கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாரம்பரிய பெருமை வாய்ந்த அடூர் நகரம் அதன் கலச்சாரம், கோயில்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரம் திருவனந்தபுரத்திலிருந்தும், எர்ணாகுளத்திலிருந்தும் முறையே 100 மற்றும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஏராளமாக அமைந்திருக்கும் கோயில்களும், அவற்றில் கொண்டாப்படும் விழாக்களும் அடூர் நகரத்தின் தனித்துவமான கலாச்சாரத்தினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் நகரம்
அடூர் நகரத்தில் உள்ள கோயில்களிலேயே கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் பார்த்தசாரதி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இதுதவிர பந்தளம் மஹாதேவா கோயில், பாட்டுப்புரக்கல் தேவி கோயில், புத்தென்காவில் பகவதி கோயில், ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயில் போன்ற ஆலயங்களும் அடூர் நகரத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய புண்ணிய ஸ்தலங்கள்.
அதுமட்டுமல்லாமல் சென்னம்பள்ளியில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் மற்றும் எலம்மன்னூரில் உள்ள மகாவிஷ்ணு கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
அடூர் நகரத்தின் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயங்களாக செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் மற்றும் செயின்ட் மேரிஸ் ஆர்தோடக்ஸ் சிரியன் கத்தீட்ரல் தேவாலயங்கள் அறியப்படுகின்றன.
அடூர் நகரில் அமைந்துள்ள மூலம் மார்கெட் கேரளாவின் பழமையான அங்காடிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த மார்கெட்டுக்கு நீங்கள் வரும் போது இதுவரை கண்டிராத புது வித ஷாப்பிங் அனுபவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.