சித்தர்கள் தவம் செய்த சதுரகிரிமலையில் 18 சித்தர்களும் இன்றளவும் உலாவும் இடம் என்று சொல்லப்படுகிறது.
அடர்ந்த காடுகள், அதிலேயோர் அருவி, சலசலப்பு நிறைந்த ஆறு என்று பச்சை பசுமையாக காட்சி தருகிறது சதுரகிரிமலை.
இந்த மலைப்பகுதியில் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் சுனை அருவி ஒன்று உள்ளது. சித்தர்கள் தவம் செய்த இடம் என்றாலே சில சுவாரசியங்களும், மர்மங்களும் அடங்கியிருக்கும். அப்படியொரு இடம்தான் சதுரகிரி மலை.
சதுர கிரி மலையில் உள்ள மர்மங்கள் பற்றி ஒரு திகில் பயணம் சென்று பார்க்கலாம்.
அலுப்பு தெரியாது
சதுரகிரி மலையில் 10 கிமீ நடந்தாலும் அலுப்பு ஏற்படாதாம். வயதானவர்கள் என்றாலும் அவர்களுக்கு கால் வலிக்காதாம். அப்படியொரு மூலிகைக் காற்று நிறைந்த பகுதியாக உள்ளது சதுரகிரி மலை.
முதன்முதல் மலையேறும் பக்தர்கள்
முதன்முதலில் இந்த மலையில் ஏறும் பக்தர்களுக்கு அலுப்பு தெரிவதில்லை என்று அவர்களே கூறுகின்றனர்.
சுந்தரமகாலிங்கம் கோயில்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த கோயிலாக நம்பப்படுகிறது.
எங்கிருந்து செல்லலாம்
இப்பகுதிக்கு மதுரை சாப்டூர் அருகிலுள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருகிலுள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியிலிருந்தும் சதுரகிரி மலைக்கு செல்லலாம்.
செல்லும் வழி
மதுரை மாவட்டமக்கள் வத்திராயிருப்பு மற்றும் வாழைத்தோப்பு பகுதியில் செல்வதற்கும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியாக செல்வதற்கும் முன்னுரிமை அளிக்கின்றனர்.
செல்லும் வழி
வத்திராயிருப்பு வழியாக செல்லும் பாதை மிகவும் சுலபமானது என்பது பலரின் கருத்து. இந்த வழியாகத்தான் அதிக அளவு பயணிகள் சென்று வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வத்திராயிருப்பு செல்லும் பேருந்துகளில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்க வேண்டும். அங்கிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது சதுரகிரி மலையின் அடிவாரம். அங்கிருந்து 10 கிமீ மலையேற்றம் செய்தால் சதுரகிரியை அடையலாம்.
ஒத்தையடி பாதை
சந்தனமகாலிங்க கோயில் அருகேயுள்ள ஒத்தையடி பாதை வழியே சென்றால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு காளி சிலை உள்ளது. அதைக் கண்டு சிலர் மிரள்கிறார்கள். அந்த அளவுக்கு ஆக்ரோஷமான சிலையாக உள்ளது.
மரத்தில் தெரியும் சித்தர்
அதன் அருகில் இருக்கும் பெரிய மரத்தில் சித்தர் ஒருவரின் உருவமும் தெரிகிறது. சித்தர்கள் சாவையே வென்று இந்த பகுதியில் வாழ்ந்து வருவதாக இங்கு வரும் பக்தர்களும் பயணிகளும் நம்புகின்றனர்.
இங்கு ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களைத் தீர்க்கவல்லது. இந்த மலையேற்றத்தின்போது வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று பட்டு நோய்கள் குணமாவதாக கூறுகின்றனர்.
ஐந்து கோயில்கள்
இந்த மலையில் 5 கோயில்கள் உள்ளன. மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தனமகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் ஆகியவை.
திசைக்கு நான்கு மலை வீதம் பதினாறு மலைகள் சதுர வடிவில் அமைந்துள்ளதால் இதற்கு சதுரகிரி மலைகள் என்று பெயர்வந்தது.
சிறப்பு
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினங்களில் வருடந்தோறும் சிறப்பு பூசைகளும், அதிக அளவில் பக்தர்களும் வருகை தருவார்கள்.
மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள குன்றை சஞ்சீவி மலை என்கிறார்கள்.
மலையேற்றம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிக அளவு மக்கள் வழிபடுகின்றனர்.
சந்தனமகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
சாப்டூர் பாளையக்காரர்
1940 வரை இந்த கோயில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. பின்னர் இந்திய வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
நச்சுப் பால்
இங்குள்ள ஒருவகை மரத்தின் பால் முகத்தில் பட்டால் முகம் வீங்கிக்கொண்டே செல்கிறது. இதற்கு பெயரே மொகரைவீங்கி மரம் என்றுதான். சந்தனம் இதற்குரிய மருந்தாக பயன்படுகிறது.
இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
பெரிய அணில்
மரத்திற்கு மரம் தாவும் அணில் இங்கு பெரிய அளவுகளில் காணமுடிகிறது.
தவசி குகை
மகாலிங்கம் கோயிலுக்கு சுமார் 1 கிமீ தூரத்தில் ஒரு குகை உள்ளது. இது தவசி குகை என்றழைக்கப்படுகிறது.
சித்தர்கள் வாழும் குகை
இந்த குகை அவசியம் செல்லவேண்டிய குகை என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது. இங்கு 18 சித்தர்களும் தோன்றி மறைவதாக நம்பப்படுகிறது. இங்குள்ள இடங்கள் பற்றியும், மர்மங்கள் குறித்தும் இன்னொரு பதிவில் இன்னும் அதிகமாக பார்க்கலாம்.