விஞ்ஞானம் எங்கே முடிகிறதோ அங்கே இந்திய ஆன்மிகம் துவங்குகிறது என்பது அறிஞர் வாக்கு. அங்கேதான் தமிழர் கட்டிடக்கலையும் துவங்கி இருக்க வேண்டும். கட்டிடக்கலையும், ஆன்மீகத்தையும் போற்றி வளர்த்த திருநாடு, யானை பூட்டி நெற்ப்புடைத்த சோழ நாடாகும். பக்தி மனம் பரவ அங்கே ஒரு ஆன்மீக சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்
தமிழர்களின் ஆன்மீக தொண்டிற்கும், கட்டிடக்கலையியல் ஆளுமைக்கும் சான்றாய் விளங்கும் சிவபெருமானின் திருக்கோயில் இந்த பிரகதீஸ்வரர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ராஜ சோழன் கட்டிய இக்கோயில் இன்றும் விஞ்ஞானம் விடையளிக்க முடியாத விடுகதை. ஒற்றைக்கல்லில் செதுக்கிய நந்தியும், உயிர் பெற்று விட்டனவோ என்று நினைக்கத்தூண்டும் சிற்பங்களும் இதை பற்றி படிக்கும் போதே இங்கு பயணப்பட தூண்டுபவை.
புகைப்படம் : Prabhu B Doss
தமிழகத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலாத்தளமான இக்கோயிலை எப்படி அடையலாம்? திருச்சி வரை விமானம் மூலம் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது கார் மூலம் இக்கோயிலை அடையலாம். அது தவிர தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன.
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில்
'கோயில்களின் நகரம்' என்று போற்றப்படும் அளவிற்க்கு கோயில்களை கொண்டுள்ள நகரம் கும்பகோணம். இங்கு அமைந்திருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோயில் சைவம் போற்றி வளர்த்த திருத்தளங்களுள் முக்கியமானது. கலியுகத்தின் துவக்கத்தில் உயிர் விதைகள் அடங்கிய கும்பத்தை பிரம்மன் இங்கு வைக்க முற்ப்பட்டதாகவும் அதனை வேடன் வேடத்தில் இருந்த சிவா பெருமான் அம்பு எய்தி அக்கும்பத்தினை உடைத்து உயிர்களை பெருகச்செய்ததாகவும் இத்தள புராணம் கூறுகிறது.
புகைப்படம் : indiawaterportal.org
இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகப்புகழ் பெற்ற மஹாமகத்திருவிழாவில் பங்கேற்று மஹாமகக்குலத்தில் நீராட நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகின்றனர். கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு அப்படியே கும்பகோணம் ஸ்பெஷல் டிகிரி காபியையும் சுவைபார்த்து விட்டு வரலாம்.
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
சிவபெருமான் நடனத்தின் சக்கரவர்த்தி நடராஜராக உமையாள் சிவகாமி அம்மனுடன் வீற்றிருக்கும் கோயில் இது. பஞ்ச பூத ஸ்தலன்களுள் ஆகாயத்தை குறிக்கும் இக்கோயில் பரதநாட்டிய கலையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. சோழ மன்னன் பிராந்தகனால் வேயப்பட்ட பொற்கூரை இக்கோயிலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. சிதம்பர ரகசியம் புதைந்துள்ள இக்கோயிலில் சோழர் காலத்தில் செய்யப்பட்ட நுட்பமான வெண்கல சிலைகளை இங்கு காண முடியும்.
புகைப்படம் : Sudhamshu Hebbar
வருடாவருடம் சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும் 'நாட்டியாஞ்சலி' நிகழ்ச்சி நடனக்கலையின் சங்கமமாக திகழ்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்ட பெரிய கோயில்களுள் பழமை வாய்ந்ததான இது அளவிட முடியாத அதிசயங்களையும், ரகசியங்களையும் தன்னுள் கொண்டபடி காலத்தை வென்று நிற்கிறது. சிதம்பரத்தை சாலை மற்றும் ரயில் மூலமாக அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து 40 கி.மீ தொலைவில் NH-45A சாலையில் இந்நகரம் உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
புகைப்படம் : R E B E L TM®
காவிரி ஆற்றின் குறுக்கே சிறு தீவு ஒன்றில் அமைந்திருக்கும் இக்கோயில் வைஷ்ணவ திவ்ய தேசங்களுள் முதன்மையானது. ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய கோயில் கோபுரத்தை கொண்டுள்ள இக்கோயிலில் உள்ள மண்டபத்தில் தான் கம்பர் கம்பராமாயணத்தை எழுதியதாக கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களாலும் பாடப்பட்ட கோயிலான இது பல்வேறு கால கட்டங்களில் நடந்த இஸ்லாமிய, ஐரோப்பிய படையெடுப்புகளால் சிதளம் அடைந்தது.
புகைப்படம் : Jean-Pierre Dalbéra
இங்கிருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் களி மண்ணால் செய்யப்பட்டதா அல்லது உளி கொண்டு உருவானதா என்று வியக்க வைக்கும் அளவு நுட்பமாக செய்யப்பட்டுள்ளன. மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவும், பங்குனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவும் இங்கு நடைபெரும் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும். இது திருச்சி மாநகருக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. காக்கும் கடவுளான பெருமானை இங்கு தரிசித்து வர சிறந்த இடம் இந்த ஸ்ரீரங்கம்.