மஹாராஷ்டிரா மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் அஹமத்நகர் எனும் இந்த நகரம் அமைந்துள்ளது. சினா ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அஹ்மத்நகர் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பெரிய மாவட்டமாகும்.
அஹமத்நகர் நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களிலிருந்து சமதூரத்தில் உள்ளது. இதற்கு வடதிசையில் ஔரங்காபாத் மற்றும் நாசிக் நகரங்கள் அமைந்துள்ளன. தென்திசையில் புனே நகரம் மற்றும் சோலாபூர் மாவட்டம் அமைந்துள்ளன. இதுதவிர கிழக்கில் பீட் நகரம் மற்றும் ஓஸ்மானாபாத் மாவட்டவும் மேற்கில் தானே பகுதியும் அஹமத்நகரை சுற்றி அமைந்துள்ளன.
வரலாற்றுப்பின்னணி
அஹமத்நகரின் வரலாற்றுப்பின்னணி என்று பார்த்தால் இது 1490ம் வருடத்திலிருந்து துவங்கி 500 ஆண்டு கால வரலாற்றுத் தடத்தினை பெற்றுள்ளது. அஹ்மத் நிஜாம் ஷா மன்னரால் இது 1494ல் ஆண்டு ஒரு நகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அவரின் நினைவாகவே இது அஹமத்நகர் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அஹ்மத் நிஜாம் ஷாவால் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம் நிஜாம் ஷாஹி வம்சத்தினரின் ஆளுகைக்குள் இருந்து பின்னர் முகலாய மன்னர் ஷா ஜஹான் மன்னரால் 1636ம் ஆண்டு கைப்பற்றப்படும் வரை தன் துவக்க வரலாற்றைக்கொண்டுள்ளது.
அதன் பின்னர் இது பேஷ்வாக்கள் மற்றும் மராத்தா வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் இருந்துவிட்டு பின்னர் உத்தேசமாக1759ம் ஆண்டு வாக்கில் தௌலத் ராவ் சிந்தியா எனும் மராத்தா தளபதியின் பொறுப்பில் வந்தது.
கடைசியில் வெல்லஸ்லி பிரபு தலைமையிலான ஆங்கிலேய ஆட்சியின் போது 1817 பூனா ஒப்பந்தத்தின்படி ஆங்கிலேயர் வசம் வந்தடைந்தது. முகலாய அரச வம்சத்தில் கடைசியாக பெயர் சொல்லும்படியான பேரரசராக விளங்கிய ஔரங்கசீப் தன் இறுதி ஆண்டுகளை இங்கு கழித்துள்ளார். அவரின் ஆட்சியில் இந்தப்பகுதி இருந்ததை குறிப்பிடும் விதமாக இங்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.
அஹமத்நகரின் சுற்றுலா அம்சங்கள்
இந்த நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இங்குள்ள அஹமத்நகர் கோட்டையாகும். தௌலாபாத் கோட்டையை அஹ்மத் நிஜாம் ஷா வெற்றிகரமாக கைப்பற்றியதை அடையாளப்படுத்தும் விதத்தில் இந்த கோட்டை உள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த பெருமையையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது இங்கு ஜஹவர்லால் போன்ற முக்கிய தலைவர்கள் இந்த கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இது தவிர சலாபத் கான் சமாதி, ரௌஸா பாக் மற்றும் கோட் பாஹா நிஜாம் போன்ற இடங்களும் அஹமத்நகரில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
அஹமத்நகர் ஒரு ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. மொஹதா தேவி கோயில் , சித்தேஸ்வரர் கோயில், விஷால் கணபதி கோயில் மற்றும் யோகி தியானேஷ்வர் கோயில் போன்றவை இங்குள்ள ஆன்மீக திருத்தலங்களாகும்.
அருகிலுள்ள ஷானி ஷிங்கானாபூர் கிராமமும் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும். இக்கிராமத்திற்கு அருகில் ஆன்மீக குரு சாய்பாபா வசித்த இடமான ஷிர்டி சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளது.
கட்டிடக்கலையில் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு பிடிக்கும் விதத்தில் இங்கு வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையம் உள்ளது. இவை தவிர ஒரு டாங்க் (ராணுவ கவச பீரங்கி வாகனம்) மியுசியமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக இங்கு அமைந்துள்ளது.
இங்கு உலக வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய போர்களில் பயன்படுத்தப்பட்ட பலவகை டாங்க்’குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இயற்கை ரசிகர்களுக்கு ஏற்ற இடங்களாக முல்லா அணை மற்றும் பந்தர்தாரா அணை போன்றவையும் இங்கு உள்ளன. எழில் நிறைந்து காணப்படும் இந்த சிற்றுலா ஸ்தலங்கள் நமக்கு உவகை தரும் பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகின்றன. குடும்பத்தோடு அல்லது தனிமையில் அமைதியாக இயற்கையை ரசிக்க உகந்த இடமாக இந்த இரண்டு அணைப்பகுதிகளும் உள்ளன.
சில முக்கிய தகவல்கள்
அஹமத்நகரின் பருவநிலை வருடத்தில் பெரும்பாலும் இனிமையான மிதமான சீதோஷ்ண நிலையை கொண்டதாக காணப்படுகிறது. கோடைக்காலத்தில் இது அதிக உஷ்ணத்தையும் வறண்ட சூழலையும் கொண்டுள்ளது.
ஆகவே இது கோடைக்காலத்தின் போது விஜயம் செய்யக்கூடிய பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோடைக்காலத்தில் விடுதி அறையிலேயே ஓய்வெடுத்துக்கொள்ள தூண்டும் அளவுக்கு இங்கு வெப்பம் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதில்லை என்பதால் அச்சமயத்தில் இங்கு விஜயம் செய்யலாம்.
இருப்பினும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் குளிர்காலமே இங்கு பயணிகளை வரவேற்கும் குளுமையான சூழலைக்கொண்டுள்ளது.
அஹமத்நகர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் நல்ல முறையில் அமைந்த சாலைப்போக்குவரத்து வசதிகள், ரயில் போக்குவரத்து, விமான சேவைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் முக்கிய பெரு நகரங்களுக்கு அருகில் உள்ளதால் பயணம் அவ்வளவு அலுப்பூட்டும்படியாகவும் இருப்பதில்லை. விமானப்போக்குவரத்துக்கு வசதியாக இதன் அருகில் உள்ள விமான நிலையமாக புனே உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அஹமத்நகர் ரயில் நிலையத்திலிருந்து தினமும் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகளும் அதிகம் உள்ளன.
மும்பை அல்லது புனேயிலிருந்து 4 – 5 மணி நேர பயண தூரத்தை கடப்பதற்கு பலவிதமான போக்குவரத்து சேவைகள் குறைந்த கட்டணம் மற்றும் நிறைந்த வசதியுடன் கிடைக்கின்றன. 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்று பின்னணியை அஹமத்நகர் கொண்டுள்ளது. சிதிலமடைந்து காணப்படும் நினைவுச்சின்னங்கள், புராதனமான கோட்டைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகள் போன்றவற்றை இந்த அஹமத்நகர் ஒரு பயணிக்காக காட்சிக்கு வைக்கின்றது.
நீங்கள் புனே அல்லது ஔரங்காபாத் நகரங்களுக்கு விஜயம் செய்ய நேர்ந்தால் இந்த அஹமத்நகரும் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருப்பது அவசியம். வரலாற்று பின்னணி மற்றும் இயற்கை அம்சங்கள் கொண்ட இடங்களை பார்ப்பதில் ஆர்வம் உடைய பயணிக்கு இது மிகவும் ஏற்ற நகரமாகும்.
தன் உன்னதமான வரலாற்றுப்பின்னணியையும் இயற்கை வனப்பையும் பகிர்ந்துகொள்ள இந்த நகரம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ஒரு அற்புத நகரை தரிசிக்கும் வாய்ப்பை தயவு செய்து தவற விடாதீர்கள்.