எண்ணற்ற சுவாரசிய சுற்றுலாத்தலங்களை தன்னுள் கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் சுற்றுலா ஆர்வலர்களை வசீகரித்து வரவேற்கிறது. சுற்றுலா என்றில்லை இந்திய ஆன்மீக மரபுகளில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு வரலாற்று பாரம்பரியம் என்ற அடிப்படையில் இங்குள்ள சில யாத்ரீக ஸ்தலங்களை இந்தியர் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறை தரிசிப்பது மிக அவசியம்.
சர்வதேச அளவில் இம்மாநிலம் கவனத்தை பெற்றிருப்பதற்கான காரணங்கள் பல உண்டு. அவற்றில் முதலாவதாக உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ் மஹால் ஆக்ராவில் வீற்றிருக்கிறது.
கதக் எனும் பாரம்பரியக்கலை இங்குதான் உதயமாகியிருக்கிறது. கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமும், புத்தர் தனது முதல் உபாசனையை அளித்த இடமும் இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அமைந்திருக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் உத்தரகண்ட், ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தை தனது வடக்குப்பகுதியிலும், மத்தியப்பிரதேசத்தை தெற்கிலும், பீகாரை கிழக்கிலும், ஹரியானாவை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டு அமைந்திருக்கிறது.
பிரசித்தமான ஆன்மீக யாத்திரை ஸ்தலங்கள்
ஆன்மீக யாத்திரை சுற்றுலா என்று பார்க்கும் போது இந்தியாவில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் இதுவும் ஒன்று. ஹிந்து மரபில் முக்தி ஸ்தலம் என்று கருதப்படும் வாரணாசி இங்குதான் அமைந்திருக்கிறது.
இது பிரசித்தமான யாத்திரை நகரமாக திகழ்கிறது. வைணவ மார்க்கத்தினர் பெரிதும் விரும்பும் யாத்திரை ஸ்தலங்களான மதுரா மற்றும் அயோத்யா போன்ற நகரங்கள் இம்மாநிலத்தின் பிரதான யாத்ரீக அம்சங்களாக அமைந்திருக்கின்றன. மதுராவில் கிருஷ்ணரும் அயோத்யாவில் ராமரும் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
கிருஷ்ணர் ராசலீலை புரிந்த இடமாக கருதப்படும் பிருந்தாவன் மற்றும் கோவர்த்தன் போன்ற நகரங்கள் வருடம் முழுக்கவும் யாத்ரீகர்களையும் பயணிகளையும் ஈர்த்தவண்ணம் உள்ளன.
இங்குள்ள பித்தூர் எனும் நகரம் ராமரின் புதல்வர்களா லவா மற்றும் குசா பிறந்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. பக்த கபீர், துளசிதாஸ் மற்றும் சுர்தாஸ் போன்ற தெய்வீக புலவர்கள் இந்த மண்ணில் பிறந்து புராணச்செய்யுள்களை இயற்றியுள்ளனர்.
தவிர அலாகாபாத் நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய நகரம் எனும் புகழோடு வீற்றிருக்கிறது. இங்குதான் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது.
இங்கு நடைபெறும் மஹா கும்ப மேளா திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு திருவிழாவாகும். உலகெங்கிலுமிருந்தும் பார்வையாளர்கள், புகைப்பட ஆர்வலர்கள், பயணிகள், ஆன்மீக பிரியர்கள் ஆகியோர் அத்திருவிழாவின்போது இந்த நகரத்தில் திரள்கின்றனர்.
அறிவியல் முன்னேற்றத்தில் மனித இனம் தன் உச்சத்தை எட்டிவிட்டாலும் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளின் சக்தி இந்த திருவிழாவின்போது திரளும் கூட்டத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம். அல்லது புரியாமல் மலைக்கலாம்.
இம்மாநிலத்திலுள்ள சாரநாத் ஸ்தூபி ஸ்தலத்தில்தான் புத்தர் தனது முதல் உபாசனையை (ஞான உரை) நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இங்குள்ள கோசாம்பி எனும் இடத்தில் உள்ள அசோகத்தூண் ஸ்தலத்தில் புத்தர் தனது பல உரைகளை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் இம்மாநிலத்திலுள்ள சிரவஸ்தி எனும் நகரத்தில்தான் புத்தர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்ததாகவும் சொல்லப்படுகிறது. இறுதியாக அவர் முக்தியடைந்த குஷிநகர் எனும் நகரமும் உத்தரப்பிரதேசத்தில்தான் உள்ளது.
இப்படியாக மனித வரலாற்றில் ஒரு உன்னத மார்க்கமான பௌத்தம் தழைத்த மண் எனும் ஒப்பற்ற பெருமையை உத்தரப்பிரதேசம் பெற்றிருக்கிறது.
இந்துக்கள் மற்றும் ஜைனர்கள் ஆகிய இரு பிரிவினரும் போற்றும் பிரபாஸ்கிரி எனும் ஆன்மீக நகரமும் இம்மாநிலத்தில் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நகரங்கள் யாவுமே அவற்றின் பின்னணியில் புராணிக தொடர்புகளையும் இதிகாச மரபுகளையும் பெற்று விளங்குகின்றன. காட்டுயிர் வாழ்க்கையும் இயற்கைச்செல்வமும்
ராய் பரேலி எனும் இடத்திலுள்ள சமஸ்பூர் பறவைகள் சரணாலயம், துத்வா தேசியபூங்கா போன்றவை இம்மாநிலத்தில் இயற்கை ரசிகர்கள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடங்களாக அமைந்திருக்கின்றன.
வரலாற்று உன்னதங்கள்
பல அற்புதமான வரலாற்று சின்னங்கள் வாய்க்கப்பெற்றிருக்கும் உத்தரப்பிரதேசம் சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறதென்றால் அதில் வியப்புமொன்றுமில்லை.
கட்டிடக்கலையின் உன்னத சாட்சியாய் ஒளிரும் தாஜ் மஹாலை கொண்டுள்ள ஆக்ரா நகரம் மட்டுமல்லாமல், ஜான்சி, லக்னோ, மீரட் மற்றும் ஃபதேபூர் சிக்ரி போன்ற முக்கியமான வரலாற்று நகரங்கள் இந்த மாநிலத்தில் அமைந்திருக்கின்றன.
இவற்றில் ஃபதேபூர் சிக்ரி மாமன்னர் அக்பரால் திட்டமிட்டு அமைக்கப்பட்ட தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர பாராபங்கீ, ஜவுன்பூர், மஹோபா, தேவ்கர் போன்ற நகரங்களும் குறிப்பிடத்தக்கவையாகும்.
மேலும் இம்மாநிலத்திலுள்ள அலிகார் நகரம் ஒரு முக்கியமான கல்விக்கேந்திரமாக அலிகார் பல்கலைக்கழகத்துடன் அமைந்திருக்கிறது. வாரணாசி, லக்னோ, மீரட், ஜான்சி, காஜியாபாத், கான்பூர், கோரக்பூர், நோய்டா ஆகியவ இம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நகரங்கள் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளன.
இந்தியாவின் பாரம்பரிய நடன வகைகளில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள கதக் நடனக்கலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருவாகி வளர்ச்சியடைந்திருக்கிறது. இம்மாநிலத்தின் தனித்தன்மையான பாரம்பரியம் மற்றும் பூர்வகுடி கலாச்சாரம் போன்றவற்றை இன்றும் நாட்டுப்புற இசை மற்றும் நடன வடிவங்களில் கண்டு ரசிக்கலாம்.
தனக்கே உரிய பல கைவினைத்தொழில் நுணுக்கங்களையும் இம்மாநிலம் கொண்டிருக்கிறது. கை வண்ணப்பூச்சு, உலோக முலாம் பூச்சு, சல்லாத்துணை வேலைப்பாடுகள், பித்தளை மற்றும் மர வேலைப்பாடுகள் போன்றவற்றில் இம்மாநிலத்தின் கலைஞர்கள் பாரம்பரிய அனுபவம் மற்றும் நுணுக்கங்கள் வாய்க்கப்பெற்றிருக்கின்றனர். லக்னோவி சிக்கான் எனும் வித்தியாசமான பூத்தையல் வேலைப்பாடு சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத்தில் இந்து, முகலாய அம்சங்கள் கலவையாக வெளிப்படுகின்றன. இங்குள்ள பல வரலாற்றுச்சின்னங்களில் இந்த கதம்பமான அம்சங்களை பார்க்க முடியும்.
ஆவாதி உணவு வகைகள், கெபாப் உணவு, தம் பிரியாணி போன்றவை இம்மாநிலத்தின் அடையாள உணவு வகைகளாகும். இவை தவிர ருசியான சமோசா, பக்கோரா போன்ற தின்பண்டங்கள் உருவான இடம் எனும் பெருமையையும் இம்மாநிலம் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் ஆழமான ஆன்மீக பின்னணியையும், வரலாற்று காலத்தின் சின்னங்களையும் ஏந்தி நிற்கும் பல முக்கிய நகரங்களை வாய்க்கப்பெற்றிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் - திட்டமிட்டு விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய மாநிலம் என்பதில் சந்தேகமே இல்லை.