செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு கடந்த திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே மீளாத சோகமாக மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டின் தங்க தாயாக வீற்றிருந்த செல்வி ஜெயலலிதா சென்ற சமீபத்திய இடங்களும் இறுதி பயணமும் பற்றி இதோ சில விவரங்கள்..
வேதா நிலையம்
தன் தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா'). வேதா நிலையம் ஜெயலலிதாவிற்கு மிகவும் முக்கியமான இடமாகவும் இந்த உலகில் அவருடைய உணர்வோடு கலந்த ஒரு இடமாகவும் அறியப்பட்டது. அப்படிப்பட்ட இந்த வேதா நிலையத்தில் தான் செப்டம்பர் 22-ம் தேதி, ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த உடல்நிலைக் கோளாறுகள் வெளிப்படத் தொடங்கி, அவர் மயங்கி விழுந்தார். அன்றுதான் அவர் வேதா நிலையத்தில் இருந்த கடைசி நாளாகும்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
ஜெயலலிதாவின் கனவு கோட்டையாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி ஜெயலலிதா வருகை புரிந்து, சென்னை விமானநிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிலையங்கள், 200 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்குவது போன்ற சில நற்பணிகளை தொடங்கி வைத்தார். அதுதான் அங்கு அவர் காலடித் தடம் பதிந்த கடைசி நாள். மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிற்குழுக்களுக்கு வாகனங்கள், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்குயேற்றார். அங்கு வந்திருந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தான் நடமாடும் ஜெயலலிதாவை கடைசியாகப் பார்த்த பொதுஜனங்கள்.
Photo Courtesy: L.vivian.richard
பரப்பன அக்ரஹாரா சிறை:
தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா கடைசியாக சென்ற வெளிமாநிலம் கர்நாடகம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெறுவதற்காக 2014 செப்டம்பர் 27-ம் தேதி அங்கு சென்றார், ஜெயலலிதா. ஆனால், 20 வருடமாக இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவை பழிவாங்கியது. குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் 22 நாட்களை கழிக்க வேண்டியதானது.
கடைசி வழக்கு - ஜெயலலிதாவின் வாழ்வில் 20 ஆண்டுகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்த வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு. அவர் 1996-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போது தொடரப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய வழக்கு. இன்று ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனால், அவர் சந்தித்த அந்த கடைசி வழக்கு இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.
அப்போலோ... அறை எண்: 2008:
கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரியாக மாறிவிட்டது க்ரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்போலோ மருத்துவமனை. அப்போலோ மருத்துவமனையில் அறை எண் 2008ல் ஜெயலலலிதா அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு அறை மாற்றப்பட்டார் , என்ற செய்தியும் சொல்லப்பட்டது. ஆனால், வெளியில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் அம்மா மீண்டு வருவார் என 75 நாட்களாக காத்துக்கிடந்தனர்.
புகழ் பெற்ற மருத்துவமனை, தலை சிறந்த டாக்டர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், என பல்வேறு தரப்பினரும் முயற்சித்தும் பயனளிக்காமல் ஜெ-வின் உயிர் பிரிந்தது. மேலும் முதல்வர் இருந்த அறையாகச் சொல்லப்பட்ட அறை எண் 2008, இரண்டாவது தளத்தில் இருந்தது. மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று அப்பல்லோ மருத்துவமனையை ஜெயலலிதாவின் இன்னொரு வீடு மாதிரியாக கருதி பலரும் புகைப்படம் எடுத்துச் செல்வது சற்று விநோதமாகவே உள்ளது.
ராஜாஜி ஹால்
பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட சென்னை ராஜாஜி ஹாலில் தான் மறைத்த ஜெயலலிதாவின் உடல் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ராஜாஜி ஹால்:
இதே ராஜாஜி ஹாலில் 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின் போது ஜெயலலிதாவை சிலர் அவமரியாதை செய்து இறக்கி விட்டனர். ஆனால் அந்த பெண்மணிக்கு,அதே ராஜாஜி ஹாலில் "தேசிய கொடி" போர்த்தபட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது!!! இது தான் அந்த மாபெரும் பெண்ணின் சாதனை..
மெரினா கடற்கரை
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் நினைவிடம் அமைக்க உள்ளதாக தெரிகிறது.
மெரினா கடற்கரை
சமாதியைப் பொறுத்தவரை, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. தற்போது, இந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மெரினா கடற்கரை
கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது. ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம் என்பதால் தமிழக அரசின் ஒப்புதலுடன் இந்த இடத்தில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது. அதே நேரம், நினைவிடம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாட வேண்டும். எனவே, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
Photo Courtesy: Balasubramanian G Velu
மெரினா கடற்கரை
அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா' என்று சொல்லப்படுகிறது.
Photo Courtesy: Harismahesh