இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் மகேந்திர சிங் தோணி என்ற ஒற்றைச் சொல் போதும் அவரது ரசிகர்கள் அனைவருமே மெய் சிலிர்த்துவிடுவர். இன்றைய தலைமுறையில் சிறு குழந்தையும் கூட தல தோணி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய ஒரு நாயகன். 1983-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை வெல்ல முடியாமல் தினறிய போது 2011ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி வரை நிலைத்து நின்று சிக்சரோடு வெற்றிக் கனியை தன் சக மக்களுக்கு சமர்ப்பித்தார் அவர். தன்னை வெறுப்பவர்களையும் ஏதோ ஒரு தருணத்தில் நேசிக்க வைக்கக்கூடிய ஒரு மகத்தான கேப்டன் தோணி நம் தமிழகத்தில், குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள அருவியில் குதூகலமாக விளையாடியது உங்களுக்குத் தெரியுமா ?
திருநெல்வேலி
திருநெல்வேலி என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இம்மாவட்டத்திற்கு அருகில் உள்ள குற்றால அருவிகள் தான். அதனைத் தவிர்த்து பழங்காலக் கோவில்களுக்கு இம்மாவட்டம் பிரசித்தம் பெற்றதாக உள்ளது. மாநிலத்திலேயே மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் ஆலயத்தை தன்னகத்தே கொண்ட பெருமையை திருநெல்வேலி கொண்டுள்ளது. தாமிரபரணி ஆறும், பாபநாசமும் இம்மாவட்டத்தின் அடையாளங்களாகும்.
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் இதன் பசுமை நிறைந்த நிலப்பரப்பிற்காக பெயர்பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரமான அம்பாசமுத்திரம் வழியாக வழிந்தோடும் தாமிரபரணி ஆறு இந்நகரத்தின் பசுமைச் சூழலுக்கு மக்கியக் காரணமாகும். இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், குடிநீர் ஆதாரமாகவும் பயண்படுகிறது.
குண்டாறு அணை
திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் வழியாக சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். திருநெல்வேலியில் இருந்து ஆழ்வார்குறிச்சி, குற்றாலம் வழியாக 93 கிலோ மீட்டர் பயணித்தாலும் இந்நீர்த் தேக்கத்தை அடைய முடியும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இது உள்ளூர் வாசிகளால் பெரிதும் விரும்பிப் பயணிக்கக் கூடிய சிற்றுலாத் தலமாகும்.
தென்மேற்குப் பருவ மழை
குண்டாறு அணை 36 அடி கொள்ளளவு கொண்டதாக இருந்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான தென்மலையையும், மறுபுறம் பாலருவியும் அருவியும் கொண்டுள்ளதால் வருடத்தின் எந்தக் காலத்தில் வந்தாலும் அற்புதமான காட்சியக்கக் கூடியது குண்டாறு அணை.
குற்றாலக் குண்டாறு
குற்றாலம் ஐந்தருவில் இருந்து 14 கிலோ மீட்டரும், செங்கோட்டையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் உள்ள குண்டாறு அணை திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களின் ஒன்றாகும். சீசன் காலங்களில், இதன் ரம்மியமான அழகைக் காண குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.
படகுச் சவாரி
குண்டாறு நீர்த்தேக்கத்தில் சீசன் காலங்களில் படகுச் சவாரி துவங்குவதும் வழக்கம். இதமான சாரலுடன், குளிர்ந்த தென்றல் காற்றை நீரின் நடுவேயிருந்து அனுபவிக்க விரும்பும் பயணிகள் தாராளமாக இங்கே பயணிக்கலாம். வாய்பிருந்தால் படகில் பயணித்தபடியே கரையோரப் பகுதியில் விலங்குகள் நீரருந்த வரும் காட்சிகளும் கிடைக்கக் கூடும்.
குண்டாறு அருவி
குண்டாறு அணைக்கு மேலும் சிறப்பூட்டக் கூடியது குண்டாறு நீர்வீழ்ச்சி. உள்ளூர் மக்களால் நெய்யருவி என அழைக்கப்படும் இது குண்டாற்று நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. சிறிய மலைப் பாதையான இங்கு இருசக்கர வாகனத்தில் பயணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அங்கேயே வாடகைக்கு ஜீப் கிடைக்கும். கரடு, முரடான பாதையில் பயணிக்க இதுவே சிறந்ததாகவும் இருக்கும்.
சுற்றுலாப் பயணிகள்
பெரும்பாலும் யாரும் அறியாதவாறு உள்ள இந்த அருவிக்கு, குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலர் வந்து செல்வது வழக்கம். நெரிவலின்றி, அதே சமயம் பாதுகாப்பாக அருவியில் குளிக்க விரும்புவோருக்கு இது ஏற்றதாகும். நெய்யருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் குண்டாறு அணையில் படகு சவாரி செய்தும் மகிழலாம்.
தலை தோணி அருவி
குண்டாறு அருவி, நெய் அருவி என அழைக்கப்பட்டு வந்த இது தற்போது தல தோணி அருவி என்று அழைக்கக் காரணம் நம் கிரிக்கெட் ஜாம்பவான் தோணியே இதில் குளித்ததால் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக திருநெல்வேலி வந்த எம்.எஸ்.தோணி இப்பகுதியின் முக்கிய சுற்றுலாத் தலமான குண்டாறு அருவியில் குளித்தும், குண்டாறு அணைக்குச் சென்றும் இயற்கையை ரசித்தார்.