காடுகளும், மலைகளும், பசுமைத் தோட்டங்களும் நிறைந்த தென்னகத்தின் மகாராணியாய் காட்சியளிப்பதுதான் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியும், அதை ஒட்டியுள்ள கேரளமும். அன்றாடம், அரக்கபரக்க அலுவலகம் சென்று அலைக்கழிந்து வருவோர் வருடத்திற்கு ஒருமுறையாவது பசுமைச் சூழல் நிறைந்த மலைப் பிரதேசங்களுக்கும், இயற்கைச் சூழல் நிறைந்த காடுகள் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று சற்று ஓய்வெடுத்து வருவது கட்டாயம். இவை, அதிக வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவ்வாறு சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு ஏற்ற தலங்களில் ஒன்று தேக்கடி. தமிழகத்தின் எல்லையில் கேரளாவிற்கு உட்பட்ட இடுக்கியில் உள்ளது தேக்கடி என்னும் அழகிய வனப்பகுதி. தேக்கடியில் ஒரு நாள் சுற்றுலா சென்றால் என்னவெல்லாம் செய்யலாம் ?
படகு சவாரி
தேக்கடி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது படகுசவாரிதான். அந்தளவிற்கு இடுக்கியில் பிரசித்தி பெற்றது இந்த சுற்றுலாத் தலம். இங்கு சுற்றுலா வருபவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை ஆழமாக கண்டு ரசிக்கலாம். யானை, புலி, மான் என தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை அவற்றின் இடத்திலேயே பாதுகாப்பாகவும், எவ்வித இடையூறும் இன்று ரசிப்பது தனிச்சிறப்பு.
Raku2040
யானை சவாரி
குழந்தைகள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் விரும்பும் விசயம் யானை சவாரி. கம்பீரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து சரணாலயத்தின் இயற்கை அழகை கண்டு ரசிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
smerikal
பெரியார் வனவிலங்கு சரணாலயம்
தேக்கடியில் உள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் பிரசித்தி பெற்றது. 673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், மான்கள், குரங்குகள், காட்டு எருமைகள் என இந்த சரணாலயத்தில் ஏராளமான விலங்குகள் கூட்டமாக காணப்படுகின்றன. இங்கு ஓடும் பெரியாற்றில் வனவிலாங்குகள் தண்ணீர் அருந்துவதை எளிதாக கண்டு ரசிக்கலாம்.
Anand2202
உணவு
தேக்கடி மலைப் பிரதேசம் கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் உணவு விசயத்தில் சற்று மாறுபாட்டை உணர முடியும். நம்மூர் மற்றும் கேரளா மாநில சுவையோடு இங்கே உணவுகள் பரிமாறப்படுகிறது. காலை நேரத்தில் இட்லி, தோசை, புட்டு கடலை கறி, மதிய வேலையில் பல வகை காய்கறிகளுடன், பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படம் என மூக்குப்பிடிக்க ரசித்து ருசிக்கலாம். மீன் கறி கூட இங்கே தனி ஸ்பெஷல் தான்.
Mr.Lowping
குமுளி
தேக்கடி பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் மலைக் கிராமமான குமுளி பிரசித்தி பெற்ற சந்தைத் தலமாக திகழ்கிறது. தேக்கடி வனப்பகுதியில் கிடைக்கும் வாசனைப்பொருட்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.
fraboof
கவி
கேரளாவில் சமீபகாலமாக பிரபலமாகி வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று பந்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் கவி என்னும் பகுதியாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடம் தேக்கடியில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும், வண்டிப்பெரியாரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
Abhijith VG
எப்படிச் செல்வது ?
கோயம்புத்தூரில் இருந்து 284 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவிலும் தேக்கடி அமைந்துள்ளது. மதுரை, திருவனந்தபுரம், கம்பம், தேனி போன்ற நகரங்களில் இருந்து குமுளி செல்லும் பேருந்துகள் மூலம் தேக்கடியை அடைய முடியும்.
Ben3john