அட்டகட்டி காண்பதற்கு மிக அழகாக இருந்தாலும், இங்கு செல்வது என்பது பலருக்கு குதிரை கொம்புதான். இங்கு செல்வது அவ்வளவு சுலபமல்ல எனினும் இதன் அழகை கேள்விப் படுபவர்கள் நிச்சயம் இங்கு சென்றே ஆகவேண்டும் என்று விரும்புவார்கள். முக்கியமாக காதல் இணைகள் இங்கு செல்வதை மறுக்கவே மாட்டார்கள். நிச்சயம் அவர்கள் இந்த பாதையில் சென்று தங்கள் இணையுடன் மனம்விட்டு பேச வேண்டும். அதற்கேற்ற இடங்கள் இங்கு நிறைய காணப்படுகின்றன. வாருங்கள் செல்லலாம்.
நல்லமுடி பூஞ்சோலை
நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு மிக அழகான காட்சி முனையம் ஒன்றையும் உள்ளடக்கியது. இங்கிருந்து காண்பது மிகவும் அழகான காட்சியை நம் கண்களுக்கு தந்து நம் மனதை புத்துணர்ச்சியாக்குகிறது.
வால்பாறையிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு தனியார் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. எனவே பெரிய அளவில் அனுமதி என்பது சாத்தியமற்றது. எனினும் தெரிந்தவர்கள் மூலமாக இங்கு செல்வதில் எந்த கெடுபிடியும் இருக்காது.
ஒரு கிமீ வரை நடந்து சென்று நீங்கள் சில அழகான காட்சிகளை காணலாம்.
நீங்கள் செல்லும் சாலையில் யானை எச்சங்கள், புலியின் கால்தடங்கள், கரடியின் எச்சங்களை காணமுடியும். நீங்கள் நடந்து செல்லும் அதே பாதையில்தான் அவைகளும் நடந்து சென்றிருக்கும்.
ஆனைமுடி சிகரம்
இங்கிருந்து காணும்போது உங்களுக்கு ஆனை முடி சிகரத்தின் அற்புத காட்சி கண்ணுக்கு புலப்படுகிறது. இது உங்களை மெய்மறக்கச் செய்கிறது. இந்த பள்ளத்தாக்கில் சில அருவிகளும் காணப்படுகின்றன. இவை எளிதில் நெருங்க முடியாதவை என்றாலும், உள்ளூர் காரர்களுக்கு அவை அத்துப்படி.
சக்தி தலனார் காட்சி
வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சக்தி தலனார் காட்சி முனையம். இங்கிருந்து நீங்கள் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பல மலைகளைக் காணமுடியும். பச்சை பசேலென்று சுற்றிலும் மிக அடர்த்தியான மலைக்காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும்.
அட்டகட்டி காட்சி முனையம்
வால்பாறையிலிருந்து 2.5 கிமீ தூரத்தில் லோம்ஸ் காட்சி முனை அமைந்துள்ளது. இதுதான் அட்டகட்டி காட்சி முனையம் என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் ஆட்களை கேட்டு நீங்கள் இங்கு செல்லலாம். அவர்களின் வழித்துணையோடு பல அழகிய காட்சிகளை ரசிக்கலாம்.
நம்பர் பாறை
நம்பர் பாறை எனும் இடம் வால்பாறை நகரத்துக்கு முன் சங்கிலிரோடு பகுதியில் அதன் மிக அருகில் அமைந்துள்ள இடமாகும். நீங்கள் வால்பாறை செல்லும்போது நிச்சயமாக தவற விடக்கூடாத இடம் இதுவாகும். உங்கள் பாதங்களை இதன் பனிகள் தொட்டு உடலைச் சிலிர்க்கச் செய்யும். இது தனியார் பகுதி என்றாலும் உரிய அனுமதியுடன் செல்வது மிக உன்னதமான சுற்றுலாவாக அமையும்.