ஏக்லிங்க்ஜி கோயில் உதய்பூரிலிருந்து நகர மையத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள புரதானமான பிரசித்தியான கோயில் ஆகும். சிவபெருமானுக்கான இந்த கோயில் ஆச்சார்யா விஸ்வரூபாவால் 734ம் வருடம் கட்டப்பட்டுள்ளது. 2500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகத்தில் 108 சன்னதிகள் அமைந்துள்ளன.நான்கு முகங்களோடு 50 அடி உயரத்தில் காட்சியளிக்கும் கல்லால் ஆன சிவபெருமானின் சிலை இக்கோயிலின் விசேஷ அம்சமாகும். மஹாதேவ சௌமுகி என்றழைக்கப்படும் இந்த சிவபெருமான் சிலையின் நான்கு முகங்களும் நான்கு திசைகளிலும் நோக்கியவாறு உள்ளன.
இந்த முகங்கள் வடக்குத்திசைக்குரிய விஷ்ணு, கிழக்குத் திசைக்குரிய சூரியன், தென் திசைக்குரிய ருத்ரன் மற்றும் மேற்குத்திசைக்குரிய பிரம்மன் என்பனவாகும். சிவனின் வாகனமாகிய நந்தியின் சிலை கோயிலின் பிரதான வாயிலுக்கருகில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் பக்தர்கள் சிவபெருமான் அவர்தம் குடும்பத்தாருடன் காட்சியளிக்கும் சிலைகளை தரிசிக்க முடியும். பார்வதி தேவி, கணேஷ் ஆகியோருடன் இக்கோயிலில் சிவபெருமான் குடிகொண்டுள்ளார். யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய கடவுள்களின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன.இந்த சிலைகளுக்கு மத்தியில், வெள்ளி பாம்பு ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் அமைந்திருக்கும் சிவலிங்கமும் உள்ளது. கோயிலின் வெள்ளிக்கதவுகளில் கணேஷ் மற்றும் கார்த்திகேயக் கடவுளரின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நடனகன்னியரின் உருவங்களையும் இங்கு பார்க்கலாம். கணேஷ்ஜி கோயில், அம்பா மாதா கோயில், நாதோன் கா மந்திர் மற்றும் காளிகா கோயில் ஆகிய இதர கோயில்களும் இந்த கோயிலுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன.