ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், நேரம் இருப்பின் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து பராமரித்தனர். ஹம்பியிலுள்ள பொதுக் கட்டிடங்களிலேயே மிக சிறப்பானது என்று சொல்லும்படியாக இந்தோ-இஸ்லாமிக் கட்டிடக்கலை மரபுப்படி இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த அமைப்பானது 11 பிரம்மாண்டமான உயரமான அறைகளை கொண்டுள்ளது.
அமைப்பு
இந்த அறைகளின் மேற்பகுதி குமிழ் வடிவ விதான வடிவமைப்பை கொண்டுள்ளது. கல்லாலும் சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த குமிழ் விதானங்கள் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. முரசு வடிவத்திலும், எண் முகம் கொண்டதாகவும், வரிவரியான அமைப்பை கொண்டதாகவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இசைக்கலைஞர்கள்
மையத்திலுள்ள குமிழ் விதானம் மிகப் பெரியதாக காணப்படுகிறது. இதற்கு கீழே இசைக்குழுவினர் இருந்து முக்கியமான யானைகள் தொடர்பான திருவிழாக்கள் அல்லது சடங்குகளின்போது போது இசைக்கருவிகளை இசைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
யானைகள் கட்டப்படும் இடம்
இங்கு உள்ளே இருக்கும் கூரைப்பகுதியில் யானைகளை கட்டுவதற்கு பயன்படுத்திய இரும்பு வளையம் உள்ளதை காணலாம். ஒவ்வொரு அறையின் பின்புற மூலையிலும் யானைப் பாகன்கள் பாதுகாப்பாக நுழைவதற்கு சிறியதான தரைவழித் துவார கதவுகள் இருக்கின்றன. இது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
மற்றவிவரங்கள்
நேரம் - வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த இடம் திறந்திருக்கும்.
நுழைவு கட்டணம்
இந்தியர்களுக்கு - 10 ரூபாய்
வெளிநாட்டவர்களுக்கு - 250 ரூபாய்
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி
புகைப்படம் எடுக்க கட்டணம் இல்லை
எவ்வளவு நேரம் செலவிடலாம் - கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை இங்கு செலவிடலாம்.
சிறப்பான நேரம் - நவம்பர் முதல் பிப்ரவரி வரை
வரலாறு
இது 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது. விஜயநகரத்தின் யானைகள் இருக்கும் இடமாக இது கருதப்படுகிறது.
விஜயநகர பேரரசின் காலத்தில் பெரிய யானைப் படை வைத்திருந்தனர்.அவற்றை எல்லாம் பாதுகாத்து வந்தனர். இந்த யானைகள் அரசர் செல்லும் வாகனமாக இருந்தது. அவை மிகவும் பெரிய அளவில் மதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டன.
கட்டிடக்கலை
இது இந்திய இஸ்லாமிய கட்டிடக் கலையை ஒத்து கட்டப்பட்ட கட்டிடமாகும். பெரும்பாலும் இந்த பகுதிகளில் விஜயநகர கட்டிடக் கலை பயன்படுத்தி பல கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தாலும், இது மட்டும் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது.
தனித்தன்மை
இது நடுவில் ஒன்று பெரியதாகவும், சுற்றி 11 எனவும் அமைக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் கட்டிடமாகும்.
இந்த மத்தியில் இருக்கும் கட்டிடத்தை கட்ட பயன்படுத்தப்பட்ட கட்டிடக்கலை ஹம்பியின் கட்டிடக்கலையை போன்றதாகும்.
எப்படி செல்வது | பயண தொலைவு மற்றும் நேரம்
ஹம்பிக்கு செல்வது எப்படி என பலருக்கு தெரிந்திருக்கும். அது யுனெஸ்கோ நினைவுச் சின்னம் என்பதாலும், மிக அதிக அளவில் பிரபலமான இடம் என்பதாலும், இங்கு பலர் சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர்.
அருகிலுள்ள விமான நிலையம்
பெல்லாரி விமான நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளது. இது ஹம்பியிலிருந்து 64 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம்
ஹம்பியில் ரயில் நிலையம் என எதுவும் இல்லை. ஹொசப்பேட்டை எனும் இடம் இதன் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இது ஹம்பியிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சாலை வழியாக
ஹம்பி கர்நாடகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் அருகாமை நகரங்களிலிருந்து எளிதாக இணைக்கப்பட்டுள்ளது.