உண்மையில் இப்போது இருபது வயதை கடந்தவர்கள் எல்லாமே பாக்கியசாலிகள். நம்முடைய குழந்தைப்பருவம் தான் எத்தனை இனிமையான விஷயங்களால் நிரம்பி இருந்தது. எப்போது வீதிக்கு வந்தாலும் விளையாட இருக்கும் நண்பர்கள், கிணற்றில் மாமாவோடோ சித்தப்பாவோடோ டையர் டியுபை கற்றிகொண்டு நீச்சல் பழகிய அனுபவம், நம்முடனேயே கன்றுக்குட்டியில் இருந்து வளர்ந்து பின் தாயாக நமக்கு பால் கொடுக்கும் மாடுகள், அப்பாவின் தோல் மீது அமர்ந்து போய் பார்த்த திருவிழா என மனிதர்களாலும், உணர்வுகளாலும் நிரம்பியதொரு குழந்தைப்பருவம் நமக்கு வாய்த்தது.
ஆனால் இன்றைய நவீன உலகில் கைக்குள் உலகம் வந்து விட்ட பிறகு உலகத்தின் அகலமும், மனிதர்களின் ஆழமும் தெரியாமலேயே நம்முடைய குழந்தைகள் வளர்கின்றனர். நாமும் அவர்கள் அமைதியாய் இருந்தால் போதும் என விட்டு விடுகிறோம். அப்படி இல்லாமல் அவர்களை அவர்களாக இருக்க அனுமதிக்கும் சில இடங்களுக்கு கூடிப்போவதை விட சிறந்த அன்பளிப்பு இன்றைய நவீன யுக குழந்தைகளுக்கு நாம் தர முடியாது. வாருங்கள், சென்னை பெரு நகரத்தில் உங்கள் குழந்தைக்கு நிச்சயம் பிடிக்கும் சில இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முதலை பூங்கா:
Photo: Sunil Soundarapandian
டைனவுசர்களுடன் உலகத்தை பகிர்ந்துகொண்ட பங்காளிகள் தான் முதலைகள். பல லட்சம் ஆண்டுகளாக உலகத்தில் வாழ்ந்து வரும் சில உயிரினங்களில் முதலையும் ஒன்று. தடிமனான செதில் செதிலான தோல், நாக்கே இல்லாத அதிவலிமையான தாடை, அசரும் நேரத்தில் பதுங்கி இருந்து தாக்கும் தன்மை போன்றவை நமது குட்டி செல்லங்களிடையே ஆயிரம் கேள்விகளை எழுப்பும். மாமல்லபுரத்தில் இருக்கும் இந்த முதலை பூங்காவிற்கு முதலை குட்டிகளை கைகளில் எடுக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். உங்கள் செல்லக்குட்டிகள் எவ்வளவு தைரியசாலிகள் என தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பு இது. குறைந்த செலவில் அருமையான ஒரு நாளை உங்கள் குழந்தைகளுடன் இங்கே கொண்டாடுங்கள்.
முட்டுக்காடு படகு சவாரி:
Photo: Sudarshan V
சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்க்கரை சாலையில் இருக்கிறது அழகுநிறைந்த முட்டுக்காடு ஏரி. இங்கே உங்கள் குழந்தைகளை மாலை நேரத்தில் ஜாலியாக படகு சவாரிக்கு அழைத்து செல்லுங்கள். சூரிய ஒளியில் தங்க நிறத்தில் ஏரியில் இருக்கும் தண்ணீர் இருக்கும் போது அதன் நடுவே படகில் செல்லும் போது உங்கள் குழந்தையின் பரவசத்தை கண்டு மகிழ தவறாதீர்கள்.
கிண்டி தேசிய பூங்கா:
Photo: Vinoth Chandar
சுற்றித்திரியும் புள்ளி மான்களையும், எட்ட எட்ட பறக்கும் பட்டாம் பூச்சிகளையும் எந்த குழந்தைக்குத்தான் பிடிக்காது. சென்னையில் பசுமையான சூழல் நடுவே அமைந்திருக்கும் கிண்டி தேசிய பூங்கா உங்கள் குழந்தைகளை நிச்சயம் ஆர்வமூட்டும். எத்தனை வீடியோ கேம்கள் வந்தாலும் இயற்கையோடு உறவாடும் பொது வரும் மகிழ்ச்சி எதற்கும் இணையானதல்ல என்பதை உங்கள் குழந்தை இங்கே கொஞ்சமேனும் உணரும். கோழி என்பதை பறவையாக நம் குழந்தைகள் பார்ப்பதே இல்லை, பால் மார்கெட்டில் தான் கிடைக்கிறது மாட்டில் இருந்து அல்ல என நம்பும் தலைமுறை வளர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட கண்ணோட்டத்தை இப்படிப்பட்ட இடங்கள் தான் மாற்றும். எனவே, ஒரு வார விடுமுறையில் இங்கு வந்து உங்கள் குழந்தையுடன் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.
தி பார்ம்:
Photo: The Farm
விவசாய குடும்பத்தில் இருந்து வந்த எல்லோர் வீட்டிலும் பசுக்கள், கோழி, சேவல், நாய், ஆடுகள் என பல செல்லப்பிரானிகளுடன் ஒரே குடும்பமாய் வாழ்ந்திருப்போம். ஆனால் கான்கிர்ட் காடுகளில் வளரும் நம் குழந்தைகளுக்கு அவை தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பார்மில் குதிரைகள், மாடுகள், கிளிகள், என செல்ல விலங்குகளுடன் பழகும் வாய்ப்பு நம் குழந்தைகளுக்கு கிடைக்கும். விரும்பினால் பால் கறத்தல் போன்ற விஷயங்களை நேரடியாக காணலாம். அப்படியே கிராமத்து விருந்து ஒன்றையும் ருசித்து விட்டு வரலாம்.
வி.ஜி.பி கேளிக்கை பூங்கா:
Photo: VGP
பரிட்சைகள், டியுஷன், முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள், ரெகார்ட் வேலைகள் என நிற்க நேரமிலாமல் கொண்டாடி மகிழ வேண்டிய தங்கள் குழந்தை பருவத்தை புத்தக புழுவாகவே கழிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்களை மறந்து கொண்டாடி மகிழ இம்மாதிரியான கேளிக்கை பூங்காக்களுக்கு அழைத்து வரலாம். பல்வேறு வகையான விளையாட்டுகள், சாகச சவாரிகள் இங்கே உள்ளன. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆசை தீர ஒரு நாளை இங்கே உங்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக அளியுங்கள். நம் குழந்தைகளின் மகிழ்ச்சியை விட அழகான விஷயம் வேறென்ன இந்த உலகத்தில் இருந்து விட போகிறது.