சபரிமலை எனும் ஆன்மீக மலைப்பிரதேசம் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்காகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சாரி சாரியாக அணிவகுத்து வருகை தந்து ஒரு பெரும் மக்கள் திரளாக குவிந்து இந்த ஐயப்பன் கோயிலை தரிசிக்கின்றனர். கவலைகளை நீக்கி, மன நிறைவையும், சாந்தியையும் அளித்து பக்தர்களின் வேண்டுதல்கள் யாவையும் இந்த ஐயப்ப பஹவான் நிறைவேற்றுவதாக ஐதீக நம்பிக்கை நிலவி வருகிறது. இங்கு மிக முக்கிய கட்டுப்பாடாக, வயது வந்த பெண்கள் நுழைய தடை இருக்கிறது. என்னதான் போராடினாலும், உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் இந்த கோவிலுக்குள் நாங்கள் பெண்களை நுழைய விடமாட்டோம் என பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சிலரே போராடி வருவது ஆச்சர்யமளிக்கிறது. 21ம் நூற்றாண்டிலும் பகுத்தறிவு எந்த நிலையில் இருக்கிறது என்று எதிர் தரப்பினர் கேள்வி எழுப்ப போர்க்களமானது நிலக்கல். ஆமாம்.. அது எங்கே இருக்கிறது.. என்னவெல்லாம் இருக்கிறது. வாருங்கள் காணலாம்.
மாதாந்திர பூசை
சபரி மலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூசைக்காக இன்று நடை திறக்கப்படவிருந்தநிலையில் எப்போதையும் விட மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது சபரிமலை. அதிலும் குறிப்பாக இந்த நிலக்கல் பகுதி போர்க்களமாகியுள்ளது.
பெண்களுக்கு சம உரிமை
பெண்களுக்கு சம உரிமை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் சபரிமலைக்குள் நுழைய அவர்களை அனுமதித்தது. இதனால் பெண்கள் சிலர் இந்த கோவிலுக்குள் செல்ல இன்று முயற்சித்தார்கள். அப்போதே தொற்றிக்கொண்டது பதற்றம் அந்த இடத்தில்.. ஆம் சபரிமலையில் நுழைவு வாயிலாக கருதப்படும் நிலக்கல்லில்...
எங்குள்ளது அந்த நிலக்கல்
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் சாதாரணமான இடமாகவே நேற்று வரை இருந்தது இந்த நிலக்கல் பகுதி. காவல்துறை பாதுகாப்புடன் பெண்கள் இந்த கோவிலுக்குள் செல்லலாம் என அம்மாநில முதல்வரே கூறியிருந்தாலும், மக்கள் வெள்ளத்தில் காவல்துறையினர் கதிகலங்கிவிட்டனர் என்றே சொல்லலாம். இதுதான் இந்த இடத்தைப் பற்றி நாம் பேசுவதற்கு காரணம். வாருங்கள் நிலக்கல் பற்றி தெரிந்துகொள்வோம்.
இரண்டு வழிப்பாதைகள்
சபரி மலைக்கு செல்பவர்கள் தமிழகத்திலிருந்து இரண்டு மூன்று வழிகளில் செல்வார்கள். பின் பத்தனம்திட்டா மாவட்டத்தை அடைந்து அங்கிருந்து சபரிமலைப் பாதைக்கு செல்வார்கள். அந்த பாதை இரண்டு வழித்தடமாகும்.
ஒன்று சிறுவழிப்பாதை என்றும் மற்றொன்று பெருவழிப்பாதை என்றும் அழைக்கப்படுகிறது.
1 சிறு வழிப் பாதை
2 பெரு வழிப் பாதை
சபரி மலைக்கு செல்லும் வழியில் இந்த கோவில்களுக்கு செல்வது கட்டாயமா?
எருமேலி
முதல் பாதை அதாவது பெருவழிப் பாதை எருமேலி வழிச் செல்லும் பாதை ஆகும். இது எருமேலி வழியாகச் சென்று கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் பயணித்து, பம்பை நதியை கடந்து சபரிமலை சந்நிதானத்துக்கு செல்வது ஆகும்.
இது டிசம்பர் மாதத்தில் அதிகம் வரும் பக்தர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில பக்தர்கள் இந்த வழியை மற்ற மாதங்களிலும் பயன்படுத்துகின்றனர்.
சிறு வழிப் பாதை
சிறு வழிப் பாதை என்பது பம்பைக்கு நேரடியாக பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் செல்வது ஆகும். அங்கிருந்து 6 கிமீ தூரம் வரை சாலைகளிலும், பின் 4 கிமீ தூரம் மலைப்பாதைகளிலும் பயணத்து சபரிமலையை அடையலாம்.
போர்க்களமான நிலக்கல்
நிலக்கல் எனும் பகுதிதான் கேரள அரசால் அதிகாரப்பூர்வமாக பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அமைத்து கொடுத்த இடமாகும். இங்கு சபரி மலை செல்லும் பக்தர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு விருப்பம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கும் சென்று வருவார்கள்.
சிவன் கோவில்
நிலக்கல் பகுதியில் சிறிய அளவிலான சிவன் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த சிவன் என்பது தொன்னம்பிக்கை. இங்கு வருபவர்கள் சிலர் அய்யப்பனையே நினைத்துக்கொண்டு வருவதால் சிவன் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்றும் கூறுகின்றனர். ஆனால் பலர் இந்த கோவிலுக்கும் செல்கின்றனர். இந்த இடம் வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்படும் முன்பு பம்பையில் தான் வாகனங்களை நிறுத்திச் செல்வது வழக்கம். இது பம்பையில் இருந்து 18 முதல் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
நிலக்கல்லில் மொழி வாரி மாநிலங்கள்
நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் கர்நாடக, ஆந்திர, தமிழ்நாடு மற்றும் கேரளம் என தனித்தனி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு தனியாக இடம் தரப்பட்டுள்ளது. அந்தந்த இடத்தில்தான் அவர்கள் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நுழைவு வாயிலில் போராட்டம்
சபரி மலைக்கு வருபவர்கள் வாகனம் நிறுத்த இங்கு கட்டணம் எதுவும் பெறப்படுவதில்லை. இந்த இடம்தான் சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலானோர் நுழையும் இடமாக உள்ளது. இதனாலேயே மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த இடத்தை குறிவைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார்கள். இது கோயிலின் புனிதம் என்பதாகவே வெளியில் பரப்பப்பட்டாலும், இங்குள்ள ஆதிக்க சக்திகள் தீண்டாமையை மாற்று உருவில் கையாண்டு வருகின்றன. அதன் வெளிப்பாடே இத்தகைய போராட்டங்கள் என பலர் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் கோயிலுக்குள் பெண்கள் செல்ல பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதே உண்மை.
சுற்றுலாத் தளங்கள்
நிலக்கல் மகாதேவா கோவில், புனித தாமஸ் கிறித்தவ கூட்டமைப்பு, சபரிகிரி நீர்மின் நிலையம் ஆகியன உள்ளன. ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே அதன் இடது புறத்தில் மாளிகைபுரம் தேவி கோயில் எனும் அம்மன் கோயிலும் அமைந்துள்ளது. ஐயப்பன் கோயில் மீதிருந்து காணக்கிடைக்கும் பிரம்மாண்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் எழிற்தோற்ற தரிசனம் மனதை நிர்மலமாக்கும் சக்தி கொண்டது என்பதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும். வார்த்தைகளுக்குள்ளும் நம்பிக்கைகளுக்குள்ளும் அடங்காத ஒரு அமானுஷ்ய சூழல் இது.
All photos taken From
PC: WikiCommons