சஜன் அல்லது சாஜன் என்று அழைக்கப்படும் இந்த சிறு நகரம், மும்பையிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சஜன் நகரம் முழுமையும் சப்போட்டா மரங்களும், மாமரங்களும் நிறைந்த பசுமையான காடுகளின் உறைவிடமாய் திகழ்ந்து வருகிறது. சஜன் நகரம் பிரபல வானியல் மற்றும் நிலவியல் வல்லுநர் தாலெமி எழுதிய தொன்மையான தர்ம சாஸ்திரத்தில் 'செர்ஸோநீசஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள நினைவுச் சின்னங்களில் ஒன்றான கொஹோஜ் கோட்டை, இந்த நகரம் ஒரு காலத்தில் போஜ் பேரரசின் கீழ் இருந்ததற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
இந்நகருக்கு 1530-ஆம் ஆண்டு போர்த்துகீசியர் படையெடுத்து வந்த போது, சஜன் நகரம் தன மயம்பு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த பகுதியை இஸ்லாமிய அரசு, 1300 முதல் 1660 வரை, 360 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தது. அதன் பிறகு சஜன் நகரம் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை, 1660 முதல் 1800 வரை மராட்டியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. சஜன் நகரிலும் அதை சுற்றிலும் பயணிகள் ரசிக்கத்தக்க வகையில் ஏராளமான இடங்கள் இருக்கின்றன. சஜனின் கிராமப் பகுதிகளில், 60 அடி உயரத்திலிருந்து என்றுமே நீர்வளம் குன்றாமல் கொட்டிக்கொண்டிருக்கும் பலுசா நீர்வீழ்ச்சியும், அமைதியின் பிறப்பிடமாய் விளங்கும் மோஹோ குர்த் அணையும் இயற்கை காதலர்களை வெகுவாக கவரும். அதேபோல் புலி குகைகளும், கொஹோஜ் கோட்டையும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். அதோடு இங்குள்ள பேஷ்வா கோயிலிலும் , மகாலட்சுமி கோயிலிலும் விஷேச நாட்களில் கூட்டம் அலை மோதும்.
பலுசா நீர்வீழ்ச்சி சஜன் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சஜனுடைய கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த அருவியின் நீர்வளம் வருடத்தின் எந்த காலத்திலும் குறையாத தனிச்சிறப்பு வாய்ந்தது.
எந்த தடையுமில்லாமல் கற்பாறைகளின் பிளவுகளிலெல்லாம் பீறிக்கொண்டு வந்து 50 அடி உயரத்திலிருந்து கொட்டும் பலுசா நீர்வீழ்ச்சியின் அழகை நாள் பூராவும் ரசித்துக் கொண்டிருக்கலாம்.
இத்தகைய பெருமைகளை கொண்ட பலுசா நீர்வீழ்ச்சி, நாலாபுறமும் வளமையான காடுகளால் போர்த்தப்பட்டு இருக்கும் பேரழகினை காண எப்போதும் இங்கு பயணிகள் கூட்டம் பொங்கி வழியும்