புத்த துறவிகளாலும் இந்துக்களாலும் வணங்கப்படுகிற இந்த அழகிய ஏரி, நம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய சக்தியுள்ள ஒரு புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. கேசியோபல்ரி என்ற வார்த்தை கேசியோ மற்றும் பல்ரி என்ற வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
கேசியோ என்றால் பறக்கும் தேவதைகள் என்றும் பல்ரி என்றால் அரண்மனை என்றும் பொருளாகும். கா-சோட்-பல்ரி என்றும் அழைக்கப்படும் இந்த அழகிய ஏரி, கேசியோபல்ரி கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. கேசியோபல்ரி மலைகளால் சூழ்ந்த இந்த ஏரியையும் புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது.
ஏரியின் புனிதத் தன்மைக்கான புராண காரணங்கள்
இந்த தூய்மையான ஏரியில் தான் குரு பத்மசாம்பவா 64 யோகினிகளுக்கு (தேவதைகளுக்கு) புத்தரின் போதனைகளை கற்பித்தார் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த ஏரி தாரா கடவுளின் காலடி தடம் என்றும் சொல்லப்படுகிறது.
தாரா கடவுள் என்பது வஜ்ராயன புத்த மதத்தின் படி பெண் புத்தராவார். அதற்கேற்றார் போல் வானில் இருந்து இந்த ஏரியை காணும் போது காலடி தடம் போலவே காட்சி அளிக்கும்.
இந்த ஏரி உடலில் இருக்கும் பின்னல் அமைப்பு போன்ற நரம்புகளில் ஒன்றான மார்புப் பகுதியை குறிக்கும் வண்ணமாக திகழ்கிறது என்று நம்பப்படுகிறது. மற்ற அமைப்புகளாக நம்பப்படுவது தஷிடிங், யூக்சோம் மற்றும் பெமயங்க்ட்சே ஆகிய இடங்கள்.
இந்த ஏரி, அரிசி பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் டேமசாங் என்ற இடத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த ஏரி புத்த புனித ஸ்தலங்களான தஷிடிங் மடம், துப்டி மடம்,யூக்சோம், பெமயங்க்ட்சே மடம், ராப்தேன்ட்சே அழிவுகள் மற்றும் சங்க சோயிலிங் மடம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக திகழ்கிறது.
இந்த ஏரிக்கு மற்றொரு சுவாரசியமும் உண்டு. இந்த ஏரியில் ஒரு இலை கூட மிதக்காமல் இங்குள்ள பறவைகள் பார்த்துக்கொள்ளும். ஒரு இலை ஏரியில் விழுந்த அடுத்த நொடியே பறவை அதனை பறந்து வந்து எடுத்துச் சென்று விடும்.
ஒவ்வொரு வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மகே பூர்ணே என்ற சமயஞ்சார்ந்த திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் நேபால் மற்றும் பூட்டானிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.
மேலும் அக்டோபர் மாதம் ஏலக்காய் அறுவடையை கொண்டாடும் விதமாக சோ-ட்ஷோ என்ற திருவிழாவும் இந்த ஏரியில் கொண்டாடப்படுகிறது.
இது சமயஞ்சார்ந்த இடமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளதால் இங்கே அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இங்குள்ள படகுத்துறை மூலம் ஏரியின் முன் பக்கம் சென்று வணங்கலாம்.
மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை சக்கரங்கள் மற்றும் பிரார்த்தனை கொடிகள் இந்த ஏரியின் அழகையும் அதன் சமயப்பற்றான சூழ்நிலையையும் மெருகேற்றும்.