தேக்கடி கேரளாவின் இயற்கை கொஞ்சும் இடங்களில் முக்கியமான ஒன்று. இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தேக்கடி, கேரளாவில், அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக விளங்குகிறது. இதன் அருகே அப்படி என்னென்ன இடங்கள் இருக்கிறது என்று ஒரு ரவுண்ட் போகலாம்.
பெரியார் வன விலங்கு சரணாலயம்
பெரியார் வன விலங்கு சரணாலயம் தேக்கடியில் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலம். இந்த மிகப்பெரும் காடு புலிகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. கூடுதலாக முல்லைபெரியார் அணையும் பெரியார் நதியும் அழகு சேர்க்கிறது. வெறும் புலிகள் மட்டுமல்ல காட்டுப் பன்றிகள், சாம்பர் வகை மான்கள், காட்டு எருதுகள் என்று பல வகை மிருகங்கள் இருக்கின்றன.
Photo Courtesy : Rossipaulo
முரிக்கடி
சுற்றி பரவியிருக்கும் ஏலக்காய், காஃபி, மிளகுத் தோட்டங்கள் கொண்ட முரிக்கடி இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு மிகச் சிறந்த இடம். மலைப்பாதையில் நீங்கள் செல்லும்போதே உங்கள் நாசியில் ஏறும் காஃபி, தேயிலை நறுமணம், மிதமான குளிர், பசுமை என்று ஏகப்பட்ட சிறப்புகள் கொண்ட இடம் முரிக்கடி.
பாண்டிக்குழி
கல கலவென ஓடும் நீரூற்று, அருவி, மலைத் தொடர்கள் என எவரையும் கவரும் வகையில் இருக்கிறது பாண்டிக்குழி. மேலும், மலையேற்றம், புகைப்படம் எடுக்க சிறந்த இடம். தமிழ் நாடு எல்லைக்கும் செல்லர்கோவிலுக்கு இடையில் இருக்கிறது பாண்டிக்குழி.
Photo Courtesy : Varkey Parakkal
குமுளி
குமுளி கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தேனிக்கு அருகில் இருக்கு ஊராகும். ஆனவிலாசம், சக்குப்பள்ளம், அனக்கர, புட்டடி, கொச்சற போன்ற அழகிய சிற்றூர்கள் குமுளி அருகே இருக்கிறது.
சுற்றுப்புறங்களிலிருந்து ஏலக்காய்,மிளகு போன்றவையின் வணிக மையமாகவும் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து சபரிமலை செல்வோர் பயணிக்கும் முக்கியப் பாதையில் இந்நகர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மங்களாதேவி கோவில்
மங்களாதேவி கோவில் தேக்கடிக்கு அருகில்(15 கி.மீ) இருக்கும் ஒரு முக்கிய சுற்றுலா தலம். இந்தக் கோவிலின் வயது 1000 வருடங்கள். அத்தனை பழமையான கோவில். காட்டுக்குள் இப்படி ஒரு கோவில் இருப்பது பலருக்கும் தெரியாது.
Photo Courtesy : sanpar32
கடத்தநாடன் களரி மையம்
களரிக்கு ஒரு முக்கிய இடம் கடத்தநாடன் களரி மையம். களரி கேரளாவின் முக்கிய கலாச்சாரங்களில் ஒன்று. பார்வையாளர்கள் இந்த தனித்துவமான கலையை காண்பதற்கு இங்கு வரலாம்.