ஏறத்தாழ நமக்கு தெரிந்த இந்தியாவின் 5000 ஆண்டு கால வரலாற்றில் எல்லாக் காலகட்டங்களிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒரு பகுதி இருக்குமானால் அது கலிங்கம் என்று அழைக்கப்பட்ட இன்றைய நவீன காலத்தின் ஓடிஸா மாநிலம் ஆகும். பெரும் வரலாற்று செளுமை கொண்ட இங்கு அதன் பெருமைகளுக்கு சாட்சியாய் விளங்குவது அங்கிருக்கும் கோயில்களே. வாருங்கள் மலைப்பில் ஆழ்த்தும் ஒரு காலப்பயணம் சென்று வரலாம்.
பூரி ஜெகன்நாதர் ஆலயம்:
புகைப்படம்: Daniel Roy
சோழ மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம். மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது. கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இக்கோயில் மூலவர்கள் ஆவர்.
புகைப்படம்: Swami Gaurangapada
வருடா வருடம் ஓடிசாவின் மலைகாலமான அசத மாதத்தில் (ஜூன்-ஜூலை) பூரி ரத யாத்திரை நடக்கிறது. 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட தேர் ஒவ்வொரு வருடமும் புதிதாக கட்டப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த தேரின் சக்கரத்திற்கு அடியில் விழுந்து உயிர் விட்டால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கை உலாவிவந்திருக்கிறது. இத்தேரின் பிரம்மாண்டத்தை கேள்விப்பட்ட ஆங்கிலேயர் தன் வழியில் இருக்கும் எல்லாவற்றையும் அழித்து விடக்கூடிய பொருள் என்பதனை இன்றும் இத்தேரின் பெயரால் 'Juggernaut' என்று அழைகின்றனர். தரிசனத்திற்காக காலை ஐந்து மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரை இக்கோயில் திறந்திருக்கிறது. எப்படி அடையலாம்? புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மும்பை, டில்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து பூரி வரை நேரடியாகவே எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன.
கோனார்க் சூரிய கோயில்:
புகைப்படம்: rjha94
முதலாம் நரசிம்ம தேவனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் சூரிய கடவுளுக்கு என்றே பிரத்யேகமாக கட்டப்பட்டது இந்த கோனார்க் சூரிய கோயில். மிகப்பெரிய தேர் போன்ற வடிவில் வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும் வகையில் ஏழு குதிரைகளும், வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு சக்கரங்களும் உள்ளன. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சூரிய கதிர்கள் நேரடியாக மூலவரான சூரிய பகவான் மீது விழும்படி அமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம்: Steve Browne & John Verkleir
கஜுராஹோவில் உள்ளது போன்ற மைதுன சிற்பங்களும் இந்த கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்ற 1984ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தக்கோயிலை ரயில் அல்லது சாலை மூலம் அடைந்து அங்கிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ள கோனார்க் கோயிலை அடையலாம். இன்று பூஜை சடங்குகள் நடைபெறாவிட்டாலும் தவிர்க்க இயலாத கலைப்புதையலாக இந்த சூரிய கோயில் திகழ்கிறது.
தாஹுளி:
புகைப்படம்: Deejay D
புகழ் பெற்ற கலிங்க யுத்தம் நடந்ததாக சொல்லப்படும் தயா நதிக்கரையில் அமைந்திருக்கிறது தாஹுளி மலை. இங்கு அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட சாந்தி ஸ்துபி உள்ளது. களிங்கப்பபோரினால் தயா நதியில் மனித ரத்தம் புரண்டு ஓடியதாகவும் அதனை கண்டு மனம் வெதும்பி புத்த மதத்தை தழுவிய அசோகர் கலிங்கபோர் நடந்த இடத்தில் புத்தருக்காக ஒரு மண்டபம் போன்ற வடிவில் ஒரு ஸ்துபியை அமைத்துள்ளார். அதில் உலகத்தை பற்றிய தனது கண்ணோட்டத்தையும், அமைதி வழியில் ஒருவன் அரசாட்சி செய்யும் முறை ஆகியவற்றை பற்றியும் இந்த ஸ்துபியில் உள்ள கல்வெட்டுகள் முலம் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடம் புவனேஸ்வருக்கு வெகு அறுகில் 8கி.மீ தொலைவிலேயே உள்ளது.
புகைப்படம்: Alaina Browne
லிங்கராஜா கோயில்:
புகைப்படம்: Damien Roué
ஓடிஸா மாநிலத்தின் மிகப்பழமையான கோயிலும், அதன் முக்கிய சுற்றுலாதளமாகவும் விளங்குவது ஹரிஹரப்பெருமானை மூலவராக கொண்ட லிங்கராஜா கோயிலாகும். ஆயிரத்துநூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில் கலிங்க கட்டடக்கலையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இக்கோயிலின் வரலாற்றுப்படி இது முதலில் சிவன் கோயிலாக மட்டுமே இருந்ததாகவும், பின்னர் பதினோராம் நூற்றாண்டில் வைணவத்தை பின்பற்றும் மன்னர்களின் ஆட்சிக்கு கீழ் வந்ததால் சிவனையும், விஷ்ணுவையும் சேர்த்து 'ஹரிஹரன்' கோயிலாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்தகோயிலின் முக்கிய விழாவாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடந்து பூஜை மேற்கொள்ளப்படும் இக்கோயிலினுள் இந்துக்கள் அல்லாதவர் அனுமதிக்கப்படுவதில்லை. இது புவனேஸ்வர் நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருப்பதால் இதனை வெகு சுலபத்தில் அடையலாம்.