உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த புராதன நகரத்தில் தாஜ்மஹால் மட்டுமல்லாது இன்னும் இரண்டு யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய ஸ்தலங்களும் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகிய இரண்டுமாகும்.
11ம் நூற்றாண்டிலிருந்தே ஆக்ரா நகரம் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த புராதன நகரம் தனது நெடிய வரலாற்றில் பல ராஜவம்சங்களின் ஆட்சிக்குள் மாறி மாறி இருந்து வந்திருக்கிறது. எனவே ஒரு கலவையான கலாச்சாரம் இந்நகரத்தின் பாரம்பரியமாக வேரூன்றியிருக்கிறது.
வரலாற்றுப்பின்னணி
1526ம் ஆண்டுமுதல் முகலாயர் ஆட்சியின் தலைநகரமாக விளங்கியபோது ஆக்ரா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக திகழ்ந்திருக்கிறது. முதன்முதலாக பாபர் இந்த நகரை தனது தலைநகரமாக ஆக்கிக்கொண்டார்.
கட்டிடக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களான முகலாயர்கள் இந்நகரில் பல்வேறு நிர்மாணங்களையும், சின்னங்களையும் உருவாக்கினர். ஒவ்வொரு மன்னரும் அவருக்கு முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டவற்றை விஞ்சும்படியான கம்பீர கட்டிடங்களை எழுப்பினர்.
அவற்றில் தலையாயதுதான் இன்று உலக அதிசயங்களில் ஒன்றாக வீற்றிருக்கும் தாஜ் மஹால் நினைவுச்சின்னம். இது முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது.
காலத்தை கடந்து வீற்றிருக்கும் காதலின் சின்னமாக இது இப்போது உலகளாவிய புகழுடன் அறியப்படுகிறது. பேரரசர் அக்பர் இங்குள்ள ஆக்ரா கோட்டையை புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல் ஃபதேபூர் சிக்ரி எனும் புதிய நகர நிர்மாணத்தையும் ஆக்ராவை ஒட்டியே அமைத்துள்ளார்.
ஆக்ராவின் சுற்றுலா அம்சங்கள்
டெல்லி, ஆக்ரா மற்றும் ஜய்பூரை உள்ளடக்கிய தங்க முக்கோணத்தில் இந்த ஆக்ரா அங்கம் வகிக்கிறது. டெல்லிக்கு அருகிலேயே இருப்பதால் டெல்லிக்கு விஜயம் செய்பவர்கள் ஒரு நாள் விரைவுச்சுற்றுலாப்பயணமாக இந்த ஆக்ரா நகரத்துக்கு வந்து செல்கின்றனர்.
இருப்பினும் தாஜ் மஹாலோடு ஆக்ராவின் இதர முக்கியமான அம்சங்களையும் தரிசிக்க நினைக்கும் பயணிகளுக்கான தங்கும் வசதிகள் இங்கு நிறையவே உள்ளன. தனிச்சுற்றுலாவாக செல்வதற்கு ஆக்ராவிற்கு அருகிலேயே ஃபதேபூர் சிக்ரி மற்றும் மதுரா போன்ற இடங்கள் உள்ளன.
சந்தடி நிறைந்த ஆக்ரா மார்க்கெட் பகுதியில் நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள் ஏராளம் உள்ளன. உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் பல்வித ஞாபகார்த்த பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கின்றன.
இங்கு ரிக்ஷாக்காரர்கள், புரோக்கர்கள் மற்றும் அங்கீகாரமற்ற வழிகாட்டிகள் போன்றோரிடம் பண விஷயத்தில் இங்கு எச்சரிக்கையாக நடந்து கொள்வது மிக அவசியம்.
ஆக்ரா மற்றும் அதை சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்கள்
ஆக்ராவில் வீற்றிருக்கும் எல்லா கட்டிடங்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் யாவுமே இந்நகரத்தின் தனித்தன்மையான கவர்ச்சி அம்சங்களாகும். தாஜ் மஹாலுக்கு அடுத்ததாக பார்க்க வேண்டிய அம்சங்களில் ஆக்ரா கோட்டை முன்னணியில் உள்ளது.
இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அக்பரின் கல்லறை மாளிகையும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். சினி கா ரௌஜா, திவான் இ ஆம், திவான் இ காஸ் ஆகிய கட்டமைப்புகள் முகலாயர் காலத்து மேன்மையை பிரதிபலிக்கின்றன.
இவை தவிர இத்மத் உத் தௌலா கல்லறை, மரியம் ஜமானி கல்லறை, ஜஸ்வந்த் கி சாத்ரி, சௌஸத் கம்பா மற்றும் தாஜ் மியூசியம் போன்றவையும் ஆக்ராவில் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.
எல்லா இந்திய நகரங்களைப்போன்ற ஆக்ராவும் மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கிறது. ஜமா மஸ்ஜித், பாகேஷ்வர் நாத் கோயில் ஆகியவை இங்கு வேறுபாடுகள் ஏதுமின்றி காலத்தே நிலைத்து வந்திருக்கின்றன.
இந்திய நகரங்களின் பொதுக்குணங்களான இரைச்சல், சந்தடி மற்றும் பல்வேறு மணங்கள் போன்றவை இங்கும் நிறைந்திருக்கின்றன. இருப்பினும் சோயாமி பாக் மற்றும் மெஹ்தாப் பாக் போன்ற அமைதியான தோட்டப்பூங்காக்களும் இந்த நகரத்தின் அங்கமாக அழகூட்டுகின்றன.
இந்த பூங்காக்களிலிருந்து சூரிய உதயம் அஸ்தமனம் போன்றவற்றை தரிசிக்கும் அனுபவம் புத்துணர்வூட்டுவதாயிருக்கும். தாஜ் மஹால் பற்றி சொல்லவே வேண்டியதில்லை அது சந்தடியிலிருந்து வெகு தூரம் விலகி அமைந்திருக்கிறது.
சுற்றுலா ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்கள் மட்டுமல்லாது ஆக்ரா நகரம் பறவைகளையும் வெகுவாக கவர்ந்திழுக்கிறது. கீதம் ஏரி மற்றும் சுர் சரோவர் பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களில் பல்வேறு புகலிடப்பறவைகளை பார்த்து ரசிக்கலாம்.
கரண்டிவாயன் எனப்படும் கொக்கு, சைபீரிய கொக்கு, சாருஸ் கொக்கு, பிராம்மினி வாத்துகள், தட்டை அலகு வாத்துககள் போன்ற வித்தியாசமான பறவையினங்களை இங்கு பார்த்து ரசிக்கலாம்.
பயணவசதிகள் மற்றும் சுற்றுலாவுக்கேற்ற காலம்
ஆக்ராவுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளுக்கு எந்த குறைவுமில்லை. விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக மிக சுலபமாக ஆக்ராவை வந்தடையலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட மாதங்கள் ஆக்ராவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏற்றவையாக உள்ளன.