சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த பக்கங்களில் மதுரை மாநகரின் பெருமைகளும், முக்கிய சுற்றுலா அம்சங்களும் சுருக்கமாக தரப்படுகின்றன.
வைகை ஆற்றின் கரையில் 'மதுரை' எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் எழும்பியுள்ளது. இதன் வடக்கில் சிறுமலை மலைத்தொடர்களும், தெற்கில் நாகமலை மலைத்தொடர்களும் அமைந்திருக்கின்றன. மதுரம் எனும் சொல்லிலிருந்து மதுரை என்ற பெயர் வந்ததாக ஒரு பழமையான கருத்து நிலவுகிறது.
அதாவது மதுரம் எனும் புனித தேன் துளிகளை இந்த நகரத்தின் மீது சிவபெருமான் தெளித்ததாக ஐதீகம். நான்மானக்கூடல், கிழக்கத்திய ஏதென்ஸ், திருவிழா நகரம், தாமரை நகரம் மற்றும் தூங்கா நகரம் எனப்படும் பல்வேறு சிறப்புப்பெயர்களை இந்த மதுரை மாநகரம் பெற்றுள்ளது. சரி வாங்க நம்ம மதுரையில காணவேண்டிய அந்த இடங்களைப் பற்றி பார்க்கலாம்.
மதுரையில இங்கெல்லாம் போய்ருக்கீங்களா?
மதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும். காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
ஒரு கோடிப்பே... ஆமாப்பே ஒரு கோடி
நீங்க மதுரைக்கு எப்ப போனாலும் அங்க குறைந்த பட்சம் நூறு வெளிநாட்டுக்காரங்களயாச்சும் பாத்துடலாம். 2010ம் வருசத்துல மட்டும் 9100000 பயணிகள் மதுரைக்கு வந்துட்டு போயிருக்காங்க. அதுல 524000 வெளிநாட்டுக்காரங்களாம். இந்த பத்து வருசத்துல இதுமாதிரியான புள்ளிவிவரங்கள் வெளிவர்ல அப்படின்னாலும் கண்டிப்பா இந்த கணக்கு ஒரு கோடி அளவ நிச்சயம் தாண்டியிருக்கும்னு நம்பப்படுது. சரி நீங்க நம்ம மதுரையின் இந்த இடங்களுக்கெல்லாம் போயிருக்கீங்களா?
மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரர் கோலத்தில் வந்த சிவனுக்கும் மதுரையில் கோவில் கட்டப்பட்டது. அதுதான் மீனாட்சி அம்மன் கோவில்.
மொத்தம் 12 கோபுரங்களைக் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில். இதில் கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வானுயர அமைந்திருப்பது காண்பதற்கு அழகூட்டுவதாக உள்ளது. நான்கு கோபுரங்களிலும் தெற்கு கோபுரம்தான் அதிக உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.
பழமையான கோபுரம் 13-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம். சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகினில்
மீனாட்சி கோவிலில் இடம் பெற்றுள்ள அஷ்ட சக்தி மண்டபம், திருமலை நாயக்கரின் இரு மனைவிகளால் கட்டப்பட்டது. இதற்கு அடுத்து உள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம்.
கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக நுழைந்தால் தென்படுவது பொற்றாமறைக் குளம். இக்குளத்தின் நடுவில் தங்கத் தாமரை மிதக்க விடப்பட்டிருந்ததால் இப்பெயர் வந்தது. இங்குதான் தமிழ்ச் சங்கம் இயங்கியது.
தொடர்ந்து உள்ளே சென்றால் தலில் வருவது அம்மன் சன்னதி. அடுத்து வருவது சுந்தரேஸ்வரர் சன்னதி. அம்மன் சன்னதிக்கு முன்பாக, ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிலைகள் ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும்.
கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கே அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் சன்னதி. வழியில் நாம் பார்ப்பது பிரமாண்டமான பிள்ளையார் சிலை. இது முக்குறுணிப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது. கோவில் கட்டும் போது, மண்ணுக்காக வண்டியூரில், பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். அப்போது அங்கு இந்த பிள்ளையார் கிடைத்தார்.
காந்தி மியூசியம்
இந்தியாவில் உள்ள ஐந்து காந்தி மியூசிங்களில் இந்த மதுரை காந்தி மியூசியமும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயமாகும். தேசப்பிதா காந்தியடிகள் தொடர்புடைய பல ஞாபகார்த்தப்பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். காந்திஜியின் பல அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கூடல் அழகர் கோயில்
தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு மஹாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார். ராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்
காஜிமார் மசூதி
மதுரை ஜங்ஷன் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த காஜிமார் மசூதி அமைந்துள்ளது. பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் இறைத்தூதர் முகமதுவின் வழித்தோன்றலாக அறியப்படுகிறார். மதுரையில் உள்ள மசூதிகளிலேயே மிக பழமையானதாக இது கருதப்படுகிறது. ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் இந்த மசூதி அமைந்துள்ள இடத்தை கையளித்ததாக சொல்லப்படுகிறது.