ஏஹோல் பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை.சாளுக்கிய ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட பல பாறைக்குடைவு கோயில்களையும் சிற்பங்களையும் இந்த ஏஹோல் நகரம் கொண்டுள்ளது. சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் மஹோன்னத கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை நுட்பங்களின் வாழும் சாட்சியமாக இந்த ஏஹோல் நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தில் நீடித்து நிற்கின்றன.
பெயருக்கு பின்னால் உள்ள புராணிக ஐதீகம்
சாளுக்கிய ராஜவம்சத்தின் முதல் தலைநகரம் இந்த ஏஹோல் ஆகும். மலப்பிரபா ஆற்றின் கரையில் உள்ள இந்த நகரம் பற்றி பலவிதமான புராணக்கதைகள் உலவுகின்றன.
அவற்றில் ஒரு கதையின்படி பரசுராமர் என்ற பிராம்மண போர்வீரர் பல முக்கிய க்ஷத்திரிய வீரர்களை கொன்றுவிட்டு திரும்பும்போது இந்த ஆற்றில் தன் கோடரியைக் கழுவியதாகவும் அப்போது அந்த ஆறு முழுதுமே ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே அந்த ஆறு ஓடிய இந்த பகுதிக்கு ‘ஏஹோல்’ என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் “ஆ! எப்பேர்ப்பட்ட ஆறு “ என்பதாகும்.
ஏஹோல் என்ன விஷயங்களுக்காக புகழ் பெற்றுள்ளது.
ஏஹோல் கிராமத்தில் 125 சாளுக்கிய கோயில்கள் உள்ளன. அவற்றில் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாட் கான் கோயில் மிகப்பழமையானதாகும்.இதர பழமையான கோயில்களாக கௌடா கோயில், சூரியநாரயணாகோயில் மற்றும் துர்க்கா கோயில் போன்றவை காணப்படுகின்றன.
ராவணபாடி எனும் குகைக்கோயில் இருப்பதில் பழமையான குடைவறைக் குகைக்கோயில் ஆகும். மேலும் ஏஹோலில் அக்காலத்திய வரலாற்றை கூறும் பழமையான கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
ஏஹோல் சுற்றுலா ஸ்தலம் பெங்களூரிலிருந்து 483 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை இணைப்பையும் பெற்றுள்ளது. இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையமாக பாதாமி அமைந்துள்ளது.