பியர் கிரில்ஸ், உயிர் பிழைத்திருக்க மனிதன் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டியிருக்கும் என்பதை உலகின் மிக ஆபத்தான இடங்களுக்கே சென்று கனவில் கூட நாம் செய்ய தயங்கும் விஷயங்களை செய்து உயிர்பிழைப்பது எப்படி என்பதை காண்பிப்பார். அவர் செல்வது போலவே இந்தியாவில் இருக்கும் மிக ஆபத்தான அதேசமயம் பல சுவாரஸ்யமான அம்சங்களும் நிறைந்த இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனமான தார் பாலைவனத்திற்கு ஒரு சுற்றுலா போகலாம் வாங்க.
கொஞ்சம் கடுமையான பயணம் என்பதை தாண்டி பல சுவாரஸ்யமான அம்சங்களையும் இந்த பயணத்தின் போது நாம் கண்டு ரசிக்கலாம்.
தார் பாலைவனம் - ராஜஸ்தான் :
இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனமான 'தார்' சுற்றுலாவுக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. கொடுமையான வெப்ப பகுதியாக இது இருந்தாலும் இந்த பகுதியிலும் குறிப்பிட்ட சில தாவர வகைகளும், விலங்குகளும் உயிர் வாழ்கின்றன. அதுமட்டுமில்லாமல் பாலைவனதிற்கே உரிய சில அம்சங்களை உள்ளடக்கிய 'Eco Tourism' எனப்படும் சுற்றுலாவும் இங்கே நடத்தப்படுகிறது.
Photo:Andrew Miller
தார் பாலைவனம் - ராஜஸ்தான் :
இந்த பாலைவனத்தில் ஒட்டகங்களின் மேல் அமர்ந்து பயணம் செய்யலாம், இரவு நேரத்தில் குளிர்ந்த பாலைவன மணலில் 'கேம்ப்' அமைத்து தங்கலாம், மேலும் பலைவனங்களிலேயே ராஜஸ்தானின் பாரம்பரிய முறைப்படி சமைக்கப்படும் உணவுகளை சுவைக்கலாம்.
Photo:Sandro Lacarbona
தார் பாலைவனம் - ராஜஸ்தான் :
நீண்ட தூர பயணங்களில் விருப்பமுடையவர்கள் இந்த தார் பாலைவனத்தின் ஊடாக ராஜஸ்தானின் தலைநகரில் இருந்து தார் பாலைவனத்தில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஜெய்சால்மர் வரையிலான 550 கி.மீ தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளலாம்.
Photo: Flickr
புஸ்கர் திருவிழா :
கார்த்திகை ஏகாதசியில் இருந்து கார்த்திகை மாத பௌர்ணமி வரை ஐந்து நாட்கள் இந்த புஷ்கர் கால்நடைத் திருவிழா நடைபெறுகிறது. ஏறத்தாழ 50,000 ஒட்டகங்கள் விற்பனைக்காக இங்கே கொண்டு வரப்படுகின்றன. இது தவிர ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை போன்றவையும் இங்கே தனித்தனியாக நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்களில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் வரை இங்கே வருகின்றனர்.
Photo:Pushkar Fair
புஸ்கர் திருவிழா :
இங்கு விற்பனைக்காக வரும் ஒட்டகங்கள் ஒரு மணப்பெண்ணுக்கு நிகராக அலங்கரிக்கப்படுகின்றன. ஓட்டப்பந்தயம், நடனம் போட்டிகளில்(ஆம்! ஒட்டக நடனப் போட்டி) வெற்றி பெரும் நல்ல ஆரோக்கியமான , இளமையான ஒட்டகம் ஒன்று பத்து லட்சம் வரை விலை போகிறது.
Photo:By mantra_man
சந்தையில் நடக்கும் கூத்துகள்:
கால்நடை சந்தை தவிர இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு என்றே பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கயிறு இழுத்தல், உரியடி, வெளி நாட்டவரும் இந்தியர்களும் மோதும் கபடிப்போட்டி, மற்றும் நீளமான மீசை வைத்திருப்பவர்களுக்கான மீசை போட்டியும் இங்கே நடக்கிறது. மாலை நேரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்புற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 2014ஆம் ஆண்டிற்கான புஷ்கர் கால்நடை சந்தை அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை நடக்கவிருக்கிறது.
Photo:Sumith Meher
புனித நீராடல் :
புஷ்கரில் கால்நடைச்சந்தை நடக்கும் கார்த்திகை பௌர்ணமி அன்று படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால் இங்கு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் குளத்தில் புனித நீராட ஏராளமான யாத்திரிகர்களும் புஷ்கருக்கு வருகை தருகின்றனர்.
Photo:alenka_getman
ஜெய்சால்மர் :
ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஜெய்சால்மர் நகரம். தங்கத்தில் தான் கட்டப்பட்டதோ என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இந்நகரத்தில் இருக்கும் எல்லாப் பழமையான கோட்டைகளும், கட்டிடங்களும் மஞ்சள் நிற மணல் கற்களால் கட்டப்பட்டுள்ளன.
Photo:Adrian Sulc
ஜெய்சால்மர் :
உலகில் இருக்கும் மிகப்பெரிய கோட்டை வளாகங்களுள் ஒன்றான ஜெய்சால்மர் கோட்டை கி.பி. 1156 ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தின் நடுவில் திரிகுட மலையின் மேல் கம்பீரமாக இது வீற்றிருக்கிறது. இக்கோட்டையினுள் ராஜ் மஹால் என அழைக்கப்படும் ராஜ அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தினர் வசித்து வந்த இந்த அரண்மனையினுள் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த அரச கட்டில், சிம்மாசனம், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை இன்றும் நாம் காணலாம். அது தவிர லட்சுமிநாதர் ஆலயமும் பெரும் செல்வம் படைத்த வணிகர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டிய ஹவேளிக்களும் இதனுள் உள்ளன.
Photo:Daniel Mennerich
படா பாக்:
பெரிய தோட்டம் என அர்த்தப்படும் இந்த இடம் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 6கி.மீ தொலைவில். அமைந்திருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தை தோற்றுவித்த மகாராஜா ஜெய்சால் சிங்கின் வழிவந்தவரான மகாராஜா இரண்டாம் ஜெய் சிங் பாலைவனத்தின் நடுவே ஒரு நந்தவனத்தை உருவாக்க விரும்பி ஓரிடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் அதனைசுற்றி சத்த்ரிக்கள் எனப்படும் ஓய்வரைகளையும் கட்டியுள்ளார். அவரது கனவான அழகிய தோட்டம் அவரின் மறைவுக்கு பின் சரியான பராமரிப்பின்றி அழிந்து விட்டாலும் இன்றும் படா பாக்கை சுற்றி சத்த்ரிக்கள் நிலைத்து இருக்கின்றன. மாலை நேரத்தில் இதமான வெயில் நிலவும் வேலையில் இங்கே சென்று பாலைவனத்தின் அழகை ரசிக்கலாம்.
Photo:Ankit khare
சலீம் சிங் ஹவேளி:
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சலீம் சிங் ஹவேளியானது அதன் தனித்துவமான வடிவமைப்பினால் நம்மை ஆச்சர்யம் கொள்ளசெய்கிறது. இதன் முதல் தளம் குறுகியதாகவும் இரண்டாம் தளம் மிகப்பெரியதாகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளை கொண்டதாகவும் இருக்கிறது. இதில் மண்ணை மேலும் ஆச்சரியம் கொள்ள வைக்கும் செய்தி என்னவென்றால் இதன் மொத்த கட்டுமானத்திலும் கான்கிரெட் கலவையோ, சிமேண்டோ பயன்படுத்தப்படவே இல்லை. நம்பவே முடியாத அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த இடத்தை ராஜஸ்தான் பயணத்தின் கட்டாயம் சென்று பாருங்கள்.
Photo:Ashwin Kumar
குல்தாரா-சபிக்கப்பட்ட கிராமம்:
ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது குல்தாரா என்ற கைவிடப்பட்ட கிராமம். நேரான, அகலமான வீதிகள், தெளிவான திட்டமிடலுடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் என நாகரீகம் வளர்த்த ஒரு நகரமாகவே வரலாற்று காலத்தில் இந்த குல்தாரா திகழ்ந்திருக்கிறது. குல்தாரா கிராமத்தின் தலைவரின் மகள் மீது மோகம் கொண்டு ராஜஸ்தான் தீவான் அவளை அடைய திட்டமிட்டதாகவும் அப்படி நடக்காமல் இருக்க ஒரே இரவில் குல்தாரா கிராமத்தை சேர்ந்தவர்களும் அதனை சுற்றியுள்ள 84 குக்கிராமங்களையும் சேர்ந்த அனைவரும் ஒரே இரவில் ஊரை காலி செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. வேறுயாராவது தங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க நினைத்தால் அவர்கள் இறப்பை சந்திப்பார்கள் என கிராம மக்கள் குல்தாராவை சபித்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் அவர்கள் காலி செய்தபிறகு இன்றும் வசிப்பார் யாரும் இன்றி அமானுஷ்யமாக காட்சியளிக்கிறது குல்தாரா.
Photo:Suman Wadhwa
ராஜஸ்தான் :
இது போல இன்னும் பல சுவாரஸ்யமான அனுபவங்களை பெற நிச்சயம் ஒருமுறை இந்த தார் பாலைவனத்திற்கு ஒருமுறையேனும் சுற்றுலா வாருங்கள்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத்தளங்களை பற்றிய தகவல்களையும் அங்கிருக்கும் தாங்கும் விடுதிகளை பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.