ஒரு நாட்டின் அடையாளமும், பெருமையும் என்பது அந்த நாட்டினுடைய வரலாற்றில் இருந்தே தொடங்குகிறது. மன்னர்கள் காலம் தொட்டு தற்போது வரை ஒரு நாடு எத்தகைய வளர்ச்சியைக் கண்டுள்ளது ? ஆரம்பகாலத்தில் ஆட்சியின் முறைகள், பாரம்பரியம், சின்னம் என ஒவ்வொன்றும் அடையாளத்தின் அங்கமாக உள்ளன. இதில் முக்கிய பங்கு வகிப்பது செழிப்பான நாட்டை ஆண்ட மன்னர்களின் கட்டிடங்களே. பிற நாட்டினரை ஈர்க்கும் வகையிலான கட்டங்கள் இந்தியாவின் அடையாளச் சின்னங்களாக தற்போது வரை தனது கம்பீரத்தை இலக்காமல் உள்ளது. அதில், பிரம்மாண்டமான சுற்றுலாத் தலங்களாக உள்ள சில கோட்டைகளும், அரண்மனைகளும் எதுவென பார்க்கலாம்.
ஃபலக்னுமா பேலஸ்
ஃபலக்னுமா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஒரு ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரால் பல கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டது. அப்போதைய ஹைதராபாத் பிரதானியாக விளங்கிய நவாப் விகார் உல் உம்ரா என்பவருக்கு சொந்தமான இந்த மாளிகை பின்னாளில் நிஜாம் மன்னர்களின் வசம் சென்றது. ஒரு தேளின் உருவம் போன்று இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷமான அம்சமாகும். தேளின் இரண்டு முன்புற கொடுக்குகளை சித்தரிக்கும்படியாக அரண்மனையின் வெளிப்புற நீட்சிகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தேளின் உடல்பகுதியாக அரண்மனையின் பிரதான உட்கட்டமைப்புகள் மற்றும் சமையல் கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அந்தப்புரம் மற்றும் மகளிர் குடியிருப்பு போன்றவை தெற்கு நோக்கிய பின்பகுதியில் இடம் பெற்றுள்ளன. துடோர் மற்றும் இத்தாலிய கட்டிடக்கலை அம்சங்களின் கதம்பமாக இந்த அரண்மனையின் வடிவமைப்பு காட்சியளிக்கிறது. ஜன்னல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் துடோர் பாணியில் வண்ணப்பூச்சு அலங்கார நுணுக்கங்களை கொண்டுள்ளன.
Ronakshah1990
லால் பாக் அரண்மனை
கான் நதிக்கரையில் பிரமிக்கத்தக்க வகையில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள அற்புதமான இடம் தான் லால் பாக் அரண்மனையாகும். மகாராஜா சிவாஜி ராவ் ஹோல்கார் என்பவரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை ராஜ குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்காக பயண்படுத்தப்பட்டது. லால் பாக் அரண்மனையின் தனித்தன்மையான கட்டிடக்கலையின் காரணமாகவே அது இந்தூரின் புகழ் பெற்ற பார்வையிடங்களில் ஒன்றாக உள்ளது. ஹோல்கார் அரசர்களின் ராஜ மற்றும் படோடபமான வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இந்த மாளிகை உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ரோஜா தோட்டங்களை இந்த மாளிகை கொண்டிருக்கிறது. இந்த மாளிகையின் நுழைவாயில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் இந்த மாளிகை முழுமையும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் சுவர்கள் மற்றும் கூரைகளில் இருக்கும் சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.
Shibnaths2
குஜராத்
குஜராத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நவாப் ஜூனகர்க். ஆடம்பர வாழ்வில் அதிக ஆர்வம் கொண்ட அரசர் இவர். தனது பாதுகாப்பிற்கு மட்டுதே வலிமைவாய்ந்த 800 நாய்களை வளர்த்து வந்துள்ளார். அவற்றை பாதுகாப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் என ஒவ்வொரு நாய்க்கும் தனியாக பணியாட்களையும் நியமித்து பராமரித்துள்ளார். நாய்களின் மீது இவர் கொண்டுள்ள ஆர்வத்தின் வெளிப்பாடாக xரு ஜோடி நாய்களுக்கு லட்சக் கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் என்றால் பாருங்களேன்.
Bernard Gagnon
மைசூர்
மைசூர் குறித்த வரலாற்றுபூர்வமான ஆதாரங்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. வரலாற்று ஆதாரங்களின் படி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1004-ஆம் ஆண்டு வரை கங்க ராஜ வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. அதன் பின்னர் நூறு ஆண்டுகளுக்கு சோழ ராஜ வம்சத்தினரின் ஆட்சி தொடர்ந்துள்ளது. அதற்கடுத்ததாக சாளுக்கிய வம்சத்தினரின் ஆளுகையில் மைசூர் 10 ம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. திரும்பவும் 10 ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த சோழர்கள் 12ம் நூற்றாண்டில் ஹொய்சள வம்சத்தினரிடம் மைசூரை இழந்தனர். பின், மைசூரை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆண்டனர். அதன் பின்னர் மைசூர் திரும்பவும் உடையார்களின் தலைநகரமாக மாறியது. 1895 ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் தன் ஒப்பற்ற திட்டங்களின் மூலம் மைசூர் நகரத்தை அழகு மிகுந்த நகரமாக மாற்றினார். இதில் வியக்கத்தகுந்த விசயம் என்னவென்றால் 1916ஆம் ஆண்டிலேயே கிருஷ்ணராஜ வாடியார் பல கோடி மதிப்புகொண்ட ரோல்ஸ் ராயல்ஸ் காரை பயன்படுத்தியுள்ளார். அப்போதே அவரது சொத்து மதிப்பு மட்டும் 35 பில்லியன் யூரோக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
Jim Ankan Deka
பெங்களூர் அரண்மனை
பெங்களூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது அரண்மனைப் பூங்கா. பெங்களூர் அரண்மனை என்று பரவலாக அழைக்கப்படும் இந்த அரண்மனை 1862ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரெவரெண்ட் காரட் என்பவரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது அப்போதைய ராஜாவான உடையார் வம்சத்தை சேர்ந்த சாமராஜ உடையாரால் 1884ம் ஆண்டு வாங்கப்பட்டது. 45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க 82 வருடங்கள் கடந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா ?. இந்த அரண்மனையின் கீழ் தளத்தில் உள்ள திறந்த வெளி முற்றத்தில் நீல நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கல்லால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன. இரவில் இந்த நீல நிற பீங்கான் இருக்கைகள் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும் அழகு அற்புதமான ஒன்றாகும். மேல் தளத்தில் பிரம்மாண்டமான தர்பார் ஹால் காணப்படுகிறது. ராஜா தன் அவையினருடன் கலந்தாலோசித்த இடமாக இது அறியப்படுகிறது. அரண்மனையின் உட்புற சுவர்களில் கிரேக்க மற்றும் டச்சு ஓவியங்களும் புகழ் பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த தொன்மை வாய்ந்த ஓவியங்கள் அரண்மனையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன என்றால் மிகையாகாது.
Mukesh Barnwal
சிட்டி பேலஸ்
உதய்பூரில் அதிகளவில் அரண்மனைகளையும், கோட்டைகளையும் பார்க்க முடியும். அதில் சிட்டி பேலஸ் அரண்மனை உதய்பூரிலுள்ள அற்புதமான மாளிகைகளில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய மாளிகைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிசோடிய ராஜபுதன வம்சத்தின் தலைமைப்பீடமாக இந்த அரண்மனையை 1559ம் ஆண்டில் மஹாராணா உதய் மிர்ஸா சிங் நிர்மாணித்துள்ளார். சிட்டி பேலஸ் அரண்மனை வளாகம் 11 அரண்மனைகளை தன்னுள் கொண்டுள்ளது. இந்த அரண்மனையின் கட்டமைப்பு முகலாய மற்றும் ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாணியின் கலவையான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் உச்சியின் கட்டப்பட்டுள்ளதால் இங்கிருந்து மேலிருந்து கீழாக மொத்த நகரத்தையும் பார்க்க முடிகிறது. சிட்டி பேலஸ் அரண்மனை வளாகத்தில் உள்ள இதர அரண்மனைகளாக கிருஷ்ண விலாஸ், கண்ணாடி மாளிகை, முத்து மாளிகை போன்றவை இடம்பெற்றுள்ளன. உதய்பூரின் மிகப்பெரிய கோவிலான ஜகதீஷ் கோவில் இந்த வளாகத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ashwin Kumar