ஃப்ரென்ச் பங்களா அல்லது ஃப்ரெஞ்சு கோட்டை என்று அழைக்கப்படும் இந்த மாளிகை வேலூரில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. இம்மாளிகைக்கு பின்னால் ஒரு காதல் கதையும் சொல்லப்படுகிறது.
இன்றும் மைசூர் ராஜபரம்பரைக்கு சொந்தமான இந்த மாளிகை அவ்வம்சத்தை சேர்ந்த ஒரு இளவரசரால் கட்டப்பட்டிருக்கிறது. வெளி நாட்டில் கல்வி பயில சென்ற இந்த இளவரசர் ஒரு ஃப்ரெஞ்சு பெண்மணியை காதலித்து மணம் செய்து கொண்டதாகவும் பின்னர் இந்தியாவில் தனது ஃப்ரெஞ்சு மனைவிக்காகவே இம்மாளிகையை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களை இம்மாளிகை கொண்டிருக்கிறது. இதன் கட்டுமானம் சுண்ணாம்புக்கற்கள் மற்றும் கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது.
மாளிகையின் நான்மூலைகளிலும் காவற்கோபுர அமைப்புகளும் காணப்படுகின்றன. ரோமானிய குளியல் முறை சார்ந்த ஒரு கிணறு அமைப்பும் இதன் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.
பணியாளர் குடியிருப்பு, சமையலறை மற்றும் தானியக்கூடம் போன்றவையும் இந்த மாளிகை வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பாரம்பரிய மாளிகை சிதிலமாக காட்சியளிக்கிறது.