மக்களுடன் ஒன்றான எளிமையான கடவுளாக இருப்பவர் விநாயகர். குளக் கரை, அரசமரத்து அடியில், தெரு முக்கில், கோவில், வீட்டு வாசலில் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் முதற்கடவுள் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளார். இத்தகைய விநாயகரை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாள் சதுர்த்தியாகும். விநாயக சதுர்த்தி ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாகவே இது கொண்டாடப்படுகிறது. இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினத்தில் உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க.
விநாயகர் வழிபாடு
வழிபாட்டு முறையில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தி அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகினறது. அன்றைய தினம் உலகம் முழுவதுமுள்ள விநாயக பக்தர்கள் விநாயகரை வழிபட்டு, நோன்பிருந்து கொண்டாடுகின்றனர்.
செல்வம் அருளும் விநாயகர்
தமிகத்தில் இந்து மத வழிபாட்டின் படி விநாயகரைத் தவிர்த்து எந்த கடவுளின் வழிபாடும் துவங்காது. விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி வழிபடுவோரின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கொழுக்கட்டை விரும்பி
விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக இருப்பது கொழுக்கட்டை தான். சதுர்த்தி தினத்தில் அதிகப்படியான கொளுக்கட்டைகளை படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விநாயகர் கொழுக்கட்டையை விரும்ப ஓர் காரணமும் உண்டு. மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது. மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
பிரம்மாண்ட விநாயகர்
தமிழகம் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்றாலும் முதலில் நம் கண்ணில் தென்படுவது விநாயகராகத் தான் இருக்கும். ஆனால், இவற்றுள் உலகிலேயே பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள எங்கே எனத் தெரியுமா ?. அது நம் கோயம்புத்தூரில் தான். ஆசியா மட்டுமின்றி உலகிலேயே பெயரி விநாயகர் சில கோவை மாவட்டம், புலியகுழத்தில் தான் அமைந்துள்ளது.
முந்தி விநாயகர்
விநாயகர் கோவில் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயத்திற்காக கோவை புலியகுளம் அறியப்படுகிறது. இந்த முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய சிலையாகும். இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998 ஆம் ஆண்டில் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முதன்மையானவர்
வாழ்நாளில் என்ன இன்னல் வந்தாலும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பவரே விநாயகர். எனவே, இத்தல விநாயகருக்கு ஸ்ரீ முந்தி விநாயகர் எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இதனாலேயே இத்தலத்தின் சுற்றுவட்டாரத்தில் வசிப்போர் தொழில் துவங்கும் முன், புது வாகனம், நிலம், வீடு என எது வாங்கினாலும் முதலில் இத்தலம் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தோஷ நிவர்த்தி தலம்
வாசுகி என்னும் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதைப் போல அருளுகிறார் இத்தல விநாயகர். நாக தோஷம் உள்ளவர்கள், இத்தலம் வந்து விநாயகப் பெருமானை வழிபட்டுச் செல்ல தோஷம் நீங்கி, வளமான வாழ்நாட்கள் உண்டாகும் என்பது தல நம்பின்கை.
விநாயகர் காட்சி
இத்தல விநாயகரின் நெற்றி மட்டுமே சுமார் இரண்டரை அடி அகலம் உடையது. துதிக்கை வலம் சுழித்து காட்சியளிக்கிறார். நான்கு திருக்கரங்களில் வலது கரத்தில் தந்தமும், பின் கரத்தில் அங்குசமும், இடது முன் கரத்தில பலாப் பழமும், பின் கரத்தில் பாசக் கயிறையும் கொண்டுள்ளார்.
எப்படிச் செல்வது ?
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புலியகுளம் விநாயகர் ஆலயம். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இத்தல நிறுத்தம் வழியாகவே செல்லும். காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து விநாயகர் ஆலயத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.