சிங்கம்பட்டி - திருநெல்வேலி மாவட்டத்தின் அழகிய நகரமான அம்பாசமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ள மிக சிறப்பு மிக்க சமஸ்தானம். எப்படி, சேர, சோழ பாண்டியர்களுக்கு பெருமையோ அதன்படி, பாண்டியர்களின் வம்சத்தின் கீழ் வரும் ஒரு குறுநில மன்னர்களான சிங்கம்பட்டி ஜமீன்தாரர்களுக்கும் பெருமை உண்டு. மறத்தமிழர்களுக்கு இருக்கும் பெருமையும் வீரமும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சோழர்களைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும் நம் மக்கள் பாண்டியர்கள் குறித்து சிந்திப்பது கூட கிடையாது. தற்போது சீமராஜா படத்தில் ஒரு சில விசயங்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தாலும், சிங்கம்பட்டியின் உண்மையான முகம் யாருக்கும் தெரியாது.. வாருங்கள் அந்த முகத்தை வெளிச்சத்தில் பார்க்கலாம்.
எங்குள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, வளமான ஒரு பூமி அம்பாசமுத்திரம். இது காண்பதற்கு அழகாகவும், அமைதியாகவும் இருக்கும் தளமாகும். இங்கு இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் அமைந்துள்ளதுதான் சிங்கம்பட்டி எனும் பகுதி.
எப்படி செல்வது
அம்பாசமுத்திரத்திலிருந்து 25 நிமிட பயணத்தில் இந்த இடத்தை அடையலாம். மொத்த தொலைவு 11.2 கிமீ ஆகும். இங்கு செல்வதற்கு இன்னொரு சுலபமான வழியும் இருக்கிறது.
அது 22 நிமிடத்தில் நம்மை சிங்கம்பட்டிக்கு அழைத்துச் செல்லும். மொத்த தொலைவு 8 கிமீ தூரம் ஆகும்.
சிங்கம்பட்டியின் வரலாறு
கிபி 1100ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிறிய அரசுதான் என்றாலும், இந்த வம்சத்தில் பிறந்தவர்கள் எல்லாருமே தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் போற்றி பரந்த பெருமை கொண்ட ஜமீன் இதுவாகும்.
கலைகள் வளர்த்த சிங்கம்பட்டி
சிங்கம்பட்டி ஜமீன் காரர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில், திரு உத்திரகோசமங்கையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கலைகள் வளர்த்ததுபோல. தென்னாடு எங்கும் கலைகள் வளர்க்கப்பாடுபட்டார்கள். அதன்படி சண்டைக் கலையிலும் சிறந்து விளங்கினார்கள்.
போர் - படையெடுப்பு - வீரம்
மதுரை மாநகரில் பாண்டியரது ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, திடீரென தோன்றிய பூசலால், மகனுக்கு சிற்றப்பனுக்கும் பயங்கர மோதல். சிற்றப்பன் ஈழ தேசத்துடன் ஒப்பந்தம் போட, மகன் குலசேகரப் பாண்டியன் சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்ததாக வரலாறு.
பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும்
இலங்கைப் படைகள் உதவியுடன், பராக்கிரம பாண்டியன், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தான். இதை முறியடிக்க குலசேகரப் பாண்டியன் தலைமையிலான சோழர் படை போரிட்டு எதிரிகளை அனுராத புரம் வரை புறமுதுகு காட்டி ஓட விட்டனர்.
ராமநாதபுரம் சேதுபதிகள் வீழ்ச்சி
அதுவரை ராமநாதபுரம் உள்ளிட்ட சில சிற்றரசுகள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டன. இவை பாண்டியர்களின் கீழ் அரசாண்டு கொண்டிருந்தன. இந்த போருக்குப் பிறகு அவையும் சோழ வசம் வந்தன.
சிங்கம்பட்டி ஜமீனின் முதல் மன்னர்
சிங்கம்பட்டி ஜமீன் பல ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்திருந்தாலும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வேறு ஒரு குடும்பத்திலிருந்து வந்து போரிட்டு, வென்று சிங்கம்பட்டியின் முதல் ஜமீனாக தன்னை அறிவித்துக்கொண்டவர் பிரீதிபாலு என்பவர். இவர் பாண்டியர்களுடன் நெருக்கம் காட்டினார். பெண் கொடுத்து பெண் எடுக்கும் வரை அந்த நெருக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
கலிதப்பாண்டியனின் கட்டளையும், பிரீதிபாலுவின் வெற்றியும்
உக்கிரன் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு தென் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த கலிதப் பாண்டியன் பிரீதிபாலுவுக்கு கொடுத்த கட்டளையின் அடிப்படையில், கன்னட ராஜ்ய அரசனைத் தோற்கடித்து பரிசுகளைப் பெற்றதாக வரலாறு.
நலிவடைந்த விஜயநகர சாம்ராஜ்யம்
விஜயநகர சாம்ராஜ்யம் நலிவடைந்தது, அங்கிருந்து வந்த நாயக்கர்களில் சிலர், திருநெல்வேலியையும், மதுரையையும் பாளையங்களாக பிரித்து 72 ஆட்சிப்பகுதிகளாக ஆண்டனர். இப்படி பிறந்த 72 பாளையங்களுள் ஒன்றுதான் சிங்கம்பட்டி.
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி பாளையக்காரர்
மொத்தமுள்ள 72 பாளையங்களுக்கும் சேர்த்து பிரம்மாண்டமான கோட்டையும், 72 கொத்தளங்களையும் உருவாக்கி, அதில் 21 கொத்தளங்களை சிங்கம்பட்டி ஜமீனுக்கு தரப்பட்டன.
ஜமீன் ஒழிப்புச் சட்டம்
1952ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வந்தது. இந்த சட்டம் வருவதற்கு முன்பு வரை 74 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் இருந்தது. இவர்களின் ஆளுமைக்கு உட்பட்ட பல இடங்கள் தற்போது சுற்றுலாத் தளங்களாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது
காரையாறு சொரிமுத்து அய்யனார்கோவில்
இந்த கோவில் குறித்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இங்கு பூசை செய்தால் நூறு சதவிகிதம் அடுத்த சில நாட்களில் மழை வரும் என்று கூறுகிறார்கள்.
இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் லோயர் கேம்ப்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடப்புறத்தில் அமைந்துள்ளது.
சிங்கம்பட்டி அரண்மனை
சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை. இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது. இந்த அரண்மனையில் சமீன்தார் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். இந்த அரண்மனையில் மன்னராட்சி கால தர்பார் மண்டபம் உள்ளது. இது மன்னரின் வாரிசை பார்க்கவரும் பார்வையாளர்களுக்கான காத்திருப்பு மண்டபமாக இப்போது உள்ளது. சிங்கம்பட்டி ராஜாக்களின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் படங்கள் தர்பார் மண்டபச் சுவர் முழுக்க அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தை, சிங்கம்பட்டி மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்வுகளுக்கு பயன்படுத்திவருகின்றனர். ஜமீன் வாரீசுகளால், அதன் பாரம்பரியமான சில பொருள்களை இப்போதும் பாதுகாத்து வருகிறனர். அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது.
காப்பகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது
சுவாமி விவேகானந்தர், ராமநாதபுர சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு பரிசளித்த யானை சிற்பம் ஒன்று இங்கு உள்ளது
ஜமீன் ஆசையாக வளர்த்த குதிரை ஒன்றின் குளம்புடன் வெள்ளிப் பூண் போட்டு மாற்றப்பட்ட சாம்பல் கிண்ணம் ஒன்றும் உள்ளது.
இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு பெரிய மரக்கால் ஒன்று உள்ளது. இது நெல்லை அளக்கப்பயன்படுத்தப்படும்.
மூன்று கிலோ எடை கொண்ட பூட்டு
யானை ஒன்றின் எலும்புக் கூடு