சுனாமி.... பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழில் பெரும்பாலும் யாரும் கேள்விப் படாத பெயர். கடல் அன்னை, தன் வளங்களைக் கொள்ளையடித்தவனை தன் வாயை பிளந்து
எச்சில் உமிழ்ந்து தன்னுள் இழுக்க என்னவோ .. ஆழிப்பேரலை கட்டவிழ்த்துவிட நல்லவர், கெட்டவர் எனப் பகுத்தறியாக் கடல் இழுத்துச் சென்றன அனைவரையும்.
தன் தவறை உணர்ந்த கடல் அன்னை நல்லவர்களை கரை சேர்க்க நினைத்தும், முடியாமல் அனைவரின் இறப்புக்கு நாம் காரணமாகி விட்டோமே என்று தனக்கு தானே தண்டனை கொடுத்து பல வருடங்கள் வெறிச்சோடியது.
நாள்கள் கடக்க, நல்லவர்கள் ஆறுதல் கூற தன் பழைய நிலைக்குத் திரும்பிய கடல், மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில், சுனாமியால்
பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்கள் பற்றியும், அவை எப்படி மீண்டு வந்தது பற்றியும் இப்பதிவில் காணலாம்.
சென்னை
தமிழகத்தின் தலைநகரான சென்னை, கடந்த 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான சென்னை ஒரு சில
வருடங்களில் மீண்டு தன் பழைய நிலைமைக்குத் திரும்பியது. ஒவ்வொரு வருடமும் சுனாமி தினத்தில் சென்னையில் நினைவு அஞ்சலி செலுத்தப்படும்.
சென்னையிலுள்ள மீன்பிடித்தளங்கள், மெரினா கடற்கரை, அண்ணா, எம்ஜிஆர் நினைவகங்கள் அனைத்திலும் சுனாமி நினைவுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
PC: Matthewmayer
நாகப்பட்டினம்
சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம் பகுதிதான். அதிக அளவில் உயிரிழப்பும் நிகழ்ந்தது. பெற்றோரை இழந்த பிள்ளைகள், மகன் மகள்களை
இழந்த தந்தைகள், தாய்கள் என சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம் மாவட்டம். இதற்கு அருகிலேயே உள்ள நாகூர் தர்கா, வேளாங்கன்னி கோவில் என பல சுற்றுலாத்
தளங்கள் மீண்டு பழையத் தோற்றத்தைப் பெற்றுவிட்டன.
இந்த சுனாமி தினத்தில் இங்கு வருவர்கள் மெழுகு வர்த்திகள் ஏற்றி, மலரால் அஞ்சலி செலுத்துகின்றனர்.
PC:Ssriram mt
குளச்சல்
கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடித் தளங்களின் முக்கிய நகராக இருப்பது குளச்சல். ஒப்பிடுகையில் பெரிய அளவில் உயிரிழப்பு இல்லையென்றாலும், மீனவர்களின் படகுகள், மோட்டார்கள், வலைகள் என நிறைய இழப்புகளைச் சந்தித்தனர் இப்பகுதி மக்கள். அரசின் நிதியுதவி இவர்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் அளித்தாலும், காலங்கள் கடந்து இவர்களின் மனதுக்கு ஆறுதல் வளர்ந்தது.
மீன் பிடித்துறைமுக நகரான குளச்சல் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது.. இங்குள்ள கடற்கரை அதிகம் பேர் வரமாட்டார்கள் என்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியான தனிமைப் பொழுதை தங்கள் மனம் விரும்பும் நபர்களுடன் கழிக்கலாம்.
PC: Risvan Mohammed S
மாமல்லபுரம்
வங்கக் கடலின் சொர்க்கம் மாமல்லபுரம் என்றால் அது மிகையாகாது. காதலர்களின் முக்கிய சுற்றுலாத் தளமாக பார்க்கப்படும் இந்த இடம் சுனாமியின் போது மிகுந்த பாதிப்புக்குள்ளானது.
இரண்டு மூன்று வருடங்களில் மீண்டு வந்த இந்த கடற்கரை, துயர் துடைத்த மனங்களின் வடுக்கள் ஏராளம். தங்கள் உறவுகளைத் தொலைத்த, நம்பிக்கையானவர்களை இழந்தவர்களின் சோகம் இந்த கடற்கரையின் நினைவுகளில் இன்றும் அலையாய் வீசிக்கொண்டிருக்கிறது.
PC: Xavier Favro
அந்தமான்
தீபகற்ப பகுதிகளில் வசிப்பவர்களையே ஒரு கை பார்த்துவிட்ட கடல் அன்னை, தீவுகளை விட்டுவைப்பாளா... இயற்கை எழில் கொஞ்சும் அந்தமானையும் அதன் வரலாற்று சின்னங்களையும் பெரிதும் பாதித்தது சுனாமி. எனினும் அரசின் தீராத முயற்சியாலும், அந்தமானின் மக்களாலும் இந்நகரம் சீக்கிரமே மீண்டெழுந்தது.
உலகின் சிறந்த கடற்கரை சுற்றுலாத் தளங்களில் ஒன்றான அந்தமான், சுனாமி நினைவுகளைத் தாங்கி நிற்கும் நிகழ்கால வரலாற்றுச் சின்னமாகும்.
PC: Any Given Sunday
பாண்டிச்சேரி
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான பாண்டிச்சேரி, சுனாமியால் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. இங்குள்ள பூங்காக்கள், கடற்கரைகளிலுள்ள மக்கள் மரணத்தை நேரில் பார்த்துவிட்டு வந்தனர். மீதி பேரை கடல் அன்னை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டாள்.
சுனாமி நினைவலைகள் தன்னுள்ளே கட்டமைத்திருந்தாலும், அழகிய பாண்டிச்சேரி மீண்டும் புதுப்பொலிவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சியளிக்கிறது.
PC: Kartik Kumar S
தனுஷ்கோடி
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம், சுனாமியால் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரை கிராமங்கள் சுனாமியால் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும்
சுற்றுலாப் பயணிகள் வருகை தருமிடமாக ராமேஸ்வரம் உள்ளது. இங்குள்ள தனுஷ்கோடியில் இன்றும் சுனாமியின் பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது.
PC: Sudarsan Jayasingh
முட்டுக்காடு
காதலர்களின் சொர்க்கமாக கருதப்படும் இந்த முட்டுக்காடு பகுதி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி செல்லும் வழியில் இதனை பார்க்க முடியும். இந்த பகுதியும் சுனாமியால் பாதிக்கப்பட்டது.
PC: Jaya Ponbalan
கன்னியாகுமரி
இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி சுனாமியின் போது பாதிக்கப்பட்டது.இங்குள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட அனைவருமே பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் சுற்றுலாப் பயணிகளின் உதவியாலும், அரசின் முயற்சியாலும் மீட்டுக் கொண்டுவரப்பட்டனர்.
தாய், தந்தைகளை இழந்த மக்கள், மகள்களை தொலைத்த தந்தைகள் என சோகமுகம் கொண்ட குமரி முனை, சில வருடங்களிலே சிலிர்த்துக்கொண்டு முன்னேறி தன் அழகினை மேலும்
மெருகேற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு கண்குளிர விருந்தினை வழங்குகிறது.
PC: Prashanth Nallathamby
சுனாமி நினைவு சின்னம்
கன்னியாகுமரியில், கடற்கரையொட்டி, அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், சுனாமியை நினைவு கூறும் வகையில் சுனாமி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
PC: Rudolf