சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தற்போது தமிகமே ஜில்லென்ற காலநிலையில் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. மழையின் ஈரத்தை கண்டு வெறுத்து அதை தவிர்த்து விட்டு வீட்டில் ஒடுங்குவதை விட தற்போது பெய்து வரும் பருவமழை காலத்தை சிறப்புடன் கொண்டாடி மகிழ பல சுற்றுலாத் தலங்கள் நம் ஊர் அருகிலேயே உள்ளது. இந்த இதமான சூழலில் மன அழுத்தத்தைப் போக்கிக் வார இறுதி நாட்களில் ஒரு ட்ரிப் அடிக்க விரும்புவோர், குறிப்பாக கார் வைத்திருப்போர் மழைச் சாரலை ரசித்தபடியே எங்கவெல்லாம் சுற்றுலா செல்லாம் என்ற தொகுப்பு தான் இக்கட்டுரை. சற்று வித்தியாசமான பயண அனுபவத்தை பெறுவதற்காக தென் இந்தியாவில் இருக்கும் சிறந்த கடலோர சாலைகளில் பயணிக்கலாம் வாங்க.
தனுஷ்கோடி - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி
மத்திய மற்றும் தென் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சாலை ஏதுவானதாக இருக்கும். புனித யாத்திரையுடன் சேர்த்து கடலோர சாலைகளை கண்டு மனதை இளக்கிக் கொள்ள விரும்புவோர்க்கு இது சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெரியவர்கள், குழந்தைகள் என குடும்பத்தினரை கூட்டிக் கொண்டு செல்வோர்க்கும், பைக்கில் வித்தியாசமான இடத்திற்கு சென்று வர விரும்பும் இளைஞர்களுக்கும் இந்த வழித்தடம் இனிய அனுபவத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்கும்.
Nataraja
ராஜமுந்திரி - விசாகப்பட்டணம்
ஆந்திர கடலோர மாவட்டங்கள் மற்றும் விசாகப்பட்டணத்தில் வசிப்பவர்கள் இந்த சாலை ஏதுவானதாக இருக்கும். ஆங்காங்கே கடற்கரையை தழுவிச் செல்லும் இந்த சாலையில் பயணிப்பதும், கார் ஓட்டிச் செல்வதும் மனதில் உள்ள ஆயிரம் பாரங்களையும் மறக்கடிக்கச் செய்யும். ராஜமுந்திரி - விசாகப்பட்டணத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 5ஐ விரும்பாதவர்கள் இருக்க முடியாது என்று சென்று வந்தவர்களின் அனுபவ கூற்றாக உள்ளது.
Tatiraju.rishabh
சென்னை - தரங்கம்பாடி
வட தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும், சென்னை மாநகரில் வசிப்பவர்களுக்கும் ஏற்ற சாலை இது. இசிஆர் என்று நாம் சுருக்கமாக அழைக்கும், கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக தரங்கம்பாடி வரையிலான சாலையில் பயணிப்பது ஓர் இனிதான பயணமாக அமையும். கடற்கரையை ஒட்டி செல்லும் சாலைகள், கடற்கரையில் அமைந்திருக்கும் சுற்றுலா தலங்களை தரித்தபடியே, உங்களது பயணம் இனிதாக தரங்கம்பாடி கோட்டையில் நிறைவு செய்யலாம். திட்டமிடாமல் திடீர் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற வழித்தடம்.
Ssriram mt
காசர்கோடு - கொச்சி
இயற்கையின் வனப்பை கண்டு மகிழ ஏற்ற சாலை இது. வால்பேப்பரில் கண்டு மனம் வியந்த பல காட்சிகளை நிஜமாக காணும் பேறு பெறுவதற்கு இந்த சாலையில் அவசியம் பயணிக்கவும். காசர்கோடு பள்ளிவாசல், பேகல், சந்திரகிரி கோட்டை, பிரிட்டிஷ் ஆட்சியின் எச்சங்களை சுமந்து நிற்கும் தலசேரி மற்றும் வாஸ்கோடகமா வந்திறங்கிய கப்பாட் பீச் போன்றவற்றை பார்த்தவாறே நம் பயணத்தை மனது நிறைந்த பதிவுகளுடன் நிறைவு செய்யலாம்.
Prathyush Thomas
மங்களூர் - கார்வார்
பெங்களூரில் வசிப்பவர்கள், கர்நாடக எல்லையோர மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் இந்த சாலையில் செல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டு செல்வது ஏற்றதாக இருக்கும். மங்களூர் - கார்வார் இடையிலான மேற்கு கடற்கரை சாலையில் செல்லும்போது, கடற்கரையின் அழகில் சொக்கி போவது நிச்சயம். இந்த சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்வதில் கிடைக்கும் சுகமே அலாதிதான். அந்த சூழல் நிச்சயம் நம் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை சுகமான சுமைகளாக மனதில் இறுகச் செய்யும். அரபிக்கடலின் அழகும், தென்னை மரங்களின் நெருக்கமும் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும்.
Premnath Kudva
முழுப்பிளாங்காட் பீச்
கேரள மாநிலத்தில் உள்ள முழுப்பிளாங்காட் டிரைவ் இன் பீச் பற்றி ஏற்கனவே தகவல் வழங்கியிருக்கிறோம். தேசிய நெடுஞ்சாலை எண் 17 இணைப்பில் உள்ள இந்த பீச்சை பற்றி கார் உரிமையாளர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். இந்தியாவில் இருக்கும் சிறந்த ஒரே டிரைவ் இன் பீச் இதுதான். அதாவது, கடலுக்கு வெகு அருகாமையில், அலைகளினூடே காரை ஓட்டுவதற்கான உறுதியான நில அமைப்புடன் கூடிய கடற்கரையை பெற்ற பீச் இது. கார் வைத்திருப்பவர்கள் ஒருமுறையாவது செல்ல வேண்டிய பீச் இது.
Shagil Kannur