Search
  • Follow NativePlanet
Share
» »ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

By

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது.

இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது. இவ்வாண்டு வரும் அக்டோபர் 16-ஆம் தேதியிலிருந்து, 23-ஆம் தேதி வரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம்.

எனினும் கோயில் 16-ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

வினோத நம்பிக்கைகள்!

மாமியார்-மருமகள் கல்! : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

திருடர்கள் கோயில் : ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

அணையா தீபம் : ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் (இந்த ஆண்டு - அக்டோபர் 5) கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்?! : கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வாடா மலர்கள் : ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

வரலாறும், புராணமும்!

ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதொடு, கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது.

இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப்பெயரை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டு வந்த ஹாசன் நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர்கள்) வருகைக்கு பிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று.

புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர்.

அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

ஹாசனாம்பா கோயில் திறப்பு!

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தளவார் குடும்பத்தினர் கோயில் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்துவிடப்படுகிறது.

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்துவரப்படும் ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத்துக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன.

இந்த சமயங்களில் கோயிலில் பெருங்கூட்டம் காணப்படுவதால் சிறப்பு தரிசனம் செய்ய 250 ரூபாய்க்கு தனி வழி பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.

எப்படி அடைவது?

ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் (KSRTC) இயக்கப்படுகின்றன.

பெங்களூர்-ஹாசன் பேருந்து அட்டவணை : 21:35, 21:59, 21:00, 11:05, 21:15, 14:05, 22:30, 23:00, 23:15, 21:15, 21:35, 21:06, 22:00, 05:00, 07:45, 06:30

ஹாசன்-பெங்களூர் பேருந்து அட்டவணை : 11:00, 20:30, 14:00, 22:01, 21:05, 22:29, 22:50, 22:45, 19:30, 07:00, 06:01, 06:31, 13:30, 10:30, 11:30

ஹாசனை ரயில் மூலம் அடைய விரும்புவர்கள் இந்த இணைப்பை சொடுக்குங்கள் : ஹாசனுக்கு செல்லும் ரயில்கள்.

Read more about: கோயில்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X