மழைக்குப் பிறகு எந்தவொரு ஊரும் மணப்பெண் போல் அழகாய் ஆகிவிடுகிறது. அதே போல மழைக்குப் பிந்தைய சுற்றுலா நம்முள் பெரும் உற்சாகத்தை கொடுக்கிறது. நீர்த்துளிகள் சொட்டும் செடிகள், மிதமான குளிர், நிறைந்த ஏரிகள் எல்லாம் சேர்ந்து நம்மை இயற்கையின் வனத்துக்குள் அழைத்துச் செல்கிறது. இத்தகைய செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் என்னென்ன ?
Photo Courtesy : Chefanwar1
குன்னூர்
பசுமை பொங்கும் தேயிலை செடிகளால் போர்த்தப்பட்ட குன்னூர் மழைக்காலத்தில் எப்படியிருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. இந்த ஊரின் தமிழ்ப்பெயர் குன்றூர். சங்ககாலத்தில் வேளிர் குடியினர் என்ற உழவர்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர்.
குன்னூரின் சிறப்பு, தேயிலைத் தோட்டங்கள். கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் சுற்றி படர்ந்திருக்கும் பசுமை பொங்கும் தேயிலைச் செடிகள் காண்போர் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும்.
சிம்ஸ் பூங்கா
இதுதவிர சிம்ஸ் பூங்கா குன்னூரில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலம். 29 ஏக்கர்கள் வரை விரிந்திருக்கும் இந்த பூங்காவில், எண்ணற்ற வகை மலர்கள், அரிய வகை செடிகள் இருக்கின்றன. கி.பி 1874'இல் சிம்ஸ் மற்றும் முர்ரே ஆகிய இரண்டு ஆங்கிலேயர்கள் இந்த பூங்காவை வடிவமைத்தனர். இதன் நினைவாக சிம்ஸ் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், மேமாதத்தில் இங்கு நடக்கும் பழங்கள் கண்காட்சி மிகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஈர்ப்பாகும்.
இது தவிர பறவை புகைப்படம் எடுப்பவர்களுக்கு சிம்ஸ் பூங்கா ஒரு நல்ல இடம்.
பைதல் மலை
Photo Courtesy : Kamarukv
கேரள-கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் இந்த பைதல் மலை மலையேற்றம் செய்ய விரும்புவோர்க்கு, புகைப்படம் எடுக்க விரும்புவர்களுக்கு ஏற்ற இடம். கண்ணூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது.
முழப்பிலங்காடு கடற்கரை
Photo Courtesy : Ranjit Laxman
கண்ணூரிலிருந்து 15 கி.மீ., தொலைவிலும், தலச்சேரியிலிருந்து 8 கி.மீ., தொலைவிலும் அமைந்த அருமையான் கடற்கரை சுற்றுலாத் தலம்.
இந்த கடற்கரையின் நீளம் 4 கி.மீ. இது மணற்பாங்கான சவாரிக்கு ஏற்றது. அமைதியும் அழகும் மிகுந்த இந்த இடம் அதிகம் பிரபலம் அடையாத இடமாக இருக்கிறது. பாண்டிச்சேரி, மரேன் ட்ரைவ் கடற்கரை போல பெரிய கரும்பாறைகள் போடப்பட்டு கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்திருக்கின்றனர். இந்த பாறைகளுக்கிடையில் தேங்கிக் கிடக்கும் கடல் நீரில் நீச்சல் அடிப்பதற்காகவே பலர் விரும்பி வருகின்றனர். இன்னொரு சிறப்பு கடற்கரையொட்டி இருக்கும் தென்னந்தோப்புகள் அத்தனை அழகான சூழலை பார்ப்பவரைத் தரக்கூடியது.
ஏலகிரி, வேலூர் மாவட்டம்
Photo Courtesy : cprogrammer
ஏலகிரி என்னும் மலைவாசஸ்தலம், வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் இருக்கிறது. ஏலகிரி, கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது.
ஏலகிரி மலை, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிட்டாலும் இதன் அமைதியான சூழல், சலகாம்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் காண பலர் வருகின்றனர். சலகம்பாறை நீர்வீழ்ச்சி, மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
நிலாவூரில் இருந்து 6 கி.மீ மலைப் பயணத்தின் மூலமாக நீர்வீழ்ச்சியை அடையலாம். இதுதவிர பூங்கானூர் ஏரி மற்றும் குழந்தைகள் பூங்காவும் இருக்கிறது.