லேக் பேலஸ் என்றழைக்கப்படும் இந்த ஏரி அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீரமான மாளிகை ஆகும். 1743ம் ஆண்டு மஹாராணா ஜகத் சிங் இந்த அரண்மனையை கோடை வசிப்பிடமாக கட்டியுள்ளார். இது தற்சமயம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றமடைந்துள்ளது. நுட்பமான கட்டிடக்கலை அம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இந்த மாளிகை திகழ்கிறது.உலகிலுள்ள வசீகர அரண்மனைகளில் இது ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. அழகிய தூண்களுடன் கூடிய மேல்தளங்கள், சாரங்களுடன் காட்சியளிக்கும் முற்றங்கள், தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகள் போன்றவை இந்த அரண்மனையின் எழில் அம்சங்களாகும்.
இந்த அரண்மனையிலுள்ள அறைகள் இளஞ்சிவப்பு ரத்தினக்கற்கள், வண்ணந்தீட்டப்பட்ட கண்ணாடிகள், விதான வளைவு அமைப்புகள் மற்றும் பசுமையான தாமரை இலைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.இந்த அரண்மனை விடுதிக்குள் குஷ் மஹால், படா மஹால், தோலா மஹால், ஃப்பூல் மஹால் மற்றும் அஜ்ஜன் நிவாஸ் போன்ற தங்கும் குடியிருப்புகள் உள்ளன. மதுக்கூடம், நீச்சல் குளம் மற்றும் ஆலோசனைக்கூடம் போன்ற வசதிகளும் இங்கு உள்ளன.