சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பற்றி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். அதன் சிறப்புகள் குறித்தும், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் அதிகம் படித்திருப்போம்.
சபரிமலைக்கு செல்வது குறித்து நம்மில் பலர் நினைத்திருப்போம். சபரி மலையில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். பதினெட்டு படிகள் ஏறிச் சென்று ஐயப்பனை கண்டு அவன் அருள் பெறவேண்டும் என்பது ஐயப்ப பக்தர்களின் தீராத அவா. ஆனால் ஒரு விசயம் நம் நம்பிக்கையை அப்படியே பொய்த்துபோகச் செய்துவிடும்போலிருக்கிறது.
சபரிமலையில் இருப்பது ஐயப்பனா இல்லை ஐயனாரா என்பதுதான் அது. இந்த கோவில் கேரளத்தின் பழங்குடியினர்களுக்கு சொந்தமானது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதுகுறித்து காண்போம்.
சபரிமலை
இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை' எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்' வீற்றிருக்கும் திருத்தலமே இந்த ‘சபரிமலை' ஆகும்.
அயிரை மலை
இந்த சபரி மலை சங்ககாலத்தில் அயிரை மலை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. சிலம்பாறு எனும் ஆறு இதன் மலைமுகட்டில்தான் உற்பத்தியாகிறது.
பம்பா நதிக்கரை
மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
பதிற்றுப் பத்து
சங்ககால இலக்கியமான பதிற்றுப் பத்துவில் இந்த மலை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இருக்கும் குறிப்பிட்ட சில விசயங்கள் சபரி மலை ஐயப்பன்கோயில்தான் என்பதை முரணாக்குகின்றன.
சீசன் எப்போது?
தரிசன மாதங்களான நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நிகழும் மண்டலபூஜை பருவத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த திருத்தலத்திற்கு திரளாக வருகை தருகின்றனர்.
சேர வம்சத்தின் கடவுள்
இம்மலைப்பகுதியை ஆண்ட சேர வம்சத்தினர் அயிரை தெய்வத்தை வணங்கி வந்ததாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புலவுசோறு படைத்து வணங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாமிசம் படைத்தல்
அப்படியென்றால் இந்த கடவுளுக்கு மாமிசம் படைக்கப்பட்டு பூசை நடத்தப்பட்டிருக்கிறது என்று பொருள்.
ஐயனார்
ஐயனார் மலைதான் சங்ககாலத்தில் அயிரை மலை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குறவஞ்சி இலக்கியத்திலும் இந்த மலை வருகிறது. அப்படியானால் இந்த மலையில் வீற்றிருப்பது ஐயப்பனா இல்லை ஐயனாரா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும்தானே?
சங்ககாலத்திலேயே ஐயன்
ஐயன் என்ற சொல் ஆதி தமிழிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் தமிழில் ஐயனார் என்றழைக்கப்படுவதால், இங்குள்ள மலைவாழ்மக்கள் ஐயனாரைத்தான் கடவுளாக ஏற்று வணங்கியிருக்கலாம்.
ஐயப்பனுக்கும் ஐயன்
ஐய்யப்பனையும் சிலர் ஐயன் என்றே அழைக்கின்றனர் இதனால் இங்கு இருந்தது ஐயப்பனாகக் கூட இருக்கலாம் என்கிறது எதிர்தரப்பு. மாமிசம் பற்றிய கேள்விக்கு, ஏன் சிவன் கூட கண்ணப்பனால் மாமிசம் ஊட்டப்பட்டவர்தானே என்கிறது அடுத்த வாதத்தை.
மலைவாழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஐயனார்
மலைவாழ் மக்கள் காலம்தொடர்ந்து ஐயனாரை வணங்கி வந்துள்ளனர். அவர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சிகளை படைத்து வணங்கிவந்துள்ளனர். தெலுங்கு தேசத்திலிருந்து வந்த சிலர் இந்த ஐயனாரை ஐயப்பனாக குறிப்பிட்டு பூசை நடத்த சொல்லியிருக்கின்றனர். நாளடைவில் அவர்களிடமிருந்த ஐயனாரைக் கைப்பற்றி விட்டனர் என்று இந்து மதம் எங்கே போகிறது எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அதன் ஆசிரியர்.
மகரஜோதி
இன்றும் அந்த மலைவாழ் மக்களின் வம்சத்தினர் மலையில் தீபமேற்றி வழிபடுகின்றனர். அதைத்தான் மகரஜோதி என்று விளம்பரப்படுத்தியுள்ளனர் என்று நக்கீரன் பத்திரிகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
மலை
18 மலைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த இந்த ஐயப்பன் கோயிலானது ஆன்மிக அம்சங்களுக்கு அப்பாற்பட்டும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயமாகும்.
அடர்ந்த காடுகள் மற்றும் மலைச்சிகரங்களால் சூழப்பட்டு ஒரு மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.
எப்படி செல்வது
கேரளாவின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்துகள் பம்பாவுக்கு இயக்கப்படுகின்றன. KSRTCஅரசுப்பேருந்துகள் கோட்டயம், திருவனந்தபுரம், செங்கண்ணூர், திருவல்லா ரயில் நிலையம் மற்றும் கொச்சி போன்ற நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பம்பாவுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து செல்ல விரும்பும் பயணிகள் குமுளி நகரத்தை சென்றடைந்து அங்கிருந்து KSRTC அரசுப்பேருந்துகள் மூலமாக பம்பாவுக்கு செல்லலாம். நாகர்கோயில், திருவனந்தபுரம் வழியாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.