கேரள மாநிலத்திலுள்ள சிற்றூர் தாலுகாவில் ஆனை மலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையில் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது. பாலக்காடு இரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் 2010 பிப்ரவரி 19 அன்று உருவாகப்பட்டது. இந்த சரணாலயம் வடக்கே பாலக்காடு மாவட்டத்தின் நெம்மரா காடுகள் முதல் தெற்கே வழாசல் காடுகள் வரையிலும் மேற்கே திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடி வரையிலும் பரந்து விரிந்துள்ளது.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளவையில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் ஆனைமலை திரளும் சேரும். ஏறத்தாழ 20.66 கிலோ மீட்டர் பரப்பளவில் காணப்படும் இந்த விலங்குகளின் சரணாலயத்தில் பரம்பிக்குளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் போன்ற மூன்றும் மனிதர்களால் உருவாகப்பட்டதாகும். இதன் நுழைவு வாயிலில் தான் அழகிய துவையர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த சரணாலத்திற்கு உட்பட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை மற்றும் சோலையாறு அணை அமைந்துள்ளது.
மலைவாழ் மக்கள்:
இப்பகுதியில் நீங்கள் முதுவர், மலை மலசர் , மலைசர் மற்றும் காடர் போன்ற மலைவாழ் மக்களை நீங்கள் காணமுடியும். இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள், மலைஏற்றத்திற்கு வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், யானை சவாரி செய்வதற்கு இவர்கள் உதவி செய்கிறார்கள். இவர்கள் வனத்துறையினரால் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
PC: PP Yoonus
புலிகள் இனம் அழிந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் புலிகளை பாதுகாக்க வனத்துறை பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறது.இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்களும் தன்னார்வத்துடன் உதவி செய்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கவர்ச்சியான இடமாகக் காணப்படும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக விளங்குகிறது.
நெல்லியம்பதி மலையிலிருந்து ஆனைமலை வரை வரை அமைந்துள்ள இச்சரணாலயத்தில் சபரிமலை தென் எல்லையாகவும், பன்டாரவரை என்ற பகுதி இதன் வட எல்லையாகவும் அமைந்துள்ளது. மேலும் குச்சிமுடி, வெங்கோலிமலை, புலியரைபாதம் போன்ற அழகிய மலைப்பகுதிகளும் இங்கு காணப்படுகின்றன.
இங்கு காரபாரா ஆறு , மற்றும் குரியர்குட்டி ஆறு ஆகிய நதிகளும் ஒடுகின்றன. புலிகளின் பாதுகாப்பு மையமாக விளங்கும் இப்பகுதி சூழலியல் சுற்றுலா துறைக்கான சிறந்த இடமாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் மிகவும் மாசு படிந்துக் காணப்படும் இந்த காலக் கட்டத்தில், இயற்கை சார்ந்த படிப்புக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். பல நாடுகளிலிருந்தும் மலையேற்ற வீரர்கள் இங்கு உற்சாகத்துடன் வருகிறார்கள்.
படகு சவாரி:
இங்கு மூங்கிலால் செய்த படகில் சவாரி செய்து புதிய அனுபவத்தைப்பெறலாம். இப்பகுதியில் இருக்கும் படகுதுறையிலிருந்து கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுவதால் இங்கு மோட்டார் படகு விடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் உள்ளூர் வாசிகள் மட்டும் மீன்பிடிப்பதற்கு நாட்டு படகுகளைப் பயன்படுத்துகின்றனர். கண்ணைக் வரும் இயற்கைக் காட்சிகளை ரசிக்க உதவும் மூங்கில் படகுப் பயணம் உண்மையில் மறக்கமுடியாத ஒர் அனுபவமாகும்.
வனப்பயணம் :
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்க ஏதுவாக வனப்பயண வாகன வசதிகள் இங்கு உண்டு. புலிகள் சரணாலயத்தில் இரவில் தங்குவதற்கான அனுமதி பெற்ற நான்கு சக்கர தனியார் வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. இரண்டு சக்கர வாகனங்கள் புலிகள் சரணாலயதிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மூன்றரை மணி நேரம் நீடிக்கும் இந்த மெய்சிலிர்க்கும் வனப்பயணம் இக்காட்டிற்குள் மறைந்திருக்கும் இயற்கையின் ரகசியங்களை உங்களுக்கு அறிவித்துவிடும்.
PC: Parambikulam Tiger Conservation Foundation
மரங்கள்:
இயற்கை வளம் நிறைந்த இந்த அடர்த்தியான கட்டு பகுதியில், பலவிதமான மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. தேக்கு மரங்கள், வேம்பு மரங்கள், சந்தன மரங்கள் மற்றும் ரோஸ்வுட் மரங்கள் காணப்படுகின்றன. தேக்கு மரம் பயிரிடுதல் இங்குதான் உலகிலேயே முதன்முதலாக விஞ்ஞான ரீதீயாக நிர்வாகம் செய்யப்படுகிறது. உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் மிகவும் பழைமையான கன்னிமாரா தேக்கு மரம் (எறத்தாழ 450 வருடங்கள் பழமையானது) இங்குதான் இருக்கிறது. இந்த மரம் மகாவிருக்ஷா புரஸ்கர் என்ற இந்திய அரசு விருதைப் பெற்றுள்ளது. இங்கு தான் தேக்கு மரங்கள் ஆசியாவிலேயே அதிக அளவில் காணப்படுகின்றன.
கொச்சி மாநிலத்தைச் சார்ந்த காட்டுப் பகுதியில், ஒரு காலத்தில் டிராம் வண்டிகள் தயாரிப்புக்கும், கப்பல் கட்டுவதற்கும் தேவையான மரங்களை வெட்டியிருக்கிறார்கள். மேலும், கொச்சி கப்பல் துறைமுகத்தின் வழியே உலகின் பல பகுதிகளுக்கும் இங்கு வெட்டப்பட்ட மரங்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.
காட்டிற்குள் ஒரு இரவு:
இங்கு அமைந்துள்ள தீவுப்பகுதியில் பெரிய மரங்களின்மேல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விவரங்களை இவர்களின் அலுவலக இணைய தளத்தில் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். இரவில் தங்குவதற்கான முன்பதிவுகளை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதற்காக ஏஜெண்டுகள் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆனால், இரவு நேரங்களில் இக்குடிசைகளிலிருந்து வெளியே வருவது மிகவும் ஆபத்தானது.
விலங்குகள் மற்றும் பறவைகள் :
இப்பகுதி உயிரியற் பல்வகை மையமாக விளங்குவதால் ஏராளமான பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள், கொச்சி பிரம்பு ஆமை, மற்றும் கல் ஆமைகள் போன்றவைக் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமைகள் வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஏறத்தாழ 140 க்கும் மேற்பட்ட பறவை இனங்களை இங்கு காணலாம். பறவைக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பல சுவையான தகவல்கள் இங்கு கிடைக்கின்றன.
எண்ணற்ற இயற்கை நிலக்காட்சியும் சொல்லொண்ண அழகும் நிறைந்த பரம்பிக்குளம் புலிகள் பாதுகாப்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈர்ப்பு மையமாகத் திகழ்கிறது. பசுமையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த காடுகள் மிகுந்த மகிழ்சியைத் தருகின்றன.
இந்த சரணாலயத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்களும் மதுபானங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. மிருகங்களுக்கு உணவளிப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது. இதனருகில் காணப்படும் ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு சுற்றுலா மையமாகும்.
சுற்றுலா செல்வதற்கான காலம்:
மழைக்காலங்களில்(ஜூன் முதல் ஆகஸ்டு வரை) இங்கு செல்லக் கூடாது. ஏனெனில், கனத்த மழையின் காரணமாக காட்டுப் பாதையில் பயணம் செய்வது மிகவும் கடினம். அக்டோபர் முதல் மார்ச் வரை, பரம்பிகுளம் காட்டிற்குள் செல்ல ஏற்ற காலமாகும்.
புலிகள் சரணாலயத்திற்குப் போகும் வழி
தமிழ் நாட்டின் பொள்ளாச்சி நகரிலிருந்து இப்பகுதிக்கு கேரளா போக்குவரத்துக்கழகம் வாகனங்களை இயக்குகிறது. பொள்ளாச்சியிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 100 கி.மீ தொலைவிலும் பரம்பிக்குளம் சரணாலயம் அமைந்துள்ளது. பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து பல KRTC பேருந்துகளும் செல்கின்றன
பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலய சுற்றுலா பயணத்தின் போது, சைலன்ட் வேல்லி தேசிய பூங்கா, நெல்லியம்பதி, திப்பு சுல்தான் கோட்டை, மயிலாடும்புரா மயில்கள் சரனாலயம், மான் பூங்கா, போத்துண்டி நீர்த்தேக்கம் மற்றும் தோணி பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்ற இடங்களுக்கும் நீங்கள் சென்று வரலாம்.