ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, நிச்சயதார்தத்திற்கும் கல்யாணத்திற்கும் இடைப்பட்ட காலம்தான் அவரவர் வாழ்வில் வரும் அரிதான, சந்தோஷமான தருணங்கள். திடிரென ஒரு பெண் உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறுவது, உங்களுக்காக காத்திருப்பது எல்லாம் ஒரு கிறக்கத்தைத் தரும். அவளுக்கும் அதேதான். ஒரு பாதுகாப்பு உணர்வு;என்னவன்; யார் வந்தாலும் கில்லியாய் நிற்பான் என்று.
இந்த சமயத்தில் நீங்கள் சேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு புகைப்படம் பின்னாளில் அது தரும் நெகிழ்வான நினைவுகள் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காதது.
சரி, புகைப்படம் எடுக்கலாம்; அதற்கு ஒரு பொருத்துமான சூழல் வேண்டுமல்லவா. அப்படிப்பட்ட இடங்களை நோக்கித்தான் பயணிக்கப் போகிறோம்.
Photo Courtesy : Ram Karthik
அடையார் தியாசிஃபிக்கல் சொஸைட்டி
சென்னையில் காசு கொடுத்தும் கிடைக்காத ஒன்று அமைதி, நல்ல காற்று. இந்த இரண்டும் வேண்டும் என்பவர்களுக்கு ஒரு சிறந்த இடம். குறிப்பாக, தனிமை விரும்பிகள், காதலர்கள், கல்யாணத்திற்கு தயாராக இருக்கும் இளைஞர்கள் தவற விட கூடாத இடம்.
புகைப்படம் எடுக்க அருமையான சூழல் : ஆலமரம், பறவைகளின் கீச்சொலி என்று இயற்கை பொங்கும் இடம். ஜன நெருக்கடி கிடையாது. ஒரு சிக்கல் கேமராக்களை கொண்டு செல்ல முடியாது. பரவாயில்லை. செல்ஃபோனிலேயே அருமையாக படங்கள் எடுக்க முடிகிற போது கேமரா எதற்கு ? செல்ஃபோனில் படம் எடுக்க தடையில்லை.
கல்யாணத்திற்குமுன் உங்கள் ப்ரியமானவர்களோடு செல்ல ஒரு சிறந்த இடம் அடையார் தியாசிஃபிக்கல் சொஸைட்டி.
பெங்களூர்
இல்லை, செல்ஃபோன் கேமரா எல்லாம் வேண்டாம், நல்ல கேமராவில் ரம்மியான சூழலில் படம் எடுக்க வேண்டுமா ? பெட்டியை கட்டுங்கள்; 8 மணி நேரத்தில் பெங்களூர் வாருங்கள். ஊர் முழுக்க பூங்காக்களும், ஏரிகளும், மரங்களும் நிறைந்திருக்க உங்களுக்குப் பிடித்த இடத்தை தேர்வு செய்து ஃபோட்டோக்களை க்ளிக்கித் தள்ளுங்கள்.
அமிதிஸ்ட், சென்னை
சென்னையில் இளசுகளின் மிக விருப்பத்திற்குரிய இடம். இது ஒரு உணவகம், காஃபி ஷாப். பழங்காலத்து கொலனிய வீடு; சுற்றி மூங்கில், பனை, செடிகள், பறவைகள். இந்த சூழலில் காதலியுடன் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது ? இயக்குனர் கவுதம் மேனன், இந்த இடத்தின் அமைதிக்காகவே தன் படத்தின் திரைக்கதைகளை இங்கு உட்கார்ந்து எழுதுவது வழக்கம்.
மருதமலை முருகன் கோவில்
Photo Courtesy : Sodabottle
கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற கோவில் மருதமலை முருகன் கோவில். சுற்றி மரங்களும், மலைகளும் சூழ ஒரு தெய்வீக சூழலில் உங்கள் காதலியோடு இருப்பது எத்தனை இன்பம் தரும். ஃபோட்டோ எடுக்கும் கையோடு, முருகனை கும்பிடும் புண்ணியமும் உங்களுக்கு வந்து சேர்வது சாதாரண விஷயமா.
ஆலம்பரை கோட்டை
Photo Courtesy : Djoemanoj
ஆலம்பரை கோட்டை, கடப்பாக்கம் அருகில், மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் பாடலான விழிகளில் விழிகளில் விழுந்து விட்டால் இங்குதான் படமாக்கப்பட்டது.
சென்னைக்கு அருகில் இத்தனை அற்புதமான இடம் இருப்பது பலருக்குத் தெரியாது.
கல்யாணத்திற்கு முன் ஃபோட்டோ ஷூட் எடுக்க அட்டகாசமான இடம்.