தமிழகத்தில் எப்படி சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழா கொண்டாடபடுகிறது அது போலவே நாடு முழுக்க இருக்கு மக்களால் ஜனவரி 14 அல்லது 15 தேதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் உள்ள மாநிலங்களில் அவரவர் காலாச்சார முறைகளை பொருத்து இப்பண்டிகை கொண்டாடப்படும் விதம் மாறுபடுகிறது. குறிப்பாக மகர சங்கராந்தியின் போது கர்நாடக மாநிலம் முழுக்க வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது. வாருங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மகர சங்கராந்தி பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
பெங்களுரு:
Photo: Pavithrah
பெங்களுரு நகரில் மகர சங்கராந்தி விழா நாளின் போது கவி கங்காதறேஸ்வரர் கோயிலில் உள்ள சிவ பெருமானை வழிபட குவிகின்றனர். அப்படி மகர சங்கராந்தி அன்று மக்கள் இங்கு வந்து குவிய அதிசய காரணம் ஒன்றும் உள்ளது. வருடத்தில் மகர சங்கராந்தி விழா நாளில் காலையில் சரியாக ஒரு மணிநேரம் மட்டும் சூரிய கதிர்கள் நேரடியாக கங்காதறேஸ்வரர் லிங்கத்தின் மீது படும் படி இக்கோயில் அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். இந்த அதிசய காட்சியை காணவும் கங்காதறேஸ்வரர் பகவானை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
உடுப்பி:
Photo: Magiceye
ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளாலும் மறுபக்கம் அரபிக்கடலாலும் சூழப்பட்டு கர்நாடக மாநிலத்தின் வளம்மிக்க மாவட்டமாக திகழ்கிறது உடுப்பி மாவட்டம். இங்குள்ள உடுப்பி கிருஷ்ண மடம் கோயிலில் ,மகர சங்கராந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் சங்கராந்தி விழாவின் போது மூலவரான கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் சங்கராந்தி நாளில் இக்கோயிலில் மூன்று தேர்களின் ஊர்வலமும் நடக்கிறது.
ஸ்ரீரங்கபட்டனா :
Photo: Gopal Venkatesan
கங்கை வம்ச மன்னர்களால் கட்டப்பட்ட ரங்கநாதசுவாமி கோயிலின் காரணமாகவே ஸ்ரீ ரங்கபட்டனா என்ற பெயர் பெற்று புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும் திகழ்கிறது. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் மகர சங்கராந்தி மிக முக்கிய விழாவாகும். இவ்விழா நாளில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு தீபங்களின் பொன் ஒளியில் தகத்தகாய சூரியன் போல மின்னுகிறது இக்கோயில். ரங்கநாத சுவாமியின் தரிசனத்தை பெறவும் தீபங்களின் பேரொளியை காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மகா சங்கராந்தி விழாவின் போது கட்டாயம் செல்ல வேண்டிய இடங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
பெல்காம்:
Photo: Manjunath Doddamani Gajendragad
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மிகப்பழமையான மற்றும் காலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். யாதவர்கள், நாயக்கர்கள், சுல்தான்கள், மராத்தியர்கள் என வெவ்வேறு அரச பரம்பரைகள் இந்நகரத்தை ஆட்சி செய்ததும் இதன் காலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒரு காரணமாகும். கர்நாடக மாநிலத்தின் சக்கரைக்கிண்ணம் என்று அழைக்கப்படும் அளவுக்கு கரும்பு உற்பத்தி இம்மாவட்டத்தில் நடக்கிறது. இதனாலேயே உழவுக்கு நன்றி சொல்லும் மகர சங்கராந்தி மக்கள் வீடுகளில் இனிப்புகள் செய்து உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாட்டவரும் இங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.
கிராமப்புற கர்னாடக:
Photo: istolethetv
கிராமப்புற கர்நாடகத்தில் குக்கிராமங்களிலும் விசேஷமாக கொண்டாடப்படும் இவ்விழா நாளின் போது கோயில்களில் மக்கள் நோன்பிருந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இப்படி செய்வதினால் தங்களின் பாவங்கள் எல்லாம் நிவர்த்தியாகிவிடும் என நம்புகின்றனர். இப்பகுதிகளில் சங்கராந்தி விழாவன்று 'யக்ஷகானா' என்ற புராண கதைகள் சொல்லும் நாட்டுப்புற தெருக்கூத்து நாடகங்கள் விடிய விடிய நடைபெறுகின்றன.