இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான மரபுகளில் ஒன்று சமணம். சமணர் என்றால் எளிய வாழ்க்கை வழக்கூடிய, துறவு என்று பொருள். பண்டைய இலங்கியங்களில் இவர்கள் குறித்தான பல தகவல்களை அறிய முடியும். சைவ மதம் தோன்றிய பிறகே சமணம் அழிக்கப்பட்டதாகவும் சில குறிப்புகள் உள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட சமணத்தின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் நம் ஊரிலும் ஒரு கோவில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா ?
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறைக்கு அருகில் உள்ளது சிதறால் கிராமம். தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையினாலும், மார்த்தாண்டம் அடுத்துள்ள கடலினாலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக காணப்படுகிறது. இங்குதான் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது சிதறால் என்னும் வரலாற்று சிறப்புமிக்க மலைக் கோவில்.
பரவசமூட்டும் மலைக் காட்சி
மலையின் அடிவாரத்தில் இருந்து பார்க்கும் பொழுது உச்சியில் சிறிய பாறை போல காட்சியளிக்கும் இக்கோவில் நான்கு புறமும் பசுமைக் காடுகளால் சூழப்பட்ட தலமாகும். அடிவாரத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் படிகளில் நடந்து சென்றால், குகைக் கோவிலை அடைந்து விடலாம்.
முனிவர் குகை
படிக்கட்டுகளைக் கடந்தவுடன் முதலில் நம் கண்களுக்குத் தென்படுவது முனிவர்களின் குகை. 7-ஆம் நூற்றாண்டு வரையிலும் இங்குள்ள கல் குகைகளில் முனிவர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதனைக் கடந்து சென்றால் மலையின் மேலே கோவிலை அடையலாம்.
திருச்சாணத்து மலை
திருச்சாணத்து மலை என்றழைக்கப்படும் சிதறால் மலையின் மேலே சமணர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான பகவதி அம்மன் கோவில் உள்ளது. கோவில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் இவ்விடத்தில் சமணப் பள்ளி ஒன்று செயல்பட்டதற்கான சான்றாக உள்ளது.
சிதறிக் கிடக்கும் சிதறால்
கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சைவ சமயம் வலுப்பெறத் துவங்கியதைத் தொடர்ந்து சமண மதம் ஒடுக்கப்படத் தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் சமண, புத்த மதங்கள் ஒடுக்கப்பட்டன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின் இன்று வரை பல நூற்றாண்டுகள் சிதறால் கோவில் பராமரிப்பின்றி கிடக்கின்றது.
தல அமைப்பு
சிதறால் மலைக் குகையின் மேற்கே இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் சிற்பங்கள் இப்பகுதி சமணர்களின் முக்கியத் தலம் என்பதை விளக்குகிறது. ஐந்து தலை நாகம் காக்கும் பார்சுவநாதர், மற்ற சிறு கல்வெட்டுகள், மகாவீரர் சிலை அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் என பல கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன.
கட்டாயம் செல்ல வேண்டும்
இக்கோவில் மொத்தம் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு, தீர்த்தங்கரர் சிற்பம், தேவி, பார்சுவநாதர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிற்பக் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் கட்டாயம் ஒருமுறையேனும் இங்கே பயணிக்க வேண்டும்.
எப்படிச் செல்வது ?
கன்னியாகுமரியில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் மார்த்தாண்டம் அடுத்துள்ளது சிதறால் மலைக் கோவில். கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம், திக்குறிச்சி செல்ல பேருந்துகள் உள்ளன.