வடாகோக் கிரே எனும் இந்த சுற்றுலாத்தலம் மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ளது. இந்திய தொல்லியல் துறை இந்த இடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது ஒரு காலத்தில் முக்கியமான நகரமாகவும் ஆன்மீக ஸ்தலமாகவும் திகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றை ஒட்டிய இந்த புராதன நகரம் 4ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் இந்த புராதன நகரத்தில் பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகிய இரண்டுமே பின்பற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
2000 வருடங்களுக்கு முன்னால் இப்பகுதியில் ஓடிய பிரம்மபுத்திரா ஆற்றின் கரையை ஒட்டியவாறு இந்த நகரம் இருந்திருக்கிறது. பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நகரமாகவும் செங்கற்களால் கட்டப்பட்ட கிணறுகளை கொண்டதாகவும் இது விளங்கியிருக்கிறது.
ஆனால் இந்த ஸ்தலத்தில் எங்குமே மனித எலும்புகளை கண்டெடுக்க முடியவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவலாக சொல்லப்படுகிறது. துரா நகரத்திலிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த வடாகோக் கிரே தொல்லியல் ஸ்தலத்திற்கு வரலாம்.