நம் நாடானது நீண்ட நெடிய பல வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும், கோவில்களும் இந்தியாவில் ஏராளம் நிறைந்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களையும், நினைவுச் சின்னங்களையும் காண்பதற்காகவே உலகின் பல நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். அப்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளும், உள்நாட்டைச் சேர்ந்த பயணிகளும் அதிகளவில் பயணிக்கும் சில சுற்றுலாத் தலங்களைக் கண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பே வியந்து நிற்கிறது. அப்படி எந்தெந்த பகுதிகளை பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள், ஏன் என உங்களுக்குத் தெரியுமா ?
அஜந்தா குகைகள்
கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான அஜந்தா குடைவறைக் கோவில்கள் புராதன இந்தியாவில் ஏக காலத்தில் தழைத்தோங்கியிருந்த இந்துமரபு, புத்த மரபு மற்றும் ஜைன மரபு போன்றவற்றின் ஆதாரச் சான்றுகளாக காலத்தால் அழியாமல் நின்று ஆயிரம் மௌனக் கதைகள் கூறுகின்றன. உலகப்பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் இந்த அற்புத வரலாற்றுத் தலமானது இதைப்போன்றே ஔரங்காபாத் நகருக்கு அருகிலுள்ள எல்லோரா எனும் தலத்திலுள்ள குடைவறைக் கோவில்களுடனும் சேர்த்து அஜந்தா எல்லோரா என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த இரட்டை குடைவறைக்கோவில் தலங்களுக்கான வாயில் நகரமாக விளங்கும் ஔரங்காபாத் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகும்.
Freakyyash
செங்கோட்டை
ஷாஜஹானாபாத் என்று உருவாக்கப்பட்ட ஒரு முகலாய தலைநகரத்தின் மையக்கேந்திரமாக, குய்லா இ மொயல்லா என்ற பெயருடன் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. உஸ்தாத் அஹமத் எனும் கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இக்கோட்டை 1639ம் ஆண்டு கட்டத்துவங்கப்பட்டு 1648ம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 19ம் நூற்றாண்டு வரை இக்கோட்டையில் புதிய கட்டுமானங்களும் அவ்வப்போது சேர்க்கப்பட்டிருக்கின்றன. சிவப்புக்கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தை கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகின் முக்கியமான ராஜகோட்டைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 2.41 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டுள்ள இக்கோட்டை யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெருமைக்குரிய அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
A.Savin
குதுப்மினார்
குதுப்மினார் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இதன் சிறப்பம்சங்கள், வெளித்தோற்றம் ஆகியவற்றை காணும்போது இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் பள்ளி வாசல்தானே என்று அனைவரும் நம்பும் வண்ணம் அமைந்துள்ளது. மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இது அமைந்துள்ளது. இந்த நகரத்தின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு அத்தாட்சியாக வானுயர நிற்கும் குதுப்மினார் தான் உலகத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயரமான தூபி என்பதும் பெறுமைக்கு உரிய விசயமே.
Ronakshah1990
தாஜ்மஹால்
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் அவரது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறை மாளிகையாகும். 1632-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ்மஹால் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை ஆண்டுக்கு 80 லட்சம் பேர் ரசித்துப் பார்த்துச் செல்கின்றனர். எனவே, உலகின் பாரம்பர்யமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மஹால் புகழ்பெற்றுள்ளது.
Biswarup Ganguly
தஞ்சை பெரிய கோவில்
கட்டிடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோவிலை கட்டப்பட்டுள்ளது என்றால் அது சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் தான். ஆயிரம் வயது கடந்தும் இன்றும் தனது பொழிவை இழக்காது காட்சியளிக்கிறது தஞ்சை பெரிய கோவில். இக்கோவிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு வீற்றிருக்கிறது. இன்னும் பல பெருமைகள் வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலை 1985 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாராம்பரிய சின்னமாக அறிவித்தது. அதன் பின்னர் அக்கோவிலுக்கு உள்ளே அழகிய நடைப்பாதை வெளியே அகழி போன்றவை யுனெஸ்கோ நிறுவனமே அமைத்து பாரமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Jean-Pierre Dalbéra