கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் காணப்படும் பிரமிக்கவைக்கும் ஒரு அழகிய மலை உச்சம் தான் இந்த பட்டால்சூ ஆகும். மணலியில் தொடங்கும் இந்த பயணம், ஷனாக், சோலாங்க், பூர்வா வழியாக தொடர்கிறது. அப்படி என்ன தான் மதியை மயக்கும் இயற்கை சூழல் இந்த பகுதியில் நம் மனதை ஆள்கிறது? வாங்க கீழ்க்காணும் பத்தியின் மூலம் அதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பயணம் என்று வரும்பொழுது, சொந்தங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியை பறிமாறிக்கொள்ளும் ஒரு உணர்வில் தான் என்றுமே பலவித சந்தோஷங்கள் நமக்கு கிடைக்கிறது. என் சொந்தங்களிடம் 'வெளியில் செல்லலாம்' என்று வார்த்தைகளை நான் உதிர்த்தாலே போதும்! அவர்கள் ஆர்ப்பாட்டத்துடன் கிளம்பிவிடுவார்கள். நானும் செல்லும் இடத்தில் பதிவு செய்யும், நினைவு புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி மகிழ்வேன். இமயமலையின் அழகினை அன்னாந்து பார்த்து, அவர்களும் வாயடைத்து போய் அன்று நின்றார்கள். எவ்வளவு அழகான காட்சிகளை இயற்கை அன்னை நமக்கு கர்வமின்றி வழங்குகிறாள்? என அதிசயித்து போய் தான் அந்த காட்சிகளை அவர்கள் கண்டார்கள்.
நான் எவ்வளவு பயணங்கள் செல்வதாக இருந்தாலும்... அவர்களிடம் கூறாமல் செல்வதே இல்லை. அப்படி தான், நான் பட்டால்சூ பயணம் பற்றி என் சொந்தங்களிடம் கூற, 'நான், நீ' என போட்டி போட்டுக்கொண்டு பயணத்திற்கு தயாரானார்கள். ஆனால், இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கம் என்பதால், பெரிதாக நான் ஒன்றும் அவர்கள் செயலை பார்த்து ஆச்சரியபடவில்லை. பெங்களூரிலிருந்து சண்டிகருக்கு புறப்பட தயாராகிய நாங்கள் ஆகாய மார்க்கத்தின் மூலமாக செல்ல முன்பதிவு செய்தோம். முன்பதிவு வெற்றிகரமாக நிறைவேற, அடுத்து என்ன? என்னும் கேள்வி எங்கள் மனதில் ஒலிக்க, மலையை ஏறுவதற்கு தேவையான அத்தியவாசிய பொருட்களை வாங்கும் நோக்கத்துடன் கடைகளில் ஏறி இறங்கினோம்.
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் காணப்படும் மதி மயக்கும் அழகிய இடம் தான் இந்த பட்டால்சூ உச்சமாகும். இந்த இடம், கண்களுக்கு காட்சிகளை படைத்துக்கொண்டிருக்கும், குள்ளுவாளி பள்ளத்தாக்கின் தலைமையில் காணப்படுகிறது. இந்த பள்ளத்தாக்கினை சுற்றி நாம் பயணிக்க, முதலீடு செய்யத்தக்க ஒரு இடமாகவும், கண்டு திரும்புவோர் மனதினை கொள்ளை கொள்ளும் ஒரு இடமாகவும் அமைந்து நம் மனதினை இனிமை கொண்டு வருடுகிறது.
மணலியில் ஆரம்பம் ஆகும் எங்கள் பயணம், ஷனாக், சோலாங்க், பூர்வா வழியாக தொடர்கிறது. இந்த பயணத்தின் போது, பனிகளை ஆடைகளாக போர்த்திக்கொண்டிருக்கும் மலைகளும், ஊசியிலை காடுகளும், பச்சை பசேல் என காணப்படும் புல்வெளிகளும், வண்ணங்களால் பூசப்பட்ட பூத்து குலுங்கும் மலர்களும், ஒலியினை பிரதிபலித்து கொண்டிருக்கும் ஓடைகளும் நம் மனதை தூக்கி கொண்டு இயற்கையின் இடையில் மறைத்து வைக்கிறது.
இந்த பயணத்திற்கு ஏதுவானதொரு கால நிலை:
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில், இந்த பயணம் சிறப்பானதொரு பயணமாக நமக்கு அமைகிறது. குளிர்க்காலத்தின் போது நிலச்சரிவுகளின் தாக்கம் அதிகம் காணப்பட, பயணத்தை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். கண்மூடி தனமாக பெய்யும் மழையின் தாக்கம், பருவமழை காலங்களில் அதிகம் காணப்பட, அந்த நேரங்களில் நம் பயணத்தை தவிர்ப்பதும் மிகவும் நல்ல யோசனையாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலங்களில் பனிப்பொழிவின் தாக்கம் குறைவாகவே இருக்க, மலையை மூடிய பனிகளை கடக்க நமக்கு சிரமம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள்:
மலை ஏற பயன்படும்... முதுகில் மாட்டும் தன்மை கொண்ட பைகள், மலை ஏற தேவைப்படும் காலணி வகைகள், தலை முதல் கால் வரை கவரும் தன்மை கொண்ட ஓவர்கோட்டுகள், சிற்றுண்டிகள், வாட்டர் பாட்டில்கள், சூரிய கதிர்களிலிருந்து காத்து கொள்ள பயன்படும் சாயல்கள், தலையை பாதுகாத்து கொள்ள பயன்படும் தொப்பி, சூரிய திரைகள், கிருமி நாசினி (சோப் வகைகள்), உதட்டு தைலம், மழையில் இருந்து காத்துக்கொள்ள உதவும் ஆடை, வெப்பங்கள், வெதுவெதுப்பான ஆடைகள், கால் உறைகள், கையுறைகள், மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டி ஆகியவை நம் பயணத்திற்கு அத்தியவாசிய பொருளாக அமைந்து நம் பயணத்தின் கடினத்தை குறைக்கிறது.
இறுதியாக நாங்கள் எதிர்பார்த்த நாள் எங்கள் கண் முன் தோன்ற, நாங்கள் சண்டிகரிலிருந்து மணலியினை நோக்கி புறப்பட்டோம். வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு புறப்பட, எங்களுக்கு உடல் சற்று சோர்வாகவே இருந்தது. அதனால், பயணத்தின் முன்பு சற்று அயர்ந்து தூங்கினோம். அதன் பிறகு மணலியில் எங்கள் பயணம் இனிதே தொடங்கியது.
நாள் 1: மணலி - சோலாங்க் நல்லா
மணலியிலிருந்து புறப்பட்ட நாங்கள், இடது புறத்தில் காணப்பட்ட பியஸ் நதி வழியாக எங்கள் பயணத்தை மிருதுவாக நகர்த்தினோம். அதன் பிறகு, புர்வாஹ், ஷனாக் மற்றும் கோஷல் கிராமங்களை கடந்து நாங்கள் செல்ல, அதன்பின் ஒரு ஆற்றினை கடந்தோம். அதன் அருகில் எங்களுக்கு காட்சியளித்த சோலாங்க் நல்லா, எங்கள் மனதை கொள்ளை அழகால் கவர்ந்து மனதினை அமைதி கொண்டு ஆட்சி செய்தது. அந்த நதிகளில் இருந்து வழிந்த நீர் எங்களை மிரட்ட, இயற்கையின் முன்பு சரணடைந்து நாங்கள் அங்கேயே கூடாரம் அமைத்து இரவு பொழுதினை கழித்தோம்.
நாள் 2: சோலாங்க் நல்லா - சகாதுக்
நாங்கள் இரண்டாம் நாளின் இன்றியமையாத பயணத்தின் முதல் தருவாயில், சோலாங்க் கிராமத்தின் வழியாக சென்றோம். அந்த மலைப்பகுதி பயணத்தின் முதல் பாதியில், நாங்கள் கண்ட அந்த கிராமம் தான், அந்த ஏரியாவில் அமைந்திருக்கும் கடைசி கிராமம் ஆகும். அங்கு ஆலோசனைகளின் வாயிலாக நாங்கள் கொண்டு சென்ற தண்ணீர் பாட்டிலை நிரப்பி கொண்டோம். அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட நாங்கள், மலை மேல் ஏற ஆரம்பிக்க, நட்பின் தன்மை நீங்காமல் அமைந்து காட்சியளித்த அந்த மலையின் உச்சத்தினை கண்டு ரசித்தோம்.
அந்த பகுதியில் களைப்பினை தளர்த்திக்கொள்ளும் நோக்கத்துடன் நாங்கள் ஓய்வெடுக்க, அந்த பகுதியில் தனித்தன்மையுடன் நாங்கள் கண்ட புதிய பறவைகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எங்களுடன் வந்த வழிக்காட்டி, அந்த பறவைகளை பற்றி சில வார்த்தைகள் கூற, அந்த இடத்தை விட்டு வெளியில் வர இயலாமல் தவிக்கிறது நம் மனம். ஆம், மோனல் மற்றும் கலீஜ் வகையை சார்ந்த அந்த வான் கோழிகள்... எங்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. நாங்கள் 5 கிலோமீட்டர் முன்னோக்கி செல்ல, அந்த அழகிய திறந்த நிலையில் காட்சியளித்த புல்வெளிகள் எங்கள் மனதை வருடியது. அது தான் நாங்கள் இரண்டாம் நாளில் எதிர்ப்பார்த்து வந்த சகாதுக் கூடாரம் என தெரிந்த பிறகு, எங்கள் இரவு பொழுதை அங்கேயே செலவிட்டு அயர்ந்து தூங்கினோம்.
நாள் 3: சகாதுக் - பட்டால்சூ உச்சம்
அந்த முத்தான மூன்றாம் நாளின் காலைபொழுதில் சீக்கிரம் எழுந்து நாங்கள் புறப்பட்டோம். பட்டால்சூ உச்சத்தை அடையும் நாங்கள், மீண்டும் சகாதுக்கிற்கு திரும்பி வர, என்னுடைய கடிகாரத்தின் உதவியுடன் நாங்கள் இருக்கும் உயரத்தின் அளவை தெரிந்து அதிசயித்து தான் போனோம். ஆம், கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் காணப்படும், அந்த பட்டால்சூ உச்சம், எங்கள் மனதை கொள்ளை அழகால் கவர்ந்து, எல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பியது. ஆம், பட்டால்சூவை நோக்கி நாங்கள் நடக்க, அங்கு காணும் புல்வெளிகளும், கண்ட பல கட்டிஸ்களும் எங்களை மனதளவில் வருடி இன்பமானதொரு உணர்வினை தந்தது.
நாங்கள் 3 கிலோமீட்டர் முன் செல்ல, காடுகளின் அழகிய காட்சி எங்களை ஆபத்து என்னும் சொல்லால் அரவணைத்து, அன்புடன் வரவேற்றது. ஆம், அழகுக்கு பின்னால் தானே ஆபத்தும் இருக்கும். இன்னும் சில தூரங்கள் நாங்கள் நடக்க, மலைகளை மூடிய பனிகளின் காட்சி எங்கள் மனதினை குளிரூட்டியது. அது தான் பட்டால்சூ உச்சம் என்று தெரிந்து கொள்ளும் நம் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வருணிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் கூறவேண்டும். அதன் பிறகு எங்களை வழி நடத்தி செல்ல பாதை தென்படாமல் போக, நாங்கள் மலைமுகட்டில் நடக்க தொடங்கினோம். அங்கு நாங்கள் கண்ட அந்த ஆச்சரியமூட்டும் ஹனுமன் திப்பா, தியோ திப்பா, நட்பால் உருவாகிய உச்சம், சோலாங்க் பள்ளத்தாக்கு என காட்சிகளால் செல்லும் இடமெல்லாம் நம் மனம் ஆர்ப்பறித்து அமைதியடைய மறுக்கிறது என்று தான் கூறவேண்டும்.
அந்த பகுதியில் பனிக்கட்டிகளின் ஆட்சி அதிகமாக இருக்க, பயணத்தின் தன்மை கடினத்துடன் நம் முன் காட்சியளிக்கிறது. அந்த பனிக்கட்டிகளின் மீது நடக்க சிரமப்படும் நம்மிடம்... வழிக்காட்டியாளர், குறுக்காக நடக்க சொல்ல, நாமும் அவர் சொல்லை பின்பற்றி நடக்க தொடங்குகிறோம். இருப்பினும், பனிகள் நம் காலணிகளில் ஒட்டி கொண்டு 'போகாதே என்னைவிட்டு என்பது' போல் சிரமத்தில் தள்ள, நம் மனம் நகர கொஞ்சம் சிரமப்படுகிறது. அடுத்து 30 நிமிடத்திற்கு பிறகு பட்டால்சூவை நாம் அடைகிறோம். அங்கு வேறு ஏதும் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்றாலும், பனிகள் தான் நம் பார்வை முழுதும் பரவி நம் மனதை பரவசமடைய செய்கிறது. அதன் பிறகு அங்கிருந்து நாங்கள், கீழ் நோக்கி நடக்க, சகாதுக்கினை அடைந்து அசதியால் அயர்ந்து தூங்க தொடங்கினோம்.
நாள் 4: சகாதுக் - சோலாங்க் நல்லா
நான்காம் நாள் காலை பொழுதில் சீக்கிரம் எழுந்த நாங்கள், சோலாங்க் நல்லாவை நோக்கி நடக்க தொடங்கினோம். எளிதான 3 மணி நேர பயணத்தின் வாயிலாக சோலாங்க் நல்லாவை அடைந்த நாங்கள், அந்த வழியில் கண்ட காட்சிகளை, கொண்டு சென்ற கேமராவின் உதவியுடன் படம் பிடித்து கொண்டு நினைவுகளை தேக்கினோம்.
சோலாங்க் நல்லாவை அடையும் நாம், அதன் பிறகு நடந்தும் செல்லலாம், காரிலும் செல்லலாம் எனும் வாய்ப்புக்கு தள்ளப்பட, நாங்கள் காரின் மூலம் மணலியினை அடைய ஆசை கொண்டோம். ஆம், இந்த பயணத்தின் போது நான் அடைந்த களைப்பு, என் உடம்பில் இருந்த ஆற்றலை குறைத்துவிட, இதற்கு மேல் நடக்க முடியாது என நான் சொல்ல, அனைவரும் அதே முடிவை எடுத்து காரின் மூலம் மணலியினை அடைந்தோம்.
'என்ன ஒரு அருமையான பயணமிது!!' என எங்கள் மனதில் இருந்த சொற்கள், இதழ்களை கொண்டு உதிர...இந்த பயணம் அனைவருக்கும் பிடித்திருந்தது என்பதனை நான் புரிந்து கொண்டேன். என் உடல் நலம் இறுதியில் மோசமடைந்தாலும், அது எந்த ஒரு வகையிலும் என் பயணத்துக்கு இடையூறாக இல்லை என்று கூறும்பொழுது எனக்கும், இங்கு நான் கண்ட இயற்கை காட்சிகளுக்கும் இருக்கும் நட்பாகவே நான் அதை பார்த்தேன். இந்த பயணத்தை பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமேன்றால் "உறவுகள் நீங்கா அழகியதொரு கடினமான பயணம்" என்று கூறலாம். இந்த பயணம் பெரும் எச்சரிக்கையுடன் மட்டும் செல்லாமல், விளையாட்டுகள் நிறைந்த ஒன்றாகவும் தன்னம்பிக்கை நிரம்பிய ஒன்றாகவும் அமைந்தது.. ஒரு புதியதோர் அனுபவத்தினை எங்கள் வாழ்வில் தந்தது.