மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா என்றாலே அழகர் மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இயற்கை காட்சிகளுடன் கூடிய ஆன்மீகத் தலங்களும், முழு இயற்கையையும் கண்டு ரசித்திட வேண்டும் என்றால் தேனி, கொடைக்கான உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிப்பதும் வழக்கம். ஆனால், இப்பகுதிகள் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்த பகுதியாகவே காட்சியளிக்கும். இவற்றையெல்லாம் தவிர்த்து, நகர மயமாக்களில் இருந்து விலகி, அதே சமயம் பட்ஜேட்டுக்கு ஏற்றவாறு சுற்றுலா செல்ல விரும்புவோருக்காகவே உள்ளது தாண்டிக்குடி மலைப் பிரதேசம். அப்படி அங்கே என்னதான் உள்ளது ? மதுரையில் இருந்து எப்படிச் செல்வது என பார்க்கலாம் வாங்க.
மதுரை - கொடை சாலை
மதுரையில் இருந்து வாடிப்பட்டி வழியாக 41 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடை சாலை. மாநில நெடுஞ்சாலை 155-யில் இருந்து கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. வலது புறம் சிறுமலையின் ரம்மியமானத் தோற்றமும், வீசும் காற்றும் பயணச் சோர்வை நீக்கி உற்சாகத்தை அதிகரிக்கும். இதனைத் தவிர்த்து ஆன்மீகத் திருத்தலங்களும், வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவியும் இங்கே பிரசிதி பெற்ற சுற்றுலா அம்சங்களாக உள்ளன.
குட்லாடம்பட்டி அருவி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்துள்ள குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலையின் அடிவாரத்தில் உள்ளது குட்லாடம்பட்டி அருவி. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். பசுமை நிறைந்த அடர் காட்டின் நடுவே கொட்டித் தீர்க்கும இந்த அருவியின் அழகை கண்டு ரசிக்க விடுமுறைக் காலங்களில் உள்ளூர் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
கொடை சாலை - சித்தரேவு
கொடை சாலை சந்திப்பில் இருந்து செம்பட்டி, சித்தயங்கோட்டை வழியாக 26 கிலோ மீட்டர் பயணித்தால் அடுத்து நாம் அடைவது சித்தரேவு கிராமம். விசாயம் செரித்த பூமியாக குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் அற்ற கிராமமாக இருந்தாலும், இதனருகே உள்ள செங்காட்டான்பட்டி பாதுகாப்பு வனப்பகுதி மற்றும் பட்டிவீரன்பட்டி வனப்பகுதி இயற்கை கொஞ்சும் தலங்களாக உள்ளன.
சித்தரேவு - தாண்டிக்குடி
சித்தரேவு வரை சமவெளியில் பயணித்த நாம் அடுத்து மலைச் சாலை வழியாக பயணிக்க வேண்டும். சித்தரேவில் இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் பழனி மலையிக் வடக்குச் சரிவில் பழனிக்கும், கொடைக்கானலுக்கும் நடுவே உள்ளது தாண்டிக்குடி மலைப் பிரதேசம். நான்கு புறங்களிலும் உள்ள மலைச் சரிவு, இப்பகுதியை அட்டகாசமான சூழ்நிலையுடன் வைத்திருக்கிறது.
தாண்டிக்குடி
இயற்கையின் தொட்டிலாக விளங்கும் தாண்டிக்குடி கொடைக்கானல் அருகே, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,300 அடி உயரத்தில் உள்ளது. கொடைக்கானலைவிட குறைவான குளிர் கொண்டிருந்தாலும், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களை விட இதமான சூழல் இங்கே நிலவுவதால் தாராளமாக இங்கே பயணிக்கலாம்.
சுற்றுலா அம்சங்கள்
தாண்டிக்குடி அருகே உள்ள மங்களம்கொம்பு, பன்றிமலை, பண்ணைக்காடு, தடியன்குடிசை உட்பட மலைப்பகுதிகள் சுற்றுலா அம்சங்களாக உள்ளன. வார இறுதி நாள் விடுமுறையில் பயணிப்போர் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற தலங்களாக இது உள்ளது. குறிப்பாக, இங்கே உள்ள பொண்ணு, மாப்பிள்ளை என்னும் கல் காதலர்களுக்கு பிடித்தமானதாக உள்ளது.
ஆதிவாசி குகை
தாண்டிக்குடியில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று ஆதிவாசிகளின் குகை. தாண்டிக்குடியில் இருந்து பாலமுருகன் கோவில் செல்லும் வழியில் உள்ள இங்கே ஆதிவாசிகள் வாழ்ந்த இடங்கள், மழை அல்லது விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பதுங்கிய குழிகள் என வியப்பூட்டும் காட்சிகள் இங்கே உள்ன. தாண்டிக்குடியில் இருந்து 3 கிலோ மிட்டரில் உள்ள எதிரொலிக்கும் மலையும் விருப்பமான ஒன்றாக இருக்கும்.
பாறை ஓவியங்கள்
தாண்டிக்குடி அருகே உள்ள அரசன் கொடை பகுதியில் ஆதிவாசி மனிதர்களால் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. நாகரிகம், பண்பாடு, வேட்டையாடுதல் உள்ளிட்டவை ஓவியங்களாக இங்கே குறிபிடப்பட்டுள்ளது சிறப்பு.
மருதாநதி அணை
தாண்டிக்குடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அய்யம்பாளையம் அடுத்துள்ளது மருதாநதி அணை. தாண்டிக்குடி காட்சி முனையில் இருந்து இந்த அணையின் முழுத் தோற்றத்தையும் கண்டு ரசிப்பது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். குறிப்பாக, கோடைக் காலங்களில் மான், யானை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் இங்கே நீர் அருந்த வருவதை காண முடியும். 1975ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வணையின் மூலம் பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம், சித்தரேவு, கோம்பைபட்டி ஊராட்சி உள்ளிட்ட கிராமங்கள் பயணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புல்லாவெளி அருவி
தடியன்குடிசை நறுமண சுற்றுலா தலத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ளது புல்லாவெளி அருவி. சுற்றுவட்டார மலைப்பகுதியில் உருவாகும் சிறிய ஓடைகள் இணைந்து பெரும் அருவியாக இங்கே கொட்டுகிறது. ஆரம்ப காலத்தில் ஆற்றுப்படுகையை கடந்து செல்ல அமைக்கப்பட்ட தொங்கு பாலமே இன்றளவில் பயண்பாட்டில் உள்ளது.
நறுமண சுற்றுலாத் தலம்
தாண்டிக்குடி மலைப் பிரதேசம் நறுமண பயிர்கள் விளையும் விவசாய நிலப்பகுதியாகவும் உள்ளது. மேலும், இங்கே ஏராளமான மூலிகைச் செடிகளும் காணப்படுகின்றன. கீழாநெல்லி, கிராம்பு, ஆடாதொடை, கற்றாழை, பெரியநங்கை என பலவித மூலிகைகளை இங்கே காண முடியும். இவற்றை பயணிகள் பார்வையிடவும், வாங்கி பயன்படுத்தவும் ஏதுவாக மூலிகைப் பண்ணையும் செயல்பட்டு வருகிறது.
தங்கும் வசதிகள்
தடியன்குடிசை நறுமண சுற்றுலா தலத்திற்கு அருகே கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளனன. எட்டு அறைகள் உள்ள இங்கே தங்குவதற்கு 850 ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் விடுதியில் இருந்தவாரே சுற்றுப்புற மலை அழகை ரசிக்க விரும்புவோர் கட்டாயம் இங்கே பயணிக்கலாம்.