சிவக்குமார் என்ற தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய நடிகரின் மகனாக பிறந்தாலும் எந்த பகட்டும் இல்லாமல் சினிமா வாடையே இல்லாமல் 'சரவணனாக' வளர்ந்து கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த சூர்யா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவர்.
ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு காதலனாக, கணவனாக, நண்பனாக, கணவனாக முக்கியமாக சமூக சேவகராக எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் சூர்யா என்றால் பிடிக்கும். இன்று அவர் நடித்த மாஸ் என்கிற 'மாசு' படம் வெளியாகிறது. இந்த நேரத்தில் அவர் படங்களில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
காக்க காக்க :
சூர்யாவுக்கு எல்லா வகையிலும் திருப்புமுனையாக அமைந்த படமென்றால் சந்தேகமே இல்லாமல் அது காக்க காக்க தான். போலீசுக்கே உண்டான கம்பீரம், பெண்களிடம் சரியாக பேச கூட தெரியாத மென்மையான முரட்டுத்தனம், தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் என சூர்யாவை முன்னணி கதாநாயகனாக உயர்த்திய படம் காக்க காக்க.
காக்க காக்க :
இந்த படத்தில் இடம்பெற்ற 'என்னைக் கொஞ்சம் மாற்றி' பாடலில் சூர்யாவும் ஜோதிகாவும் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பயணம் போவார்கள். இனிமையான அந்த பயணத்தை பற்றிய இன்னும் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.
கிழக்கு கடற்கரை சாலை (ECR) :
காதலியுடன் பயணம் செல்ல ஆசைப்படுபவர்களுக்கு சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரையிலான 150 கி.மீ தூர கிழக்கு கடற்கரை சாலை பயணத்தை விட அழகானதொரு பயணம் இருக்க முடியாது. கடற்கரையோரத்தில் நெரிசல் இல்லாத சாலையில் பயணிக்கும் போது நமக்குள் எழும் உணர்வுகள் அழகியல் ததும்பும் கவிதைகள் போல இருக்கும்.
Photo:Looking -> Lens
மகாபலிபுரம் :
இந்த கிழக்கு கடற்கரை சாலையில் சில முக்கியமான சுற்றுலாத்தலங்களும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட மகாபலிபுரம் கற்கோயில்கள் ஆகும். இங்கிருக்கும் அர்ஜுனன் பாறை. வராக குகை, பஞ்ச ரத சிற்பங்கள் போன்றவை நம்மை பல்லவர் காலத்துக்கே அழைத்து செல்பவை. வரலாறு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு நிச்சயம் வாருங்கள்.
Photo:Vikas Rana
கோவளம் கடற்கரை:
அசுத்தம் நிறைந்த சென்னை கடற்கரைகளை பார்த்து பழகியவர்களுக்கு கோவளம் கடற்கரை நிச்சயம் ஆனந்த அதிர்ச்சியை தரும். சுத்தமான கடற்கரையும், அமைதியான கடற்பகுதியையும் கொண்ட இடம் இந்த கோவளம் கடற்கரையில் இருந்து பாய்மர படகு மூலம் சில கி.மீ கடலில் பயணித்து sea-diving என்னும் சாகச விளையாட்டிலும் ஈடுபடலாம்.
Photo:Sarath Kuchi
முட்டுக்காடு படகு சவாரி :
ECR ரோட்டில் அமைந்திருக்கும் மற்றொரு அற்புதமான பொழுதுபோக்கு இடம் முட்டுக்காடு படகு சவாரி. 'Backwater' எனப்படும் எவ்வித அலைகளும், சலனமும் இல்லாத கடற்பகுதி இங்கே அமைந்துள்ளது. பல்வேறு வகையான படகுகள், கடல் விளையாட்டுகள் மற்றும் கடலில் செல்லும் ஸ்கூட்டர் போன்றவை இங்கு உள்ளன. சூரியன் மறையும் மாலை நேரத்தில் சூரிய கதிர்கள் கடலை தங்கக்குளம் போல தோன்ற வைக்கும் நேரம் படகு சவாரி செய்ய ஏற்றது . விதவிதமான கடல் உணவுகள் கிடைக்கும் உணவகங்களும் இங்கு நிறையவே உள்ளன. சென்னையில் இருந்து 36கி.மீ தொலைவில் ECR சாலையில் இது அமைந்திருக்கிறது.
Photo:Simply CV
பாண்டிச்சேரி :
இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என்று சொல்லும் அளவிற்க்கு பாண்டிச்சேரியில் பிரஞ்சு காலனியத்தின் தாக்கம் இன்றும் உள்ளது. நேர்த்தியான விதிகள், பிரஞ்சு கால கட்டிடங்கள், அமைதியான சூழல் போன்றவை சுற்றுலாப்பயணிகளை கவருகின்றன. அரவிந்தர் ஆஷ்ரமம், ஆரோவில் சர்வதேச நகரம்,மணக்குள விநாயகர் கோயில், பழங்காலத்து கோட்டைகள், போர் நினைவு சின்னங்கள், அழகிய கடற்கரைகள் போன்றவை இந்த நகரக்கு வருபவர்களுக்கு விருந்து படைக்கின்றன. கூடவே பிரஞ்சு உணவகங்களில் அந்நாட்டு உணவுகளை சுவைபார்க்கலாம்.
Photo:Abhinay Omkar
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை :
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" இந்த பாடலை கேட்ட அந்த முதல் தருணம் நமக்குள் ஏற்ப்பட்ட பரவசம் வார்த்தைகளில் அடங்காதது. இன்று வரை தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகாக ஒரு காதல் பாடல் படம்பிடிக்கப்பட்டதே இல்லை என்று தாராளமாக சொல்லலாம். ஹேரிஸ் ஜெயராஜின் இசையும், ஹரிஹரனின் குரலும் அப்படியொரு 'மேஜிக்கல்' அனுபவத்தை நமக்கு கொடுக்கும். முன்பே சொன்னது போல அவ்வளவு அழகாக படம்பிடிக்கப்பட்ட இந்த பாடலில் வரும் இடங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்தியா கேட் & கேட் வே ஆப் இந்தியா :
டெல்லி மற்றும் மும்பை நகரங்களின் முகமாக திகழும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் தான் இந்தியா கேட் மற்றும் கேட் வே ஆப் இந்தியா ஆகும். வேல்ஸ் நாட்டு இளவரசரின் இந்திய வருகையை நினைவுகூரும் விதமாக கட்டப்பட்ட கேட் வே ஆப் இந்தியா மும்பையின் முக்கிய சுற்றுலா அமசங்களில் ஒன்றாகும். அரபிக்கடலின் அழகை ரசித்தபடியே அருமையானதொரு மாலைப்பொழுதை இந்த கேட் வே ஆப் இந்தியா பகுதியில் செலவிடலாம்.
இந்தியா கேட் :
முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளின் சார்பாக போரிட்டு மடிந்த 82,000 இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டதே இந்தியா கேட் ஆகும். ரோம் மாநகரில் இருக்கும் கான்ஸ்டன்டைன் ஆர்ச் மற்றும் ஆர்ச் தே திரோம்பே போன்றவற்றின் வடிவத்தை போன்றே இதுவும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் கீழே 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அனையா ஜோதியான 'அமர் ஜோதி' என்ற நினைவகமும் உள்ளது. டெல்லிக்கு செல்லும் அனைவரும் மறக்காமல் செல்ல வேண்டிய ஓரிடமாகும் இது.
தாஜ் மஹால் :
இந்த பாடலின் இறுதியில் சூர்யாவும், சமீரா ரெட்டியும் அதிகாலையில் தாஜ் மஹால் முன்னே நடனமாடுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பிஞ்சுக்குழந்தையின் உள்ளங்கை இளஞ்சிவப்பு நிறம் வானில் படர தாஜ்மஹால் பின்னணியில் அத்தனை அற்புதமாக அக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும். தாஜ்மஹால் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்களையும் ஆக்ராவை எப்படி அடைவது போன்ற விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்திடுங்கள்.
இங்கு குறிப்பிட்டுள்ள இடங்களை தவிரவும் சூர்யாவின் படங்களில் வரும் நல்ல இடங்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் எங்கள் பேஸ்புக் பக்கத்தில் அதனை பகிர்ந்திடுங்கள்