இந்தியப் பெருநகரங்களில் எங்குமே இல்லாத அளவுக்கு சென்னையில் மொத்தம் 2,467 பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் 200 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்டவையாகும்.
அதுமட்டுமல்லாமல் இந்தக் கட்டிடங்கள் இன்றளவும் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுவும் சென்னையின் பழமையான மூர் மார்க்கெட் தீக்கு இரையான பின்னர் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தனிக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டிடங்களில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்டவை இன்று சென்னையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன.
விக்டோரியா பப்ளிக் ஹால்
ராணி விக்டோரியாவின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்களால் 1890-ஆம் ஆண்டு விக்டோரியா பப்ளிக் ஹால் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் முதன் முதலாக சினிமா திரையிடப்பட்ட இடமாக விக்டோரியா பப்ளிக் ஹால் அறியப்படுகிறது. தற்போது இந்த கட்டிடத்தில் தென்னிந்திய தடகள சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் மூர் மார்க்கெட் அருகே ரிப்பன் பில்டிங் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
படம் : L.vivian.richard
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை அறியப்படுகிறது. 1644-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது சென்னையின் மிகவும் பழமையான கட்டிடமாகவும் புகழ்பெற்றுள்ளது.
படம் : L.vivian.richard
எழும்பூர் ரயில் நிலையம்
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் எழும்பூர் ரயில் நிலையம் 1908-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 35 வெளியூர் ரயில்களும், 118 புறநகர் ரயில்களும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
படம் : PlaneMad
ரிப்பன் பில்டிங்
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்தக் கட்டிடத்துக்கு ரிப்பன் பில்டிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு 1913-ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி கட்டிடமாக இது செயல்பட்டு வருகிறது. இது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே, பார்க் புறநகர் ரயில் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.
படம் : PlaneMad
ஹிக்கின்பாதம்ஸ்
இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாக ஹிக்கின்பாதம்ஸ் அறியப்படுகிறது. 1844-ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட இந்த புத்தக நிலையத்தின் கிளைகள் தற்போது ஆந்திரப்பிரதேசம்,கர்நாடகா மற்றும் கேரளாவில் 22 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இது சென்னை மவுண்ட் ரோடில் (அண்ணா சாலை) அமைந்துள்ளது.
படம் : Ravichandar84
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையம் 140 ஆண்டுகளுக்கு முன்பு 1873-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
படம் : PlaneMad
எழும்பூர் அரசு அருங்காட்சியகம்
கொல்கத்தாவில் உள்ள இந்தியன் மியூசத்திற்கு பிறகு இந்தியாவின் 2-வது மிகப்பழமையான அருங்காட்சியகமாக அறியப்படும் எழும்பூர் அரசு அருங்காட்சியகம் 1851-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதுமட்டுமல்லமால் தெற்காசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாகும்.
படம் : raja sekaran
சென்னை உயர் நீதிமன்றம்
உலகின் 2-வது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர் நீதிமன்றம் அறியப்படுகிறது. இந்த நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.
படம் : Yoga Balaji
ராயபுரம் ரயில் நிலையம்
மும்பையின் விக்டோரியா டெர்மினஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் ஹௌரா ரயில் நிலையங்களுக்கு பிறகு இந்தியாவின் 3-வது பழமையான ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இங்கு 1856-ஆம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் இயக்கப்பட்ட முதல் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் : Darren Burnham