உலகம் முழுவதும் அறியப்பட்ட சோழர்களின் தலைநகராம் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஆன்மீக சுற்றுலாவிலும் வரலாற்று சுற்றுலாவிலும் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போலவே தஞ்சாவூரும் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் மிகவும் ஈர்க்கும் இடமாக விளங்குகிறது. வாருங்கள் அப்படி என்னென்ன சுற்றுலாத் தளங்களெல்லாம் தஞ்சாவூரில் இருக்கின்றன என்பதைக் காணலாம்.
தஞ்சாவூரில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை
தஞ்சாவூர் அரண்மனை, கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகம், ராஜ ராஜ சோழன் மணி மண்டபம், ஸ்வார்ட்ஸ் தேவாலயம், தஞ்சை பெரிய கோவில், மனோரா கோபுரம், தராசுரம், மகாமக குளம், சரபேஸ்வர் ஆலயம், சிவகங்கை பூங்கா, பூண்டி மாதா கோவில், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் நினைவு மண்டபம், வியாகரபூரீஸ்வரர் கோவில், தமிழ் பல்கலைக் கழகம், சுவாமி மலை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருவையாறு, திருபுவனம் கோவில், கும்பகோணம் கோவில்கள், சூரியனார் கோவில், உப்பிலியப்பன் கோவில், சாரங்கபாணி கோவில், சோமேசர் கோவில், நாகேஸ்வரர் கோவில், ராமசாமி கோவில் என இன்னும் பல ஆன்மீக மற்றும் வரலாற்று சுற்றுலாத் தளங்கள் தஞ்சாவூரில் காணப்படுகின்றன. இந்த இடங்களுக்கு எப்படி செல்வது, அருகாமையில் இருக்கும் இடங்கள் என்ன என்று விரிவாக காண்போம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 1000க்கும் அதிகமான கோவில்களை சோழர்கள் கட்டியுள்ளனர். இவை இன்று பாதி அழிந்துவிட்டாலும் சில ஆச்சர்யமான செய்திகளை நமக்கு தருகின்றன. அவை குறித்த சுவாரசியமான தகவல்களையும் காண்போம்.
தஞ்சை பெரிய கோவில்
ராஜராஜூச்சுரம் எனும் பெயரில் கட்டப்பட்ட இந்த கோவில் நாளடைவில் பிரகதீசுவரர் கோவில் என்றாகிவிட்டது. ஆனால் இந்த கோவிலுக்கு வரும் தமிழக பயணிகள் நிச்சயமா இதை தஞ்சை பெரிய கோவில் என்றே அழைக்கின்றனர்.
வேறு எந்த தென்னிந்திய கோவில்களும் இது போன்று அமைக்கப்படவில்லை. ராஜ கோபுரத்தை விட விமான கோபுரம் உயர்ந்தது. அதிலும் இந்தியாவிலேயே பழமை வாய்ந்த உயரமான கட்டிடங்களுக்கு நிகரானது.
ஒரே விதமான ஒத்திசைவான அலங்கார நுட்பங்கள் ஒரு ஆபரண அட்டிகையைப்போன்று கோபுரத்தின் உச்சிவரை நுணுக்கமாக வடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஆன்மீகத்தையும் கலையையும் கரைத்து குடித்தவர்கள் கட்டிய கோவிலாக அச்சு அசலாக அமைந்துள்ளது என வியக்கின்றனர் இங்கு வருகை தருவோர்.
190 அடி விமான கோபுரமும், 14 மீ உயரமும் 25 டன் எடையும் கொண்டுள்ள ஒரே கல்லால் ஆன நந்தியும், பிரம்மிக்க வைக்கும் சுற்றுப்புறமும் நிச்சயம் நாம் வாழ் நாளில் இந்த தஞ்சை கோவிலை ஒரு முறையாவது கண்டுவிட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
விஜயநகர கோட்டை
தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் வடக்கே இந்த விஜயநகர கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன.
சரஸ்வதி மஹால் நூலகம்
ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.
தஞ்சை கலைக்கூடம்
தஞ்சாவூர் ஆர்ட் கேலரி அல்லது ஓவியக் கூடமானது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைக்கு உரியது ஆகும்.
ராஜ ராஜ சோழன் கலைக்கூடம் என அழைக்கப்படும் இந்த இடம் அரிய சோழர்கால செப்புச் சிலைகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்திர மந்திர், பூஜா மஹால் மற்றும் ராம சௌடம் எனப்படும் கூடம் போன்ற மூன்று தொகுதிகளாக இந்த கலைக்கூடம் பிரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்தையும் தவறாது காணவேண்டும்.
சங்கீத மஹால்
சங்கீத மஹால் என்றழைக்கப்படும் இந்த இசைக்கூடம் தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும். இது தஞ்சை அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.
தென்னிந்தியாவில் ஒலியியல் நுட்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இசைக்கூடமாக இது கருதப்படுகிறது. மன்னர்கள் இக்கூடத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மகிழ்ந்துள்ளனர்.
முக்கியமான கோவில்கள்
ராமசாமி கோவில்
நாயக்க மன்னர் ஒருவர் கட்டிய இந்த கோவில் 16ம் நூற்றாண்டு பழமை கொண்டதாக நம்பப்படுகிறது.
கோபுரமும், மண்டபமும் இந்த கோவிலின் சிறப்புகளாகும்.
தங்கத் தாமரைக் குளத்துக்கு தெற்கே, உச்சிப் பிள்ளையார் கோவில் சந்திப்பில் இது அமைந்துள்ளது.
மண்டபத்தின் தூண்களில் ராமாயண சிறப்புகள் காட்சிகளாக செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 219 சுவர் ஓவியங்கள் இருக்கின்றன.
நாகேஸ்வரர் கோவில்
13ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
சித்திரை மாதம் மட்டும் சூரிய ஒளி இந்த கோவிலுக்குள் விழும்
சூரியக் கோட்டம் மற்றும் கீழ்க் கோட்டம் என்றும் இந்த கோவிலுக்கு பெயர் உண்டு.
சோமேஸர் கோவில்
சாரங்கபாணி கோவிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. சோழர்கால கட்டிடக் கலை என்பதால் புகழ் பெறுகிறது.
சாரங்கபாணிநாதர் ஆலயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாரங்கபாணிநாதர் ஆலயம் ஒரு பெருமாள் கோவிலாகும். கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது
சூரியனார் கோவில்
சூரியனார் கோவில் கிராமம் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவசூரியநாராயண கோவில் காரணமாக இந்த கிராமம் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது. சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை இந்தக் கோயில் பெற்றுள்ளது.
சூரியனார் கோவில் குறித்த மேலும் தகவல்களுக்கு சொடுக்குங்கள்
மற்ற நவக் கிரக தலங்கள்
ஏனைய எட்டு நவக்கிரக தலங்களும் சூரியனார் கோவிலுக்கு அண்மையிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை திருநள்ளாறு (சனி ), கஞ்சனூர் (சுக்கிரன் ), ஆலங்குடி (குரு ), திருவெண்காடு (புதன் ), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருநாகேஸ்வரம் (ராகு), கீழ்பெரும்பள்ளம் (கேது) , மற்றும் திங்களூர் (சந்திரன் ).
திருநள்ளாறு பற்றி தெரிந்து கொள்ள சொடுக்கவும்
வைத்தீஸ்வரன் கோவில் பற்றி தெரிந்து கொள்ள சொடுக்கவும்
திருவெண்காடு பற்றி தெரிந்து கொள்ள சொடுக்கவும்
கும்பகோணத்தின் மற்ற கோவில்கள் பற்றி தெரிந்துகொள்ள
மனோரா கோபுரம்
மாவீரன் நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சுப் படைக்கும், ஆங்கிலேயருக்கும் ஒரு கடல் போர் நடந்தது. இந்த போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சரபோஜி மன்னரின் படைகளும் போரிட்டன. அப்போது நெப்போலியன் படை தோற்கடிக்கப்பட்டது. அந்த வெற்றியின் நினைவாக சரபேந்திர ராஜ பட்டினம் கடற்கரையில் 120 அடி உயரமுள்ள கோபுரம் அமைக்கப்பட்டது. அறுங்கோண வடிவமுள்ள இந்த கோபுரத்தின் உச்சியை அடைய 120 படிகள் உள்ளன. 150 ஆண்டு பழமை வாய்ந்தது இது.
பட்டுக்கோட்டையில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.