சிக்கிம் மாநிலத்தில் உள்ள மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் உத்தரே என்ற சுற்றுலாத் தலம் இயற்கை அழகிற்கும் அதன் வளமைக்கும் பெயர் பெற்ற ஒரு பகுதி ஆகும்.
உத்தரேயில் இருந்து இமயமலைச் சிகரங்களை ஆசைதீர கண்டு களிக்கலாம். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் பனி போர்த்தப்பட்ட இமயமலையின் வெள்ளிச் சிகரங்களை உத்தரே பகுதியிலிருந்து தெள்ளத் தெளிவாகப் பார்க்கலாம்.
அவ்வாறு செல்லும் போது சிங்ஷோர் என்ற ஒரு உயரமான பாலத்தைக் கடக்க வேண்டும். இந்த பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உத்தரே கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
உத்தரேயில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. குறிப்பாக கக்யு கும்பா என்று அழைக்கப்படும் ஒரு மடம், டென்டாம் சிகரம், மெயின்பஸ் நீர்வீழ்ச்சி மற்றும் செவ்யாபாங் கணவாய் ஆகிய இடங்கள் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் உத்தரே பகுதியில் மிதமான மற்றும் இதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.
உத்தரே பகுதியை அடைவது மிகவும் எளிதானது. உத்தரேக்கு அருகில் பெல்லிங் உள்ளது. எனவே இந்த நகரத்திலிருந்தும் மற்ற அருகாமை நகரங்களிலிருந்தும் பேருந்து மூலம் உத்தரேயை வெகுச் சுலபமாக அடையலாம்.