கங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன.
வாரணாசி இந்துக்கள் போற்றும் மிகப் புனிதமானதோர் நகரமாகும். இந்து புராணங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ள இந்நகரில் உள்ள படித்துறைகளின் வழியே ஓடும் கங்கை நதியில் புனித நீராடுவோரின் பாவங்கள் யாவும் கரைந்தோடி விடும் என்ற நம்பிக்கை உலவி வருகின்றது.
வருடத்தின் எந்த நேரத்தில் வாரணாசி சென்றாலும் இங்கு மக்கள் புனித நீராடுவதைக் காணலாம். முக்கிய மதசார்ந்த விழாக்களின் போது இங்கு நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
மணிகர்னிகா படித்துறை தான் வாரணாசி படித்துறைகளுள் மிகவும் புகழ் பெற்றது. ஒருவர் வாரணாசியில் இறந்தாலோ அல்லது அவரது ஈமக்கிரியைகள் மணிகர்னிகாவில் செய்யப்பட்டாலோ அவர் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு நேரடியாக மோக்ஷத்தை அடைவார் என்று நம்பப்படுகிறது.
காலை மற்றும் மாலை ஆராதனைகள் (தீப வழிபாடு) இப்படித்துறைகளில் தினந்தோறும் செய்யப்படுகின்றன. முக்கியமாக மாலை வேளைகளில் செய்யப்படும் ஆராதனைகளின் போது பக்தர்கள் கிளியாஞ்சட்டி என்றழைக்கப்படும் மண்விளக்கு தீபங்கள் ஏற்றி அவற்றை கங்கை நீரில் மிதக்க விடும் காட்சி மனதை வசியப்படுத்தக்கூடியதாக இருக்கும்