வடகிழக்கு இந்தியப் பகுதியில் அமைந்திருக்கும் சிக்கிம் மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமாக இருப்பது யும்தாங் ஆகும். யும்தாங்கின் அழகினைப் பாராட்டும் வகையில் யும்தாங் "அழகிய மலர்களின் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படுகிறது.
அபரிவிதமான இயற்கை அழகுகளைத் தன்னிலேக் கொண்டிருக்கும் யும்தாங்கை வசந்த காலத்தில் பல வண்ண காட்டு மலர்கள், குறிப்பாக ப்ரைமுலஸ் மற்றும் ரோடோடென்ட்ரான்ஸ் மலர்கள் அலங்கரித்திருக்கின்றன.
இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகள் யும்தாங்கிற்குச் சென்றால் இந்த மலர்களின் அதிசய வண்ணக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இதைத் தவிர இங்கு பல இதமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன.
புவியியல் கூறுகள்
யும்தாங் பள்ளத்தாக்கு, வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3,575 மீ உயரத்தில் இருக்கும் யும்தாங், சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 148 கிமீ தொலைவில் உள்ளது.
யும்தாங் பள்ளத்தாக்கைச் சூழ்ந்திருக்கும் சுற்றுலா பகுதிகள்
யும்தாங்கின் மிக முக்கியமான சுற்றுலா பகுதி ஷின்பா ரோடோடென்ட்ரான் பூங்கா ஆகும். சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் இந்த பூங்கா, ஏப்ரல் முதல் மே மாதம் வரை பூத்துக் குலுங்கும் 24 வகையான ரோடோடென்ரான் மலர்களைப் பரப்பி வைத்திருக்கிறது.
யும்தாங்கின் வலது பக்கத்தில் ஒரு சூடான நீரூற்றும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பசுமையான சமவெளிகள், அழகான இயற்கைக் காட்சிகள், குளுமையான பைன் மற்றும் வெள்ளி காடுகள், மிக உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். அதோடு இந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டும் பிரபலமாக உள்ளது.
யும்தாங்கிற்கு வடக்கில் 6 கிமீ தொலைவில் ஒரு சிவாலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்கு வருடம் முழுவதும் திருப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் யும்தாங்கிற்கு 16 கிமீ தொலைவில் யுமேசாம்டோங் என்றொரு சுற்றுலாத் தலமும் அமைந்துள்ளது.