சவக்குழியில் விழவிருந்த தேனினிய தமிழை தன்பாற்கொண்டு பாரெங்கும் அதன் விதை பரப்பிய முண்டாசுக் கவிஞன் சுப்பரமணிய பாரதியின் 122ஆவது பிறந்த தினம் இன்று. இவன் வாள் கொண்டு போராடவில்லை ஆனால் இவனது சொல் வாளை கட்டிலும் ஆயிரம் மடங்கு ஆழமாய் பாய்ந்தது. இவன் கைகளில் துப்பாக்கி ஏந்தவில்லை ஆனால் இவன் வடித்த பாடலின் உக்கிரம் சூரியனையும் விஞ்சியது.
சிறிதொரு சமஸ்தானத்தில் பிறந்து பாரதம் முழுக்க பயணித்து சொல்லாலும் செயலாலும் முத்திரை பதித்து நவீன தமிழின் முகமாய் திகழும் பாரதியார் வாழ்ந்த, அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த இடங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
எட்டயபுரம், திருநெல்வேலி:
சுப்பையாவாக பிறந்து தன் ஆற்றலின் வீச்சை சிறு வயதிலேயே உலகுக்கு காண்பித்து 'பாரதி' என்னும் நாமம் பெற்ற இடம் எட்டயபுரம். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய நகரம் பிரிட்டிஷ் காலத்தில் சமஸ்தானமாக திகழ்ந்திருக்கிறது.
வீரபாண்டிய காட்டபொம்மனை வெள்ளையர்களிடம் காட்டிகொடுத்த எட்டப்பனின் பெயரால் தான் இந்த ஊர் எட்டயபுரம் என்று விளிக்கப்படுகிறது.
Photo: Wikipedia
எட்டயபுரம், திருநெல்வேலி:
பாரதியாருக்கு 'பாரதி' என்று பெயர் சூட்டப்பட்ட எட்டயபுரம் அரண்மனை சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
Photo: Wikipedia
எட்டயபுரம், திருநெல்வேலி:
மேலும் பாரதியார் அவர்களின் இளமைக்காலத்தை கழித்த வீட்டை அரசு இன்று நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.. பாரதியார் பயன்படுத்திய பொருட்கள் சிலவும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரதியின் மீது பற்றும் ஆர்வமும் இருந்தால் நிச்சயம் எட்டயபுரம் சென்று வாருங்கள்.
Photo:Sundar
பாரதியை மாற்றியமைத்த பெனாரஸ்:
பெனாரஸ் எனப்படும் இன்றைய காசி நகரம் தான் பாரதியை இன்றுநமக்கு தெரிந்த பாரதியாக உருமாற்றியது. இங்கே அவர் தன்னுடைய கல்வியை தொடர்ந்தது மட்டும் இல்லாமல் பாரதத்தின் ஆன்மாவை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியிருக்கிறது.
Photo:Dhayanithi
பாரதியை மாற்றியமைத்த பெனாரஸ்:
ஹிந்தி சமஸ்கிரதம் போன்ற மொழிகளை கற்றதோடு மட்டும் இல்லாமல் இங்கு தான் முண்டாசு அணியவும், தாடி வளர்க்கவும் ஆரம்பித்திருக்கிறார். அன்று அவர் யூகித்திருக்க வாய்ப்பில்லை முண்டாசும் முறுக்கு மீசையுமே அவரது அடையாளமாக மாறும் என்பதை.
Photo:Pushpendra Gautam
பாண்டிச்சேரி:
வெள்ளையருக்கு எதிராய் தீர்க்கமாய் தன் எழுத்து கொண்டு போராடி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக எழுதியதற்காக கைதுசெய்யப்படும் சூழல் உருவாகவே பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரி நகரத்திற்கு வந்து அவரது எழுத்துப்பணியை தொடர்ந்திருக்கிறார்.
Photo:Aravindaraja
பாண்டிச்சேரி:
இன்றைய பாண்டிச்சேரியின் அடையாளங்களாக திகழும் அரவிந்தர் ஆஸ்ரமம் மற்றும் ஆரோவில்லே நகரம் ஆகியவை உருவாக காரணமாக இருந்த அரவிந்தரை சந்தித்து தன்னையும் புரட்சியில் இணைத்திருக்கிறார். இங்கே இவர் வாழ்ந்த இடம் இன்றும் பாண்டிச்சேரி அரசால் பராமரிக்கப்படுகிறது.
Photo:Arunankapilan
மதராஸ்:
பாரதியார் தன் கடைசி காலத்தை சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் கழித்திருக்கிறார். இங்கு தான் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பார்த்தசாரதி கோயில் அமைந்திருக்கிறது. இங்கே வருவதை வழக்கமாக கொண்டிருந்த பாரதி இந்த கோயிலில் உள்ள யானைக்கு உணவு தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
photo:Mohan Krishnan
மதராஸ்:
ஒருநாள் இவர் அதற்க்கு உணவு கொடுக்க வருகையில் அதனால் தாக்கப்பட்டு அதன் பிறகு சில மாதங்கள் கழித்து உடல்நலம் குன்றி தனது 38ஆவது வயதில் இறந்திருக்கிறார். பெரும் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு ஒருமுறையேனும் சென்று இறைவனை தரிசித்து விட்டு அப்படியே பாரதியார் தாக்கப்பட்ட இடத்தையும் கண்டு வாருங்கள்.