்கனை அன்னை பராசக்தி வதம் செய்து தேவர்களை காத்த நாளை தசராவாக கொண்டாடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு மாலை சூடி வேடமணிந்து பரவசமாக ஆடியும் பாடியும் பக்தர்களிடம் காணிக்கை பெறுகின்றனர். பத்தாம் நாளில் சூரசம்காரம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதோடு பக்தர்கள் மாலையினை கழற்றி விரதத்தினை முடித்துக்கொள்கின்றனர்.
Photo Courtesy : Wikipedia
இதைவிட விசித்திரமான வேண்டுதல் ஒன்றும் இங்கு நடைபெறுகிறது : தசராவின்போது பக்தர்கள் பல வேடங்களில் - குரங்காக, பிச்சைக்காரர்களாக, பிச்சையெடுப்பது உண்டு. சாமான்யனில் இருந்து பெரும் பணக்காரர் வரை ஏழையாய் உடையணிந்து கோவிலுக்கு வரும் பிற பக்தர்களிடம் தானம் கேட்பார்கள். ஒருவருக்குள் இருக்கும் அகங்காரத்தை ஒழிப்பதற்கும், கடவுள் எந்தவொரு ரூபத்திலும் வரக்கூடும் போன்ற நம்பிக்கையால் இப்படி யாசகம் பெறும் பழக்கம் இங்கு வந்தது.
முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் மகிசாசூரசம்ஹாரம் கொண்டாட்டங்களை பொதிகை தொலைக்காட்சியில் நீங்கள் காணலாம்.