சுற்றுலா என்பது நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. எல்லாருக்கும் தெரிந்த இடங்களுக்கு சென்று மகிழ்வது என்பது ஒருவகை சுற்றுலா என்றால், புதிது புதிதாக பல இடங்களைத் தேடி பிடித்து சென்று மகிழ்ந்துவிட்டு வருவது தற்கால இளைஞர்களின் சுற்றுலாவாகும்.
தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள வரதய்யா பாளையம் அருகே ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சி உள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தீவிர சுற்றுலா விரும்பிகள் மட்டுமே அறிந்த இடமாக இருந்தாலும், இது அனைவராலும் ரசிக்கக் கூடியது. மகா சிவராத்திரி பண்டிகையின்போது மக்கள் இங்கே திரளாக செல்வார்கள்.
இந்த அருவி குறித்தும், இதன் அருகிலுள்ள இடங்கள் குறித்தும் அறியலாம் வாருங்கள்.
தமிழக - ஆந்திர எல்லையில், நெல்லூர் மாவட்டத்தில் தடாவிலிருந்து, தெற்கு பக்கமாகத் திரும்பும் ஸ்ரீ காளஹஸ்த்தி செல்லும் சாலையில் சுமார்ல11 கி.மீ சென்றால் வரதய்யா பாளையத்தை அடையலாம். இதன் அருகில்தான் அந்த அற்புத நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
அங்கிருந்து கொஞ்ச தூரம் போகும்போது, தென்திசையில் ஒரு சிறிய சாலை பிரியும். அங்குதான் அமைந்துள்ளது ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சி. அங்கிருப்பவர்களைக் கேட்டால் வழி சொல்வார்கள்.
ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை நல்ல நிலையில் இல்லை. கரடு முரடாக இருக்கும். பாதி தூரத்திற்கு சரளைக் கற்களும் அதன்பிறகு மண் பாதை, சிறிது தூரத்திற்கு கூழாங்கல் நிறைந்த மிக கடினமான பாதை என உங்கள் பயணம் கடினமானதாகவே இருக்கும். எனவே எந்த வாகனத்தில் சென்றாலும் மிக எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்.
அப்படியே ஒரு சில கிலோ மீட்டர்கள் சென்றால், அந்த சாலையின் முடிவில் அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு சிறு ஓடையைக் கடந்து நடந்து செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் சென்றால் அந்த ஓடையில் உங்கள் வண்டியை இறக்கி தள்ளிக் கொண்டு சென்று, சற்று தொலைவுக்கு பிறகு ஓட்டிக் கொண்டு செல்லலாம்.
நீங்கள் நடந்து சென்றாலும், வாகனத்தில் சென்றாலும் சரியாக 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தளம் இது அல்ல. ஏனெனில் இத்தனை தூரம் அதுவும் கரடுமுரடான பாதையில் நடப்பது மிகவும் சிரமமானது.
அய்யய்யோ நடக்கவேண்டுமா என்று கவலைப் படாதீர்கள், இரு ஓரங்களிலும் இருக்கும் விதவிதமான செடிகளையும், நடுநடுவே ஓடும் ஓடைகளையும் தாண்டிச் செல்கையில் எந்த சலிப்பும் தெரியாது.
இந்நீர்வீழ்ச்சி, சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சூலூர் பேட்டை, நெல்லூர் செல்லும் பல தொடர்வண்டிகளும் புறநகர் பேருந்துகளும் தடா வழியாக செல்கின்றன. சூலூர் பேட்டை செல்லும் தொடர்வண்டி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என்று இரவு 8:30 மணி வரை இயங்குகின்றது.
அருகில் விடுதிகள் ஏதும் இல்லாததால், காளஹஸ்தி அல்லது வரதையாபாளம் ஆகியவை தங்குவதற்கு சிறந்த இடமாகும். சூரிய மறைவிற்குப் பின்னர் காட்டில் தங்குவதைத் தவிர்த்தல் நல்லது.